இந்த மின்சார ஸ்கூட்டரில் பயணிக்க 1கிமீ-க்கு வெறும் 15 பைசா மட்டுமே செலவாகும்... விலையும் ரொம்ப ரொம்ப கம்மிங்க!
மிக மிக விலைக் குறைந்த மின்சார ஸ்கூட்டரை ஈவீ நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

இந்தியாவை மையமாகக் கொண்டு மின்சார இரு சக்கர வாகன உற்பத்தியில் ஈடுபட்டு வரும் ஈவீ (EeVe) நிறுவனம், புதிதாக இரு மின்சார ஸ்கூட்டர்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இரண்டும் தனித்துவமான ஸ்டைல் மற்றும் திறனைக் கொண்டதாகக் காட்சியளிக்கின்றன.

அட்ரியோ (Atreo) மற்றும் அஹவா (Ahava) எனும் இரு புதுமுக மின்சார ஸ்கூட்டர்களை அது அறிமுகம் செய்திருக்கின்றது. இதில், அட்ரியோ நீண்ட ரேஞ்ஜை வழங்கும் மின்சார ஸ்கூட்டராகவும், அஹவா சற்று குறைந்த ரேஞ்ஜ் திறனைக் கொண்டதாகவும் காட்சியளிக்கின்றன.

ஆமாங்க, அட்ரியோ மின்சார ஸ்கூட்டரை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 100 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். அதுவே, அஹவா மின்சார ஸ்கூட்டரை முழுமையாக சார்ஜ் செய்தால் 70 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆகையால் இந்த ஸ்கூட்டர்களில் ஒரு கிமீ பயணிக்க வெறும் 15 பைசா மட்டுமே செலவாகும். இது மட்டுமின்றி இரு மின்சார ஸ்கூட்டர்களுக்கும் ஐந்து வருட வாரண்டியை வழங்கவும் ஈவீ திட்டமிட்டுள்ளது. இதில், பேட்டரி பேக்கிற்கு மட்டும் ஒரு வருட வாரண்டி மட்டுமே வழங்கப்பட இருக்கின்றது.

இதுமட்டுமின்றி அட்ரியோ மற்றும் அஹவா மின்சார ஸ்கூட்டர்களில் தொழில்நுட்ப வசதிகளும் கூடுதலாக சேர்க்கப்பட்டிருக்கின்றன. ஜீயோ-டேக்கிங், ஜியோ ஃபென்சிங் மற்றும் இம்மொபிலைசேஷன் ஆகிய சிறப்பு தொழில்நுட்ப கருவிகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

இதன்மூலம் நின்ற இடத்திலேயே வாகனம் பற்றிய அனைத்து தகவல்களையும் நம்மால் நம்முடைய விரல் நுணியிலேயே பெற முடியும். அதாவது, ஸ்கூட்டரின் இருக்கும் இடம், பயணிக்கும் பாதை மற்றும் பேட்டரி அளவு உள்ளிட்ட பல்வேறு தகவல்களை எளிதில் பெற்றுக் கொள்ள முடியும்.

இந்த புதுமுக மின்சார ஸ்கூட்டர்களின் அறிமுகம் பற்றி பேசிய ஈவீ நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் இயக்குனர் ஹர்ஷ் வர்தன் தித்வானியா, "எதிர்காலத்தில் மின்சார ஸ்கூட்டர்களின் முன்னோடி உற்பத்தியாளர்களில் ஒருவராக எங்களை நிலை நிறுத்திக்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கின்றோம். இந்திய இரு சக்கர வாகன ஓட்டிகளை மனதில் கொண்டு, அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கின்ற வகையில் வாகனங்களை களமிறக்கி வருகின்றோம்" என்றார்.

ஈவீ நிறுவனம், ஏற்கனவே செனீயா (Xeniaa), வைண்ட் (Wind), 4யு (4U) மற்றும் யூர் (Your) ஆகிய மின்சார ஸ்கூட்டர்களை இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் விற்பனையில் ஈடுபடுத்தி வருகின்றது. இந்த வரிசையிலேயே புதிய அட்ரியோ மற்றும் அஹாவா மின்சார ஸ்கூட்டர்களை அது களமிறக்கியிருக்கின்றது.

இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு சந்தை நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் சந்தையின் தேவையை உணர்ந்து ஈவீ நிறுவனம் புதிதாக இரு மின்சார ஸ்கூட்டர்களைக் களமிறக்கியிருக்கின்றது. மேலும், இவற்றிற்கு மிக மிக குறைந்த விலையையே ஈவீ நிறுவனம் நிர்ணயித்துள்ளது.

ஈவீ அஹவா மின்சார ஸ்கூட்டருக்கு ரூ. 55,900ம், அதிக ரேஞ்ஜை வெளிப்படுத்தும் அட்ரியோ மின்சார ஸ்கூட்டருக்கு ரூ. 64,900 என்ற விலையையும் அது நிர்ணயித்துள்ளது. இரு மின்சார ஸ்கூட்டர்களிலும் 250வாட் திறன் கொண்ட மின் மோட்டாரே பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. ஆனால், இவை வெவ்வேறு திறனை வெளிப்படுத்துபவையாக இருக்கின்றன.
அதேசமயம், வேக என்ற விஷயத்திலும் இரு மின்சார ஸ்கூட்டர்களும் ஒரே மாதிரியானதாக காட்சியளிக்கின்றன. இரண்டும் அதிகபட்சமாக மணிக்கு 25 கிமீ எனும் வேகத்திலேயே இயங்கும் திறனைக் கொண்டிருக்கின்றன. ஆகையால், இவற்றை பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. மேலும், இதனை இயக்க ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஆகையால், அனைத்து தரப்பிலும் இந்த மின்சார ஸ்கூட்டர்கள் நல்ல லாபத்தையே வழங்க இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








