சொந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு அனுமதி கிடைத்துவிட்டது... பவுன்ஸ் நிறுவனம் அறிவிப்பு!
சொந்தமாக உருவாக்கி இருக்கும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு அனைத்து வித அனுமதிகளும் கிடைத்துவிட்டதாக பவுன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெங்களூரை சேர்ந்த பவுன்ஸ் நிறுவனம் ஸ்கூட்டர்களை வாடகை விடும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. பவுன்ஸ் நிறுவனத்தின் குறைவான கட்டணத்துடன் கூடிய வாடகை ஸ்கூட்டர் திட்டம் பெருநகரங்களில் பெரிய அளவிலான வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில், வர்த்தகத்தை விரிவாக்கும் வகையில், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பிலும் இந்நிறுவனம் களமிறங்கி உள்ளது.

பவுன்ஸ் நிறுவனம் உருவாக்கி இருக்கும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு அரசு அமைப்புகளிடம் இருந்து அனுமதி கிடைத்துள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விவேகானந்தா சமூக வலைதளம் மூலமாக தெரிவித்துள்ளார்.

தனது நிறுவனம் உருவாக்கி இருக்கும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் படங்களையும் வெளியிட்டுள்ள அவர், இந்த ஸ்கூட்டரை டெஸ்ட் டிரைவ் செய்து பார்ப்பதற்கும் வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதற்காக, ஆன்லைன் படிவம் ஒன்றையும் அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஆர்வமுள்ளவர்கள் இந்த படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பித்தால், பவுன்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை டெஸ்ட் டிரைவ் செய்யும் வாய்ப்பை பெற முடியும். வரும் சனிக்கிழமை முதல் டெஸ்ட் டிரைவ் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் உற்பத்தி பணிகளை பவுன்ஸ் நிறுவனம் மேற்கொள்ள இருக்கிறது. ஆனால், இந்த ஸ்கூட்டரை வேறு ஒரு நிறுவனத்தின் பணியாளர் குழு உருவாக்கிக் கொடுத்துள்ளது. சந்தா திட்டம் மற்றும் தனது வாடகை ஸ்கூட்டர் திட்டத்தின் கீழ் இந்த ஸ்கூட்டர்களை விற்பனை அல்லது வாடகை மூலமாக வர்த்தகம் செய்ய பவுன்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு பவுன்ஸ் நிறுவனத்தை விவேகானந்தா, வருண் அக்னி மற்றும் அனில் ஆகியோர் இணைந்து உருவாக்கினர். இந்த நிலையில், தங்களது வர்த்தகத்தை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் சொந்தமாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியை துவங்கும் திட்டத்தில் இறங்கி இருக்கின்றனர். விரைவில் உற்பத்திப் பணிகளை துவங்குவதற்கான முயற்சிகளில் பவுன்ஸ் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications








