குறைவான செலவில் இயக்கலாம்... இந்தியாவின் முதல் எத்தனால் பைக் அறிமுகம்... விலை என்ன தெரியுமா?
இந்தியாவின் முதல் எத்தனால் பைக்கை டிவிஎஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களை இந்திய மார்க்கெட் படிப்படியாக பெற்று வருகிறது. இந்த வரிசையில் இந்தியாவின் முதல் எத்தனால் பைக் இன்று (ஜூலை 12) மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி எஃப்ஐ இ100 (TVS Apache RTR 200 4V FI E100) பைக்தான் இந்த பெருமைக்குரிய மாடல்.

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரிதான், இந்தியாவின் முதல் எத்தனால் பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளார் என்பது கூடுதல் சிறப்பம்சம். அதிக எத்தனாலை உற்பத்தி செய்யும்படி கரும்பு ஆலைகளுக்கு நிதின் கட்கரி தொடர்ந்து ஊக்கம் கொடுத்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் கச்சா எண்ணெய்க்காக வெளிநாடுகளை சார்ந்திருக்கும் நிலை மாற வேண்டுமென்றால், மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்கள் இந்தியாவில் மிக அதிகளவில் பயன்பாட்டிற்கு வர வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருவதோடு, அதற்கான நடவடிக்கைகளையும் நிதின் கட்கரி மிக தீவிரமாக எடுத்து வருகிறார்.

இந்தியாவின் முதல் எத்தனால் பைக்கை பற்றி தெரிந்து கொள்ளும் முன்பாக, எத்தனாலை பற்றி தெரிந்து கொள்வது அவசியம். பெட்ரோல், டீசலை போல் எத்தனால் கச்சா எண்ணெய்யில் இருந்து உற்பத்தி செய்யப்படுவது அல்ல. வாகனங்களில் எத்தனாலை எரிபொருளாக பயன்படுத்தினால், சுற்றுச்சூழல் மாசுபாடு கணிசமாக குறையும்.

பெட்ரோல், டீசலை காட்டிலும், எத்தனால் சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்தது. அத்துடன் பெட்ரோல், டீசலை போல் இது விலை உயர்ந்ததும் கிடையாது. எனவே வாகனங்களை இயக்குவதற்கான செலவும் வெகுவாக குறையும். தற்போதைய நிலையில் இதுபோன்ற மாற்று எரிபொருட்கள்தான் உலகிற்கு தேவை. குறிப்பாக இந்தியாவிற்கு.

சரி, இனி இந்தியாவின் முதல் எத்தனால் பைக்கை பற்றி தெரிந்து கொள்வோம். டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி எத்தனால் பைக்கின் விலை 1.2 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம், டெல்லி). இந்த பைக் கடந்த 2018 ஆட்டோ எக்ஸ்போவில் முதல் முறையாக காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. தற்போது இறுதியாக இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இந்த பைக் படிப்படியாகதான் இந்தியா முழுவதும் விற்பனைக்கு கொண்டு வரப்படும். தற்போதைய நிலையில் மஹாராஷ்டிரா, உத்தரபிரதேசம் மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மட்டுமே கிடைக்கும். இந்த பைக்கின் E100 200 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் அதிகபட்சமாக 8,500 ஆர்பிஎம்மில் 20.7 பிஎச்பி பவரையும், 7,000 ஆர்பிஎம்மில் 18.1 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

6 ஸ்பீடு கியர் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 129 கிலோ மீட்டர்கள் வரையிலான வேகத்தில் பயணிக்கும் திறன் இதற்கு உண்டு. இந்த பைக் எலெக்ட்ரானிக் ப்யூயல் இன்ஜெக்ஸன் சிஸ்டம் உடன் விற்பனைக்கு வந்துள்ளது. அத்துடன் எத்தனால் எரிபொருளை எரிப்பதற்காக புதிய Twin-Spray-Twin-Port EFI தொழில்நுட்பமும் இடம்பெற்றுள்ளது.

ஆனால் எத்தனால் பைக்கின் டிசைன் கிட்டத்தட்ட அதன் பெட்ரோல் உடன்பிறப்பை போலவேதான் உள்ளது. என்றாலும் பசுமையை பறைசாற்றும் விதத்திலும், மற்ற மாடல்களிடம் இருந்து வித்தியாசப்படுத்தி காட்டும் வகையிலும், பச்சை நிற பாடி டீக்கெல்கள் உடன் எத்தனால் வேரியண்ட் விற்பனைக்கு வந்துள்ளது. அத்துடன் எத்தனால் என்ற வார்த்தையும் குறிப்பிடப்பட்டுள்ளது. வருங்காலங்களில் டிவிஎஸ் நிறுவனம் இதே தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்கூட்டர்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








