ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் மேக்ஸி ஸ்கூட்டர்கள் இந்திய அறிமுகம் குறித்து புதிய தகவல்கள்!
மேக்ஸி ஸ்கூட்டர்கள் போன்ற டிசைனில் உருவாக்கப்பட்டுள்ள ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் ஸ்கூட்டர் மாடல்கள் இந்தியாவில் எப்போது அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன என்ற விபரம் வெளியாகி இருக்கிறது.

இந்திய சந்தையில் ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர்களுக்கான வரவேற்பு மிக அதிகமாக இருந்து வருகிறது. இதனால், எக்கச்சக்கமான மாடல்கள் நிறைந்துவிட்டன. இதனால், பிற நிறுவனங்களிடம் இருந்து தனித்துவமான ஸ்கூட்டர் தேர்வுகளை வழங்கும் முயற்சிகளில் இருசக்கர வாகன நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

குறிப்பாக, ஐரோப்பிய நாடுகளில் பிரபலமான மேக்ஸி என்ற பிரம்மாண்ட தோற்றம் உடைய ஸ்கூட்டர்களை இந்தியாவில் அறிமுகம் செய்யும் முயற்சிகளில் இருசக்கர வாகன நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அதாவது, இந்தியர்களுக்கு தோதுவான பட்ஜெட்டில் இந்த மேக்ஸி ரக ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்து வருகின்றன.

இந்த வரிசையில், இத்தாலியை சேர்ந்த பியாஜியோ குழுமத்தின் கீழ் செயல்படும் ஏப்ரிலியாவும் இடம்பெற இருக்கின்றது. கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில், எஸ்எக்ஸ்ஆர் 125 மற்றும் எஸ்எக்ஸ்ஆர் 160 ஆகிய இரண்டு மேக்ஸி ரக ஸ்கூட்டர்களை ஏப்ரிலியா நிறுவனம் காட்சிப்படுத்தி இருந்தது.

இந்த ஸ்கூட்டர்கள் இந்த ஆண்டு மத்தியில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,கொரோனா வைரஸ் பிரச்னையால் எழுந்துள்ள நிலைமையை தொடர்ந்து, வரும் செப்டம்பர் மாதத்திற்கு இந்த ஸ்கூட்டர்களின் அறிமுகம் ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக இந்தியன் ஆட்டோஸ் பிளாக் தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 125 மற்றும் எஸ்எக்ஸ்ஆர் 160 ஆகிய ஸ்கூட்டர்கள் முகப்பு மிகவும் பிரம்மாண்டமாகவும், வசீகரமாகவும் உள்ளது. எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், அலாய் வீல்கள், கருப்பு வண்ண வைசர் போன்றவை சிறப்பு சேர்க்கின்றன.

இந்த ஸ்கூட்டரில் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இருக்கை மிகவும் வசதியாகவும், பெரிதாகவும் இருக்கிறது. முன்புற அப்ரான் பகுதியில் யுஎஸ்பி மொபைல் சார்ஜருடன் ஸ்டோரேஜ் அறை உள்ளது.

ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 125 ஸ்கூட்டரில் பிஎஸ்6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான 125சிசி எஞ்சின் இடம்பெறும். ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்ட இந்த எஞ்சின் அதிகபட்சமாக 9.5 பிஎச்பி பவரையும், 9.9 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

அடுத்து எஸ்எக்ஸ்ஆர் 160 ஸ்கூட்டரில் இருக்கும் 160சிசி எஞ்சின் அதிகபட்சமாக 10.8 பிஎச்பி பவரையும், 11.6 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த ஸ்கூட்டரிலும் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டத்துடன் பிஎஸ்6 தரத்திற்கு இணையான எஞ்சினுடன் வர இருக்கிறது.

இரண்டு ஸ்கூட்டர்களிலும் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் இரட்டை ஷாக் அப்சார்பர்களும் பொருத்தப்பட்டுள்ளன. முன்புறத்தில் டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் டிரம் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளன. சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் இடம்பெற்றிருக்கும்.

ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 125 ஸ்கூட்டர் மாடலானது சுஸுகி பர்க்மேன் ஸ்கூட்டருடன் நேரடியாக போட்டி போடும். இந்த இரண்டு மாடல்களுமே தனது ரக சந்தையில் பிரிமீயம் அம்சங்களுடன் சற்று விலை அதிகமாகவும் நிலைநிறுத்தப்படும். ஆகஸ்ட் மாதம் முன்பதிவு துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








