பைக்குகளில் ஆட்டோமேட்டிக் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தும் பிஎம்டபிள்யூ
ஆட்டோமேட்டிக் க்ரூஸ் கன்ட்ரோல் தொழில்நுட்பத்தை பைக்குகளில் அறிமுகம் செய்ய இருக்கிறது பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம். இதுகுறித்த கூடுதல் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

நெடுஞ்சாலைகளில் நீண்ட தூரம் பயணிக்கும்போது தொடர்ந்து ஆக்சிலரேட்டரை கொடுத்து செல்வது ஓட்டுனர்களுக்கு அயர்ச்சியையும், உடல் சோர்வையும் தருகிறது. இதனை தவிர்த்து, அதிக கவனத்துடன் வாகன ஓட்டிகள் செல்வதற்கு ஏதுவாக க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் பயன்படுத்தப்படுகிறது.

குறிப்பிட்ட வேகத்தில் வாகனத்தை சீராக செலுத்துவதுதான் க்ரூஸ் கன்ட்ரோல். ஓட்டுனர் ஆக்சிலரேட்டர் பெடலை மிதித்துக் கொண்டே செல்லும் அவசியம் இல்லை. தேவைப்படும்போது ஓட்டுனர் தனது கட்டுப்பாட்டில் வாகனத்தை கொண்டு வருவதற்கு ஏதுவான தொழில்நுட்பமாக உள்ளது.

இதன் மேம்பட்ட தொழில்நுட்பம் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. அதாவது, முன்னால் செல்லும் வாகனம் அல்லது பக்கவாட்டில், பின்னால் வரும் வாகனங்கள், தடைகளை ரேடார் மூலமாக கண்காணித்து முன்கூட்டியே வாகனத்தின் வேகத்தை தானியங்கி முறையில் கட்டுப்படுத்துவதான் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம்.

இந்த அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் விலை உயர்ந்த கார் மாடல்களில் வழங்கப்படுகிறது. இந்த நிலையில், இதே தொழில்நுட்பத்தை பைக்குகளில் கொண்டு வருவதற்கு டுகாட்டி, கேடிஎம் உள்ளிட்ட நிறுவனங்கள் முயன்று வருகின்றன. அந்த வகையில், உயர்வகை பைக் தயாரிப்பில் பிரபலமான பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது பைக்குகளில் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டத்தை வழங்க உள்ளது.

இதன்மூலமாக, பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் பைக்குகளில் நீண்ட தூர பயணம் என்பது இன்னும் சவுகரியமானதாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னால் செல்லும் வாகனங்களை முன்கூட்டியே கண்டறிந்து பைக்கின் வேகத்தை குறைத்துக் கொள்ளும்.

ஓட்டுபவரின் கண்காணிப்பு இருக்கும் என்பதால், மோதும் நிலை ஏற்பட்டால் உடனடியாக பைக் கன்ட்ரோலை எடுத்துக் கொள்ளும் விதத்தில் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த தொழில்நுட்பம் பிஎம்டபிள்யூ பைக் வாடிக்கையாளர்களை பெரிதாக கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








