பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மீண்டும் புக்கிங் துவங்கியது!
கொரோனா பிரச்னையிலிருந்து சற்றே இயல்பு நிலை துவங்கி இருப்பதால், பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மீண்டும் புக்கிங் துவங்கப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

கடந்த ஜனவரி மாதம் பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பழைய ஸ்கூட்டர் பெயரிலேயே வந்ததும், சிறப்பான டிசைன் மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்தது.

முதல் கட்டமாக புனே மற்றும் பெங்களூர் நகரங்களில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. முதல் 15 நாட்களிலேயே 2,000 முன்பதிவுகளை பெற்று அசத்தியதுடன் தொடர்ந்து நல்ல ஆதரவை வாடிக்கையாளர் மத்தியில் பெற துவங்கியது.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவியதையடுத்து, தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், பஜாஜ் ஆட்டோ ஆலை தற்காலிகமாக மூடப்பட்டது. மேலும், சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியும் பாதிக்கப்பட்டது. உதிரிபாகங்கள் வருவதிலும் பெரும் சிக்கல் இருந்தது.

இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 29ந் தேதி வரை முன்பதிவு செய்தவர்களுக்கு செப்டம்பர் மாதத்திலிருந்தே சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டெலிவிரி கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால், வாடிக்கையாளர்கள் ஏமாற்றமடைந்தனர். மேலும், உற்பத்தி முடங்கியதால், முன்பதிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது பஜாஜ் ஆட்டோ நிறுவனம்.

இந்த நிலையில், தற்போது உற்பத்திப் பணிகள் பழைய நிலைக்கு திரும்பி வருவதால், சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவு மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலமாக வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

கடந்த மாதம் முதலே உற்பத்தி செய்து இருப்பில் இருந்த சேத்தக் ஸ்கூட்டர்கள் புனே மற்றும் பெங்களூர் நகரங்களில் உள்ள டீலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது உற்பத்திப் பணிகள் மெல்ல சீரடைந்து வருவதால், சேத்தக் ஸ்கூட்டருக்கான முன்பதிவு மீண்டும் துவங்கப்பட்டு இருக்கிறது.

சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டிசைன் மிகச் சிறப்பாக இருப்பது வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது. இந்த ஸ்கூட்டரில் 3.0kWh லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 95 கிமீ தூரம் வரை பயணிக்கும். ரூ.1 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

புக்கிங் செய்து காத்திருப்பவர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகள் சீரடைந்தால், பிற நகரங்களிலும் அறிமுகம் செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் ஐரோப்பிய நாடுகளுக்கும் விரைவில் ஏற்றுமதி செய்யும் பணிகள் துவங்கும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications








