215 கிமீ வேகத்தில் பறந்த பைக்... திடீரென குறுக்கே வந்த முதியவர்... ஹார்ட்பீட்டை எகிற வைத்த வீடியோ...
பைக் 215 கிமீ வேகத்தில் சென்று கொண்டிருக்கும்போது முதியவர் ஒருவர் திடீரென குறுக்கே வந்தார். பரபரப்பான இந்த சம்பவத்தின் வீடியோ வெளியாகியுள்ளது.

இந்திய சாலைகள் வேகமாக பயணிப்பதற்கு ஏற்றவை அல்ல. உங்கள் வாகனத்தின் டாப் ஸ்பீடை இந்தியாவின் பொது சாலைகளில் சோதித்து பார்க்கவே கூடாது. அதிவேகம் உயிரை கொல்லும் என்பதை நிரூபிக்கும் வகையில் இணையத்தில் ஏராளமான வீடியோக்கள் உலா வந்து கொண்டுள்ளன. ஆனால் பெரும்பாலானோர் இதையெல்லாம் பொருட்படுத்துவதே கிடையாது.

குறிப்பாக இளம் பைக் ரைடர்கள் பொது சாலைகளில் அதிவேகத்தில் பைக்கை ஓட்டுகின்றனர். இந்த சூழலில் இந்திய சாலையில் பைக்கில் அதிவேகத்தில் பயணம் செய்யும் ஒரு ரைடரின் பதைபதைக்க வைக்கும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. ProShifter Agnik என்ற யூ-டியூப் சேனலில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

இதில், ரைடர் ஒருவர் டிரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் மோட்டார்சைக்கிளை ஸ்டார்ட் செய்து நெடுஞ்சாலை ஒன்றில் அதிவேகத்தில் பயணிக்க தொடங்குகிறார். அப்போது சாலை ஓரளவிற்கு காலியாகதான் இருந்தது. எனினும் அவர் பயணம் செய்த வேகம் அதிர்ச்சியை அளிக்கிறது. இந்த வீடியோவின் முதல் பகுதி அந்த ரைடர் மணிக்கு கிட்டத்தட்ட 200 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிப்பதை காட்டுகிறது.

அதே சமயம் இந்த வீடியோவின் இரண்டாவது பகுதியி இந்திய சாலைகளில் அதிவேகத்தில் பயணிப்பதில் இருக்கும் ஆபத்துக்கள், இடையூறுகளை காட்டுகிறது. ஒரு கட்டத்தில் அந்த ரைடர் மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தை கடந்து விட்டார். அந்த பைக் மணிக்கு 215 கிலோ மீட்டர்கள் வேகத்தில் பயணித்து கொண்டிருந்தபோது ஒரு நபர் சைக்கிளில் திடீரென பைக்கிற்கு முன்னே வந்தார்.

பார்ப்பதற்கு வயதான நபர் போல் தோற்றமளித்த அவர் சைக்கிளை தள்ளி கொண்டு சாலையை கடக்க முயற்சி செய்து கொண்டிருந்தார். சைக்கிளை தள்ளி கொண்டு ஒருவர் குறுக்கே வருவதை கண்டதும், பைக் ரைடர் உடனடியாக பிரேக்கை மிதித்தார். இதுபோன்ற சூழ்நிலைகளில் ஏபிஎஸ் இல்லாத பைக்குகள் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தி விடும்.

ஆனால் டிரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் பைக்கில் ஏபிஎஸ் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது. எனவே பிரேக்கிங் ஸ்மூத் ஆக நடைபெற்றது. அந்த ரைடர் பிரேக்கை பிடித்த உடனேயே மணிக்கு 215 கிலோ மீட்டர் வேகத்தில் இருந்து மணிக்கு 175 கிலோ மீட்டர் வேகத்திற்கு குறைந்து விட்டது. கண்ணிமைக்கும் நேரத்தில் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகம் குறைந்தது உண்மையில் நல்ல விஷயம்தான்.

ஏபிஎஸ் இருந்ததன் காரணமாக அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இல்லாவிட்டால் என்ன நடந்திருக்கும் என்பதை கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. ஏனெனில் பைக் அந்த அளவிற்கு அதிவேகத்தில் பயணித்து கொண்டிருந்தது. பதைபதைக்க வைக்கும் அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
ஒரு பைக்கிற்கு ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் எவ்வளவு முக்கியமானது என்பதை இச்சம்பவம் உணர்த்துகிறது. இந்திய சட்ட திட்டங்களும் பைக்குகளில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமை கட்டாயமாக்கியுள்ளன. அதாவது 125 சிசிக்கும் அதிகமான இன்ஜின் திறன் கொண்ட அனைத்து பைக்குகளிலும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயமாக இடம்பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அதற்காக ஏபிஎஸ் இருக்கிறது என்பதற்காக இவ்வளவு அதிவேகத்தில் எல்லா பயணிக்க கூடாது. இந்திய சாலைகளை ஒருவரால் கணிக்க முடியாது. இங்கு எப்போது வேண்டுமானலும், எது வேண்டுமானாலும் நடக்கலாம். சாலையை கடக்கும் பாதசாரிகள் இங்கு திடீரென வாகனத்தின் குறுக்கே வருவார்கள். கால்நடைகளும் கூட திடீர் திடீரென வாகனத்தின் குறுக்கே வரும்.

எனவே இந்திய சாலைகளில் வாகனம் ஓட்டும்போது ஸ்பீடு லிமிட்டை பின்பற்றுவது நல்லது. இல்லாவிட்டால் கடுமையான பின் விளைவுகளை சந்திக்க வேண்டியது வரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்திய சாலைகளில் அதிவேகத்தில் வாகனம் ஓட்டுவது எவ்வளவு அபாயகரமானது என்பதற்கு இந்த வீடியோ ஒரு உதாரணம் மட்டுமே.


Click it and Unblock the Notifications








