இந்தியாவில் சந்தையை விரிவுப்படுத்தும் ஏத்தர் எனர்ஜி!! 35 மில்லியன் டாலர்களில் முதலீடு
பெங்களூரை சேர்ந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான ஏத்தர் எனர்ஜி, சமீபத்திய சீரிஸ் டி சுற்றில் புதியதாக 35 மில்லியன் டாலர் முதலீடுகளை திரட்ட முடிந்ததாக அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

மொத்த 35 மில்லியன் டாலர் முதலீட்டில், 23 மில்லியன் டாலர்கள் சச்சின் பன்சாலிடமிருந்தும், மீதமுள்ள 12 மில்லியனை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமும் முதலீடு செய்துள்ளது. ஏத்தர் எனர்ஜிக்கான முதல் ஏஞ்சல் முதலீட்டாளர்களில் சச்சின் பன்சால் இருக்கிறார்.

முன்னதாக 2014ஆம் ஆண்டில் அவர் 0.5 மில்லியன் டாலர் முதலீடு செய்திருந்தார். இப்போது சமீபத்திய சுற்றில், பன்சால் மொத்தம் 53 மில்லியன் டாலரை எலக்ட்ரிக் இரு சக்கர வாகனம் ஸ்டாப்அப்பில் முதலீடு செய்துள்ளார்.

இதுகுறித்து சச்சின் பன்சால் கூறுகையில், "ஏத்தர் எனர்ஜி, இந்திய ஆட்டோமொபைல் துறையில் புத்திசாலித்தனமான மின்சார பைக்குகளுக்கு ஒரு புதிய அளவுகோலை அமைத்துள்ளது. இது அந்நிறுவனத்தின் புதிய தயாரிப்பு வரிசை மற்றும் நாடு முழுவதுக்குமான விரிவாக்கத் திட்டங்களின் மூலமாக இவி வாகனங்களை இந்திய போக்குவரத்தில் ஒரு அங்கமாக மாற்றும்.

2014 முதல் அவர்களது அணியில் இருப்பதால், அவர்களின் பார்வை வடிவம் பெறுவதை காண முடிகிறது" என கூறினார். ஏத்தர் நிறுவனம் அதன் சமீபத்திய அறிமுகமான 450எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவிரி பணிகளை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் துவங்கியுள்ள இந்த நல்ல நேரத்தில் இந்த முதலீடு நடந்துள்ளது.

முன்னதாக வரும் நாட்களில் இந்தியாவில் மேலும் சில நகரங்களில் சந்தையை விரிவுப்படுத்தவுள்ளதாகவும் இந்நிறுவனம் அறிவித்திருந்தது. இதற்கும், புதிய 450எக்ஸ் ஸ்கூட்டரின் டெலிவிரி பணிகளுக்கும் புதிய முதலீடுகள் உதவியாக இருக்கும் என்றும் நம்புவதாக ஏத்தர் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் வருடத்திற்கு 1 மில்லியன் வாகனங்களை தயாரிக்கும் திறன் கொண்ட தமிழ்நாடு, ஓசூரில் உள்ள தொழிற்சாலைக்கு நகர அனைத்து விதங்களிலும் தயாராகி வருகிறது. இதனால் வரும் ஆண்டுகளில் சந்தையில் தேவைப்படும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான தேவையை ஏத்தர் வேகமாக பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய முதலீடுகள் குறித்து ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் துணை நிறுவனரும் சிஇஓ-வுமான தருண் மெஹ்தா பேசுகையில், "எலக்ட்ரிக் வாகன மாற்றத்தை கொண்டுவருவதில் ஏத்தர் எனர்ஜி ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. சச்சின் எங்கள் வளர்ச்சி பயணத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறார். இந்த முதலீடு இத்தனை ஆண்டுகளில் நாம் கட்டியெழுப்பிய வேகத்தின் வலுவான ஒப்புதலாகும்."

"எங்கள் புதிய தயாரிப்பு வரிசையை வெற்றிகரமாக வெளியிட்டதற்கு பிறகு, நாங்கள் இப்போது வாகனங்களை வழங்குவதற்கும் அவற்றை எல்லா நகரங்களிலும் காணவும் எதிர்பார்க்கிறோம். தொற்றுநோய் தனிப்பட்ட போக்குவரத்தை மாற்றியுள்ளது. மேலும் தினசரி பயணத்திற்காக, அதிக செயல்திறன் கொண்ட மாற்று வழிகளில் மக்கள் மின்சார வாகனங்களைத் தேர்ந்தெடுப்பார்கள் என்று நம்புகிறோம்" என தெரிவித்தார்.

ஏற்கனவே கூறியதுதான், ஏத்தர் பிராண்டிற்கான இந்த சமீபத்திய 35 மில்லியன் டாலர் முதலீடு சரியான நேரத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த முதலீடு ஏத்தரின் சந்தை விரிவாக்க நடவடிக்கைகளுக்கு நிச்சயம் பெரிய அளவில் உதவியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








