வெளிநாட்டு டயர்களுக்கு டாடா சொல்லுங்க... உள்நாட்டிலேயே சர்வதேச தரத்திலான டிவிஎஸ் டயர் அறிமுகம்!!!
டிவிஎஸ் நிறுவனம் சர்வதேச தரத்திலான டயர்களை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

தமிழகத்தை மையமாகக் கொண்டு இயங்கும் டிவிஎஸ் நிறுவனம், வாகன உற்பத்தி மட்டுமின்றி டிவிஎஸ் ஸ்ரீசக்ரா என்ற பிராண்ட் பெயரில் இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கான டயர்களை உற்பத்தி செய்து வருகின்றது.
இந்நிலையில், டிவிஎஸ் யூரோ கிரிப் என்ற பெயரில் அந்நிறுவனம் புதிய டயர்களை நேற்று (செவ்வாய்கிழமை) சென்னையில் அறிமுகம் செய்தது.

அந்தவகையில், டிவிஎஸ் யூரோகிரிப் அம்ப்ரெல்லாவின்கீழ், 19 வகையிலான பிரிமியம் தரத்திலான டயர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த டயர்களில் புதிய வசதியாக பூஜ்ஜியம் டிகிரி ஸ்டீல் பெல்டட் முறை வழங்கப்பட்டுள்ளது. இது, அதிகவேகத்தின்போது சிறப்பான கிரிப்பை வழங்க உதவும்.

அதேசமயம், மணிக்கு 270 கிமீ வேகத்தில் சென்றால்கூட இந்த டயர் சிறப்பான நிலைத் தன்மை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆகையால், இந்த யூரோ கிரிப் டயர்களின் அறிமுகம் இந்திய வாகனசந்தையில் ஓர் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், இதன் வரவு டிவிஎஸ் நிறுவனம் வைத்துள்ள வாகன தயாரிப்பு நிறுவனங்களுடனான கூட்டமைப்பு வலுப்படுத்த உதவும் என அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்த டயர்களின் அறிமுகத்தின்போது, டிவிஎஸ் ஸ்ரீசக்ரா நிறுவனத்தின் இயக்குநர் பி. விஜயராகவன் மற்றும் தலைவர் பி. ஸ்ரீநிவாசவரதன் ஆகியோர் இருந்தனர்.
தொடர்ந்து, புதிய யூரோகிரிப் டயர் குறித்து இயக்குநர் பி. விஜயராகவன் கூறுகையில், "டிவிஎஸ் நிறுவனம் இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு மட்டுமே டயர் தயாரித்து வருகின்றது. ஒவ்வொரு மாதமும் 28 லட்சம் டயர்களும், ஆண்டிற்கு 3.4 கோடி டயர்களும் உற்பத்திச் செய்யப்பட்டு வருகின்றன" என்றார்.

மேலும் பேசிய அவர், "இந்தியாவில் உள்ள அனைத்து வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கும் டயர்கள் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள யூரோகிரிப் டயர் இளைய தலைமுறையினர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும். ஏனென்றால், இந்த டயர்கள் சர்வதேச தரத்திற்கேற்ப தயாரிக்கப்பட்டுள்ளன" என தெரிவித்தார்.

தொடர்ந்து, "சர்வதேச அளவில், இத்தாலி நாட்டில் உள்ள மிலானில் தொழில்நுட்ப மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆகையால், மதுரையில் செயல்பட்டு வரும் டயர் உற்பத்தி ஆலையில், இத்தாலியின் தொழில் நுட்ப உதவியுடன் புதிய டயர்கள் உற்பத்திச் செய்யப்பட உள்ளது" என அவர் கூறினார்.

உலக அளவில் அதிக இருசக்கர வாகனங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. 2018-இல் மட்டும் இந்தியாவில் 3.3 கோடி இருசக்கர வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டன. அதேசமயம், இந்தியாவில் 18-30 வயது கொண்டவர்கள் மொத்தம் 8 கோடி பேர் உள்ளனர்.

ஆகையால், இந்திய இருசக்கர வாகன சந்தைக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. மேலும், இது பின்வரும் காலங்களில் வளர்ச்சியடைய வாய்ப்பு உள்ளது என்றும் விஜயராகவன் கூறினார்.


Click it and Unblock the Notifications








