என்னங்க சொல்றீங்க, மீண்டும் வருகின்றனவா யெஸ்டி பைக்குகள்? கதிகலங்கும் ராயல் என்பீல்டு
3 புதிய பைக்குகளுடன் யெஸ்டி பிராண்ட்டை மீண்டும் புத்துயிர் பெற வைக்க கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் கடந்த 2018 நவம்பரில் ஜாவா பிராண்டை இந்தியாவில் மீண்டும் கொண்டுவந்து தற்போது கணிசமான விற்பனைகளை பெற்று வருகிறது. ஜாவா மற்றும் ஜாவா 42 பைக்குகள் ராயல் என்பீல்டின் விலை குறைவான மாடல்களுக்கு போட்டியாக விளங்கி வருகின்றன.

அதேசமயம் பெராக் பாப்பர் கவர்ச்சிகரமான விலையினால் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுத்து வருகிறது. ஜாவா மற்றும் ஜாவா 42 பைக்குகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்த போதிலும், தனது பணியினை கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் குறைத்து கொண்டதினால், ஜாவா பெராக் கடந்த 2019 இறுதியில் இருந்து தான் வாடிக்கையாளர்களுக்கு கிடைத்து வருகிறது.

இதனாலும், கொரோனா வைரஸினாலும் கடந்த 2 வருடங்களில் 50,000-க்கும் அதிகமான ஜாவா மோட்டார்சைக்கிள்களையே இந்நிறுவனத்தால் விற்க முடிந்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை வரும் மாதங்களில் மிக குறைவான காலத்தில் எட்டிவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தான் தற்போது ஜாவா பிராண்டை தொடர்ந்து யெஸ்டி பிராண்டையும் கிளாசிக் லெஜண்ட்ஸ் மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் யெஸ்டி பிராண்டில் இருந்து மூன்று புதிய பைக்குகள் இந்திய சந்தையில் மிக விரைவில் அறிமுகமாகவுள்ளதாகவும் அந்த தகவல்களில் கூறப்பட்டுள்ளன.

இதன் காரணமாக யெஸ்டி மோட்டார்சைக்கிள்களின் டெலிவிரிகளை 2021 பிப்ரவரி மாதத்தின் மத்தியில் இருந்தோ அல்லது மார்ச் மாதத்தில் இருந்தோ துவங்கப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்புகள் இந்த 2020 நவம்பர் மாத இறுதியிலோ அல்லது அடுத்த டிசம்பர் மாதத்திலோ கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனத்தில் இருந்து வெளியாகலாம்.

இந்திய சந்தையில் ரெட்ரோ மிடில்வெய்ட் மோட்டார்சைக்கிள்களுக்கு தேவை அதிகரித்து வருவதால், யெஸ்டி போன்ற புதிய மோட்டார்சைக்கிள் பிராண்ட்கள் நுழைவதற்கு இதுவே சரியான தருணம். என்ஜின் மற்றும் ப்ளாட்ஃபாரத்தில் ஜாவாவிற்கும் யெஸ்டிவிற்கும் பெரிய அளவில் வித்தியாசம் கொண்டுவரப்படாது என கூறப்படுகிறது.

அதேபோல் யெஸ்டி மோட்டார்சைக்கிள்கள் ஜாவா டீலர்ஷிப் மையங்களில் விற்பனை செய்யப்படுவதற்கும் அதிக வாய்ப்புள்ளது. இந்தியாவில் செயல்பாட்டில் இருந்த சமயத்தில் யெஸ்டி பிராண்டில் இருந்து ரோட் கிங், ஆயில் கிங், கிளாசிக், சிஎல்-II, மோனார்ச், டீலக்ஸ், 350 உள்ளிட்ட மோட்டார்சைக்கிள்கள் விற்பனை செய்யப்பட்டன.

ராயல் என்பீல்டு நிறுவனம் அதன் புதிய ஆரம்ப நிலை மீட்டியோர்350 பைக்கை சமீபத்தில் அறிமுகம் செய்தது. ஹோண்டா அதன் எச்'னெஸ் சிபி350 பைக் மூலமாக வாடிக்கையாளர்கள் கவர்ந்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் பழைய மோட்டார்சைக்கிள் பிராண்ட் யெஸ்டி களத்தில் இறங்கினால் எவ்வாறு இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








