ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி பெங்களூரிலிருந்து ஓசூருக்கு மாறுகிறது
பெங்களூரில் உள்ள ஆலையில் ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதையடுத்து, ஓசூரில் உள்ள புதிய ஆலையில் விரைவில் உற்பத்திப் பணிகள் துவங்கப்பட உள்ளன.

பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஏத்தர் எனெர்ஜி நிறுவனம் இந்தியாவின் மின்சார ஸ்கூட்டர் மார்க்கெட்டில் முதன்மையான நிறுவனமாக மாறி இருக்கிறது. ஸ்டைலான டிசைன், நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் வரும் ஏத்தர் ஸ்கூட்டர்களுக்கு வாடிக்கையாளர் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது.

ஏத்தர் எனெர்ஜி நிறுவனத்தில் ஹீரோ மோட்டாகார்ப் நிறுவனம்தான் அதிக அளவில் முதலீடு செய்துள்ளது. இதனால், விரிவாக்கப் பணிகளிலும் ஏத்தர் தீவிரம் காட்டி வருகிறது.

சென்னை மற்றும் பெங்களூரில் மட்டும் இதுவரை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வந்த ஏத்தர் நிறுவனம் தற்போது புதிய முதலீடுகளுடன் நாட்டின் இதர முக்கிய நகரங்களிலும் தனது டீலர்களை நிறுவி விற்பனையை துவங்கி வருகிறது.

இந்த நிலையில், நாடு முழுவதும் புதிய டீலர்களை திறந்து வருவதையடுத்து, அதற்கு தக்கவாறு உற்பத்தி திறனையும் அதிகரிக்க முடிவு செய்தது. இதற்காக ஓசூரில் புதிய ஆலையையும் அமைத்து வருகிறது.

இந்த சூழலில், இதுவரை பெங்களூர், ஒயிட்ஃபீல்டு பகுதியில் செயல்பட்டு வந்த ஏத்தர் நிறுவனத்தின் ஆலையில் ஸ்கூட்டர் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, விரைவில் ஓசூரில் உள்ள புதிய ஆலையில் உற்பத்திப் பணிகள் துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஓசூரில் அமைக்கப்படும் ஆலையானது 4 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்படுகிறது. ஆண்டுக்கு 1 லட்சம் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்யும் இலக்குடன் இந்த ஆலை கட்டப்பட்டு வருகிறது. மேலும், ஆண்டுக்கு 5 லட்சம் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்யும் வகையில் எதிர்காலத்தில் விரிவாக்கம் செய்யும் வகையில் இந்த வளாகம் அமைந்துள்ளது.

தமிழகத்தில் புதிய முதலீடுகளை ஈர்க்கும் விதமாக, மின்சாரத்திற்கான வரியில் 100 சதவீத கழிவு, நிலத்திற்கான பத்திரப் பதிவு கட்டணத்தில் விலக்கு, மின்சார வாகனங்களுக்கான வரி விலக்கு உள்ளிட்ட சிறப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டன. இதன் காரணமாக, ஏத்தர் நிறுவனம் ஓசூரில் புதிய ஆலையை அமைக்க முடிவு செய்துள்ளது.

மேலும், தலைமையகம் அமைந்துள்ள பெங்களூர் மற்றும் ஓசூர் ஆகியவை அருகருகே அமைந்துள்ளதும் பூகோள ரீதியில் சாதகமான விஷயமாக ஏத்தர் நிறுவனத்தின் நிர்வாகிகள் கருதுகின்றனர்.

வரும் 2021ம் ஆண்டு முதல் காலாண்டு காலத்திற்குள் நாடு முழுவதும் 27 நகரங்களில் ஏத்தர் 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு செல்வதற்கு ஏத்தர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. முதல்கட்டமாக 16 நகரங்களில் வர்த்தக செயல்பாடுகள் துவங்கி உள்ளன. எனவே, ஓசூர் ஆலையில் மிக விரைவில் ஸ்கூட்டர் உற்பத்திப் பணிகளை ஏத்தர் நிறுவனம் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








