இரு மாவட்டங்களில் ஹீரோ - ஹோண்டா இருசக்கர வாகன விற்பனைக்கு தடை... காரணத்தை கேட்டு கடுப்பான ஃபடா!
இந்தியாவின் குறிப்பிட்ட இரு மாவட்டத்தில் ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் ஹோண்டா ஆகிய இரு நிறுவனங்களின் புதிய மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணத்தை இப்பதிவில் காணலாம்.

ஒரு காலத்தில் சகோதரர்களைபோல் ஒன்றிணைந்து செயல்பட்டு வந்து ஹீரோ மற்றும் ஹோண்டா ஆகிய இரு நிறுவனங்களும் தற்போது தனி-தனியாக செயல்பட்டு வருகின்றன. சில குறிப்பிட்ட காரணங்களால் இவை கடந்த சில வருடங்களுக்கு முன்பே பிரிந்தன. தற்போது தனித்து செயல்பட்டு வருகின்றன.

இரு நிறுவனங்களும் பிரிந்தாலும் மக்கள் மத்தியில் முன்பு நிலவி வந்த அதே வரவேற்பு தற்போதும் எவ்வித குறைச்சலுமின்றி கிடைத்து வருகின்றது. இம்மாதிரியான சூழ்நிலையில் இந்தியாவின் குறிப்பிட்ட இரு மாவட்டங்களில் மட்டும் ஹீரோ மற்றும் ஹோண்டா ஆகிய இரு நிறுவனங்களின் இருசக்கர வாகனங்களுக்குமே தடை விதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சத்தீஸ்கர் மாநிலத்திலேயே இந்த அதிரடி தடை விதிக்கப்பட்டுள்ளது. ராய்பூர் மற்றும் காரியாபண்ட் இவ்விரு மாவட்டங்களிலேயே ஹோண்டா மற்றும் ஹீரோ மோட்டாகார்ப் நிறுவனத்தின் டீலர்களுக்கு புதிய வாகனத்தை விற்க தடை வழங்கப்பட்டுள்ளது.

இவர்கள் மாநிலத்தின் போக்குவரத்துத்துறையிடம் இருந்து புதிய மாடல்களின் விற்பனைக்கான ஒப்புதலைப் பெறாத காரணத்தினாலேயே இந்த தடை ஏற்பட்டிருக்கின்றது. இரு மாவட்டங்களிலும் ஒவ்வொரு பிராண்டிற்கும் தலா 4 விற்பனையகங்கள் என சுமார் 8 விநியோகஸ்தர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

இவர்கள் புதிய மாடலை விற்பனைச் செய்வதற்கான ஒப்புதலை மாநில போக்குவரத்துத்துறையிடம் இருந்து பெற தவறியிருக்கின்றனர். அண்மையில் புதிய பிஎஸ்-6 விதி அமலுக்குக் கொண்டுவரப்பட்டது. இந்த தரத்திலான வாகனங்களின் விற்பனைக்கே இவர்கள் உரிமம் பெற தவறியிருக்கின்றனர்.

இதன் காரணத்தினாலயே இரு மாவட்டங்களிலும் செயல்படும் ஹோண்டா மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் ஆகிய இரு நிறுவன விற்பனையாளர்களும் விநோத விற்பனைத் தடையைப் பெற்றிருக்கின்றனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து எஃப்ஏடிஏ (FADA)-வின் தலைவர் விங்கேஷ் குலாத்தி, இடி ஆட்டோ செய்தி தளத்திற்கு வழங்கிய பிரத்யேக பேட்டியில், "இது எங்களுக்கு மிகவும் ஆச்சரியத்தை அளிக்கும் வகையில் உள்ளது. புதிய வாகனங்களை விற்க மாநில வாரியாக அங்கீகாரம் பெறுவது அவசியம் இல்லை என மத்திய அரசு கூறியிருக்கின்றது. இதனை அராய் அமைப்பும் ஏற்றுக் கொண்டது. இம்மாதிரியான சூழ்நிலையில் குறிப்பிட்ட டீலர்களின் விற்பனை முடக்கப்பட்டிருக்கின்றது" என்றார்.

எனவே சத்தீஸ்கர் மாநில போக்குவரத்துத்துறையின் புதிய வாகன விநியோக தடை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தடை நீக்கம் எப்போது செய்யப்படும் என்ற விபரம் தற்போது வரை தெரியவில்லை.


Click it and Unblock the Notifications








