காவலர்களுக்காக புது வேடம் அணிந்த சுஸுகி ஜிக்ஸர் 250 எஸ்எஃப்.. சிறப்பு தகவல் உள்ளே..!
சுஸுகி நிறுவனத்தின் புத்தம் புதிய அறிமுகமான ஜிக்ஸெர் 250 எஸ்எஃப் மாடல் பைக்குகள் போலீஸாருக்காக புது வேடம் ஒன்றை அணிந்துள்ளன. இதுகுறித்த கூடுதல் விவரத்தை இந்த பதிவில் காணலாம்.

ஜப்பானை மையமாகக் கொண்டு இயங்கும் சுஸுகி நிறுவனம், புத்தம் புதிய ஸ்டைலிலான ஜிக்ஸெர் எஸ்எஃப் 250 மாடலை கடந்த மே மாதம் 20 தேதி இந்தியாவில் அறிமுகம் செய்தது. மேலும், அன்றைய தினமே அந்த பைக்கை விற்பனைக்கும் அறிவித்தது.
கூடுதல் கவர்ச்சியான வடிவமைப்பில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த இந்த பைக்கிற்கு இந்தியாவில் தற்போது நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது.

முன்னதாக விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்து வந்த இந்நிறுவனத்திற்கு ஜிக்ஸெரின் அப்டேட் செய்யப்பட்ட மாடல்கள் தற்போது நல்ல சந்தையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளன.
ஆகையால், நாட்டில் அதிகம் விற்பனையாகும் இருசக்கர வாகனங்களின் பட்டியலில் சுஸுகி ஜிக்ஸெர் வரிசையில் உள்ள பைக்குகள் நல்ல முன்னேற்றத்தை அடைந்து வருகின்றன.

இந்நிலையில், சுஸுகி நிறுவனம் சிஎஸ்ஆர் செயல்பாட்டின் அடிப்படையில் ஹரியானா மாநிலத்தில் உள்ள குர்கான் பகுதி போக்குவரத்து போலீஸாரின் பயன்பாட்டிற்காக புத்தம் புதிய பத்து ஜிக்ஸெர் 250 எஸ்எஃப் பைக்குகளை வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மோட்டார்சைக்கிள்கள் போலீஸாரின் போக்குவரத்து பணியின்போது உபயோகப்படுத்தும் வகையில் வடிவமைத்து வழங்கப்பட்டுள்ளன.

இந்த இருசக்கர வாகனங்களுக்கான சாவிகள் அனைத்தையும் குருகிராம் போலீஸ் கமிஷனர் முன்னிலையில் காவலர்கள் அனைவருக்கும் சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் வழங்கினர்.

சுஸுகி நிறுவனம் இதுபோன்று பைக்குகளை போலீஸாரின் பணிகளுக்கு வழங்குவது முதல் முறையல்ல. கடந்த 2018ம் ஆண்டிலும் இதுபோல சுஸுகி ஜிக்ஸெர் 155 பைக்குகள் வழங்கப்பட்டன. அவை, சட்ட ஒழுங்கு போலீஸாரின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டிருந்தது.

அவ்வாறு, ஒட்டுமொத்தமாக 60 இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இதுமட்டுமின்றி, சாலை பாதுகாப்புகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலை கவசங்களும் அதே ஆண்டில் வழங்கப்பட்டுள்ளன.

தற்போது போலீஸாரின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ள பைக்குகள் அனைத்தும், அவசர காலங்களில் அவர்களுக்கு பயன்படும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில், நீளமான வின்ட் ஷீல்டுகள், பக்கவாட்டு பகுதியில் உபகரணங்களை கையாளுகின்ற வகையிலான பெட்டி, போலீஸ் என பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இத்துடன், காவலர்கள் வாகனங்களில் காணப்படும் சிவப்பு மற்றும் நீல நிறங்கள் அடங்கிய மின் விளக்குகளும் பைக்கின் முன் மற்றும் பின்பக்கங்களில் பொருத்தப்பட்டுள்ளன.

வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கும் இந்த பைக்குகள் போலீஸாரின் பயன்பாட்டிற்காக மேற்கூறியது போன்ற பல்வேறு சிறப்பம்சங்களைப் பெற்று தனித்துவமான லுக்கைப் பெற்றிருக்கின்றன.
ஆனால், எஞ்ஜின் மற்றும் செயல்பாட்டில் எந்தவிதமான மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. ஆகையால், தற்போது விற்பனையில் இருக்கும் ஜிக்ஸெர் 250 எஸ்எஃப் பைக்குகள் எத்தகைய திறனைப் பெற்றிருக்கின்றதோ, அதே திறனைதான் போலீஸாருக்கு வழங்கப்பட்டுள்ள இந்த பைக்குகளும் வெளிப்படுத்தும்.

சுஸுகி ஜிக்ஸெர் 250 பைக்கில் அதீத சக்தியை வெளிப்படுத்துகின்ற வகையில் 249சிசி திறனை வெளிப்படுத்தும் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின், ஆயில் கூல்ட் சிங்கிள் சிலிண்டர் அமைப்பைக் கொண்டதாகும். மேலும், இது அதிகபட்சமாக 9,000 ஆர்பிஎம்மில் 26.5 பிஎச்பி பவரையும், 7,500 ஆர்பிஎம்மில் 22.6 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இதில், 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








