வாவ்... மீண்டும் இந்தியாவில் அறிமுகமாகிறது யெஸ்டி மோட்டார்சைக்கிள்!
இந்தியாவில் மிகபபெரிய ரசிக பட்டாளத்தை பெற்றிருக்கும் பாரம்பரிய மோட்டார்சைக்கிள் பிராண்டுகளாக ஜாவா, யெஸ்டி ஆகியவை பெயர்பெற்றிருக்கின்றன. இதில், ஜாவா பிராண்டில் புதிய மோட்டார்சைக்கிள் மாடல்களை மஹிந்திரா நிறுவனத்தின் அங்கமாக செயல்படும் கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது.

ஜாவா மோட்டார்சைக்கிள்கள் மாடல்களுக்கு எகிடுதகிடான வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால், உற்பத்தி பிரச்னை காரணமாக, டெலிவிரி கொடுக்கும் பணிகள் மந்த கதியில் நடந்து வருகின்றன. இந்த சூழலில், ஜாவாவை தொடர்ந்து யெஸ்டி மோட்டார்சைக்கிள் மாடல்களையும் இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக, தற்போது யெஸ்டி மோட்டார்சைக்கிள்களுக்கான பிரத்யேக இணையதளம் துவங்கப்பட்டு இருக்கிறது. மேலும், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பிரத்யேக பக்கங்கள் துவங்கப்பட்டுள்ளன.

யெஸ்டி இணையதள பக்கத்தில் அந்நிறுவனத்தின் பிரபலமான பழைய மாடல்களின் விபரங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், யெஸ்டி பைக்குகள் குறித்து வாடிக்கையாளர்கள் தங்களது நினைவுகளை பகிர்ந்துகொள்வதற்கான விசேஷ இணையப்பக்கமும் அதில் இடம்பெற்றுள்ளது.

யெஸ்டி மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. எனினும், அடுத்த சில மாதங்களில் நடைபெற இருக்கும் 2020 ஆட்டோ எக்ஸ்போவில், யெஸ்டி பைக்குகள் அறிமுகம் செய்யப்படும் என்று உறுதியாக நம்பலாம்.

அதாவது, ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்வதன் மூலமாக மிக சீக்கிரமாக யெஸ்டி மாடல்களை பிரபலமடையச் செய்யலாம் என்பது கணக்காக இருக்கும். யெஸ்டி பைக்குகள் மீண்டும் அறிமுகம் செய்யப்படும் தகவல், அந்த பைக்குகளை பொக்கிஷமாக வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை தரும் விஷயமாக அமைந்துள்ளது.

ஜாவா மோட்டார்சைக்கிள்களின் உதிரிபாகங்கள் மற்றும் எஞ்சின் தேர்வுகள் யெஸ்டி பைக்குகளிலும் பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது. எனவே, யெஸ்டி பைக்குகளை மிக சவாலான விலையில் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

1970 முதல் 90 வரையிலான காலக்கட்டங்களில் யெஸ்டி பைக்குகளுக்கு இந்தியாவில் பெரும் மதிப்பு இருந்தது. தற்போதும் இந்த பைக்குகளுக்கு யூஸ்டு பைக் மார்க்கெட்டில் அதிக விலையை தக்க வைத்து வருவதுடன், பைக் சேகரிப்பு ஆர்வலர்களிடையே அதிக வரவேற்பு இருக்கிறது.

யெஸ்டி நிறுவனம் ரோட்கிங், ஆயில் கிங், டீலக், மோனார்க், 350 மற்றும் 175 ஆகிய மாடல்களை விற்பனை செய்தது. இதில், ரோட்கிங் மாடல் வாடிக்கையாளர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. ஆனால், ஆயில் கிங் மாடலில் எழுந்த தொழில்நுட்ப பிரச்னைகள் காரணமாக, அது ஃபெயிலியர் மாடலாக கருதப்பட்டது.

பாரம்பரிய டிசைன் அம்சங்களுடன், நவீன தொழில்நுட்ப வசதிகள் மற்றும் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சினுடன் புதிய யெஸ்டி பைக்குகள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1978 முதல் 1996 வரை மைசூரில் இருந்த ஐடியல் ஜாவா ஆலையில்தான் யெஸ்டி பைக்குகள் உற்பத்தி செய்யப்பட்டன. இதில், ரோட்கிங் மாடல் மிக பிரபலமானது. இந்த ரோட்கிங் பைக் மாடலானது 1974ம் ஆண்டு மோட்டோக்ராஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்த சிஇசட் 250 பைக்கின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயில்கிங் மாடலானது 70களில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பைக்கில் பெட்ரோலுடன் தனியாக 2டி ஆயிலை கலக்கும் வகையிலான தொழில்நுட்பத்தை பெற்றிருந்தது. இதன் எரிபொருள் பம்ப்பில் தொடர்ந்து பிரச்னை எழுந்ததால், இந்த மாடல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

1996ம் ஆண்டு நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் மோனார்க் என்ற புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடலில் இரட்டை ஃப்ரேம்கள் மற்றும் பெட்ரோல் டேங்க்குகள் 350 மாடலில் இருந்தும், எஞ்சின் ரோட்கிங் மாடலிலும் இருந்தும் எடுத்து பயன்படுத்தப்பட்டன. முதல்முறையாக 18 அங்குல ரிம்கள் கொண்ட சக்கரங்களும் பயன்படுத்தப்பட்டன. ஆனால், விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லாததால் யெஸ்டி நிறுவனத்தின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.


Click it and Unblock the Notifications








