இந்தியாவில் இப்படியொரு பைக்கை ராயல் என்ஃபீல்டு களமிறக்கியதா? புத்துயிர் பெற்ற 49சிசி எக்ஸ்ப்ளோரர்...
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 49 சிசி திறன் கொண்ட மோட்டார்சைக்கிள் புத்துயிர் பெற்றிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை கீழே காணலாம்.

இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் பாரம்பரியமிக்க இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ராயல் என்பீல்டு நிறுவனமும் ஒன்று. இந்நிறுவனம், நம்முடைய அப்பா, தாத்தா ஆகியோர் காலத்தில் இருந்தே இருசக்கர வாகனங்களை விற்பனைக்கு களமிறக்கி வருகின்றது. இதற்கான சான்றாக ஒரு சில அரிய வகை ராயல் என்பீல்டு பைக்குகள் தற்போதும் இந்திய சாலையில் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

அம்மாதிரியான ஓர் அரிய வகை ராயல் என்பீல்டு பைக்தான் தற்போது மீண்டும் புத்துயிர் பெற்றிருக்கின்றது. இதுகுறித்த தகவலைதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம். 1988ம் ஆண்டுகளில் விற்பனைக்கு வந்த 49 சிசி திறனுடைய ராயல் என்பீல்டு எக்ஸ்பிளோரர் பைக்தான் தற்போது மீண்டும் உயிர்ப்பு பெற்று பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதுகுறித்த புகைப்படத்தை ஐஏபி எனும் ஆங்கில தளம் வெளியிட்டுள்ளது.

மோட்டார்சைக்கிள் ஆர்வளரான தீன தயாளன் என்பவரே இந்த அரிய இருசக்கர வாகனத்திற்கு மீண்டும் புதிய ஆன்மாவை வழங்கியிருக்கின்றார். இதற்காக அவர் ரூ. 34 ஆயிரம் வரை செலவு செய்திருப்பதாகக் கூறப்படுகின்றது. இதில், மோட்டார்சைக்கிளை வாங்கிய செலவு ரூ. 10 ஆயிரமும், இருசக்கர வாகனத்தை புதுப்பிப்பதற்காக செய்யப்பட்ட செலவு ரூ. 24 ஆயிரமுமாக உள்ளது.

இந்த குறைந்த செலவிலேயே ராயல் என்ஃபீல்டு எக்ஸ்ப்ளோரர் மிகவும் கவர்ச்சியான இருசக்கர வாகனமாக மாறியிருக்கின்றது. இந்த கவர்ச்சியான தோற்றத்திற்கு மிக முக்கிய காரணமாக இருப்பதே, புதிதாக வழங்கப்பட்டிருக்கும் நீல நிறம்தான். இந்த நிறத் தேர்வில் தற்போது சொற்பளவிலான இருசக்கர வாகனங்களே இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

ஆகையால், இந்த பைக் சாலையில் செல்லும்போது மிகவும் தனித்துவமாக தெரிவதற்கு பல்வேறு சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. இதற்கு அதன் நீளம் நிறமே முக்கிய காரணம். இதுமட்டுமின்றி மோட்டார்சைக்கிளின் பழமை மாறா தோற்றமும் பைக் பிரியர்களின் ஆவலைத் தூண்டுகின்ற வகையில் உள்ளது. ஏனெனில், புதுப்பித்தலின்போது பழைய மனம் துளியளவும் மாறாத வகையிலேயே எக்ஸ்ப்ளோரருக்கு உயிர்ப்பித்தல் நடைப் பெற்றிருக்கின்றது.

இதனால், 1988ம் ஆண்டுகளில் ராயல் என்ஃபீல்டு எக்ஸ்ப்ளோரர் எப்படி விற்பனைக்கு வந்ததோ, அதே ஸ்டைல் மற்றும் எஞ்ஜின் கூறுகளுடனே தற்போது காட்சியளிக்கின்றது. இதற்கு இருக்கை முதல் அதன் அலாய் வீல் வரை சான்றாக இருக்கின்றது. இந்த மோட்டார்சைக்கிளைப் பார்க்கும்போது இப்படியொரு மாடலை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் விற்பனைச் செய்து வந்ததா என கேள்வியெழுப்பும் வகையில் உள்ளது.

ஏனெனில், அந்தளவிற்கு மெல்லிய தேகத்திலும், மிகவும் சாதரணமான இருசக்கர வாகனமாக அது காட்சியளிக்கின்றது. ராயல் என்பீல்டு நிறுவனம் 1980ம் ஆண்டுகளிலேயே 350 சிசி முதல் 500 சிசி வரையிலான மோட்டார்சைக்கிள்களை விற்பனைக்கு அறிமுகம் செய்தது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், புத்துயிரைப் பெற்றிருக்கும் எக்ஸ்ப்ளோரர் பைக்கோ நாம் முன்னரே கூறியதைப் போல் 49 சிசி திறனை மட்டுமேக் கொண்டுள்ளது.

ஆகையால், இதன் உச்சபட்ச வேகமே மணிக்கு 60 கிமீ-ஆக உள்ளது. இது ஓர் அரிய மோட்டார் சைக்கிள் என்பதனாலயே தீன தயாளன் இதற்கு தற்போது புத்துயிரை வழங்கியிருக்கின்றார். இந்த இருசக்கர வாகனத்தின் குறிப்பிட்ட சில பாகங்கள் மட்டுமே நீக்கப்பட்டு, புதிய பாகங்களாக சேர்க்கப்பட்டுள்ளன. அதில், இருக்கை, கைப்பிடி, லக்கேஜ் கேரியர், டயர் மற்றும் மட்குவார்ட் ஆகியவை அடங்கும்.

இதுமட்டுமின்றி மோட்டார்சைக்கிளுக்கு கூடுதல் கவர்ச்சியான தோற்றம் சேர்க்கும் விதமாக, பைக்கின் நிறத்திற்கு ஏற்ப பின் பக்க சக்கரத்தின் மட்குவார்டிற்கு நிறம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன், எரிபொருள் தொட்டி மற்றும் பக்கவாட்டு பேனல்களில் மூவர்ண கிராஃபிக் ஒட்டப்பட்டிருக்கின்றது.

இத்துடன், பழைய பழுதான சஸ்பென்ஷன்கள் மறுசீர் செய்யப்பட்டு பொருத்தப்பட்டிருக்கின்றன. இதில், முன்பக்க சஸ்பென்ஷனை பாதுகாக்கும் விதமாக ரப்பர் கவசங்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன.

இது மோட்டார்சைக்கிளுக்கு பாரம்பரிய தோற்றத்தை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. இத்துடன், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பழைய சின்னத்தை நினைவு கூறும் வகையில், அதே சின்னங்கள் எரிபொருள் தொட்டி மற்றும் ஸ்பீடோ மீட்டரின் முன் பக்கத்தில் ஒட்டப்பட்டிருக்கின்றது.


Click it and Unblock the Notifications








