சென்னை, பெங்களூரில் ஏத்தர் ஸ்கூட்டர் ஷோரூம்கள் மீண்டும் திறப்பு
கொரோனா பாதிப்பு தீவிரமடைந்த நிலையில், அரசு வழிகாட்டு முறைகளை பின்பற்றி ஏத்தர் எனர்ஜி ஸ்கூட்டர் ஷோரூம்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

கொரோனா பிரச்னையால் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக வாகன விற்பனை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலும் வர்த்தகத்தை முடக்கி வைக்க முடியாத சூழலுக்கு வாகன நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன. இதனால், கொரோனா பாதிப்பு குறைவான பகுதிகளில் உள்ள வாகன ஷோரூம்கள் மற்றும் உற்பத்தி மையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கொரோனா அதிக பாதிப்பு உள்ள பகுதிகளில் சிறப்பு அனுமதியுடன் சில வாகன நிறுவனங்கள் செயல்பட துவங்கி உள்ளன. அந்த வகையில், ஏத்தர் எனர்ஜி நிறுவனம் மீண்டும் தனது வர்த்தக செயல்பாடுகளை துவங்கி இருக்கிறது.

இதன்படி, சென்னை மற்றும் பெங்களூரில் உள்ள தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஷோரூம்களை மீண்டும் திறந்துள்ளது. அரசு கொடுத்துள்ள வழிகாட்டு முறைகளை பின்பற்றி இந்த ஷோரூம்கள் செயல்படும் என்றும் தெரிவித்துள்ளது.

தனது ஷோரூம்களில் பணியாற்றுபவர்கள் முக கவசம், கையுறை அணிந்து இருப்பர் என்றும், உரிய பாதுகாப்பு விதிகளை பின்பற்றி வர்த்கக செயல்பாடுகள் நடைபெறும் என்று ஏத்தர் எனர்ஜி தெரிவித்துள்ளது. மேலும், குறிப்பிட்ட இடைவெளியில் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தப்படும்.

மேலும், சென்னை மற்றும் பெங்களூர் நகரங்களில் உள்ள ஷோரூம்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை பின்பற்றுவதற்காக குறைவான எண்ணிக்கையில் பணியாளர்கள் இருப்பர். ஷோரூமிற்கு வரும் வாடிக்கையாளர்களும் உரிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்படும் என்று ஏத்தர் தெரிவித்துள்ளது.

இதனிடையே, ஷோரூம் மட்டுமல்லாது, பெங்களூரில் உள்ள ஏத்தர் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமும் மீண்டும் செயல்பட துவங்கி இருக்கிறது. ஆனால், அத்தியாவசிய பணிக்கு செய்வோர் மட்டும் மீண்டும் பணிக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும், இதர பணியாளர்கள் தொடர்ந்து வீட்டில் இருந்தே பணிபுரிவர் என்றும் தெரிவித்துள்ளது.

ஷோரூம்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில், ஏத்தர் 450 ஸ்கூட்டரின் டெலிவிரிப் பணிகளும் துவங்கப்ப்டடுள்ளன. அதேநேரத்தில், குறைவான எண்ணிக்கையில் மட்டுமே டெலிவிரி பணிகள் நடக்க உள்ளது. படிப்படியாக இதனை சீராக்கவும் திட்டமிட்டுள்ளது ஏத்தர்.

இதனிடையே, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த ஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டரின் டெலிவிரி பணிகள் தாமதம் ஏற்படும் என்று தெரிய வந்துள்ளது. கொரோனா பிரச்னையால் வர்த்தக செயல்பாடுகள் ஸ்தம்பித்துள்ளதால், சில மாதங்கள் தாமதத்திற்கு பின்னர் ஏத்தர் 450எக்ஸ் வரும் என்று தெரிகிறது.

சென்னை மற்றும் பெங்களூரை தவிர்த்து மும்பை, டெல்லி, ஹைதராபாத், புனே, கோவை, ஆமதாபாத், கொல்கத்தா மற்றும் கொச்சி ஆகிய நகரங்களில் விரைவில் ஷோரூம்களை திறக்க திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








