இந்தியாவில் 'பார்ட்னர்' தேடும் ஹார்லி டேவிட்சன்?
இந்தியாவில் புதிய நிறுவனத்துடன் கூட்டணி அமைப்பதற்கான முயற்சிகளில் ஹார்லி டேவிட்சன் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அமெரிக்காவை சேர்ந்த ஹார்லி டேவிட்சன் நிறுவனம் பிரிமீயம் வகை க்ரூஸர் மோட்டார்சைக்கிள்கள் தயாரிப்பில் பிரபலமாக உள்ளது. இந்தியாவிலும் ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதேநேரத்தில், ஹார்லி டேவிட்சன் நிறுவனம் எதிர்பார்க்கும் அளவுக்கு வர்த்தகம் வலுவாக இல்லை.

இதனையடுத்து, இந்தியாவில் உள்ள மோட்டார்சைக்கிள் ஆலையை மூடிவிட்டு வெளியேறுவதற்கு ஹார்லி டேவிட்சன் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் றெக்கை கட்டி பறக்கின்றன.

இந்த நிலையில், ஆலையை மூடினாலும் தனது மோட்டார்சைக்கிள்களை தொடர்ந்து இறக்குமதி செய்து விற்பனை செய்வதற்கும், சர்வீஸ் சேவைகளை வழங்குவதற்குமான முயற்சிகளில் ஹார்லி டேவிட்சன் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

இதற்காக, உள்ளூரை சேர்ந்த நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து வர்த்தகத்தை தொடர்வதற்கு அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாக எக்கனாமிக் டைம்ஸ் ஆட்டோ தளம் வெளியிட்ட செய்தி தெரிவிக்கிறது.

இதன்படி, ஹீரோ மோட்டோகார்ப், கிளாசிக் லெஜென்ட்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் கூட்டணி அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைகளில் ஹார்லி டேவிட்சன் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனத்துடன் டிவிஎஸ் மோட்டார்ஸும், கேடிஎம், ஹஸ்க்வர்னா மற்றும் ட்ரையம்ஃப் நிறுவனங்களுடன் பஜாஜ் ஆட்டோவும் கூட்டணி அமைத்து செயல்பட்டு வருகின்றன. இதே பாணியில், தனது மோட்டார்சைக்கிள் மாடல்களை உள்ளூர் நிறுவனத்தின் உதவியுடன் விற்பனை செய்வதற்கான முயற்சிகளை ஹார்லி டேவிட்சன் மேற்கொண்டுள்ளது.

மேலும், உள்ளூர் நிறுவனத்தின் உதவியுடன் நடுத்தர வகை பிரிவு மோட்டார்சைக்கிள் சந்தையிலும் இறங்குவதற்கான திட்டமாகவும் இது பார்க்கப்படுகிறது. ஏனெனில், 350சிசி ரக மோட்டார்சைக்கிளை ஹார்லி டேவிட்சன் உருவாக்கி வருகிறது. இதற்கு உள்ளூர் நிறுவனத்தின் உதவி அவசியமாக இருக்கும்.

இந்த விஷயத்தில் நாட்டின் மிகப்பெரிய நிறுவனமாக உள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் உற்பத்தி திறன் மற்றும் முதலீடுகளில் சிறப்பாக இருக்கும் என்பதால், அந்த நிறுவனத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிகிறது.

மேலும், கடந்த பிப்ரவரி மாதம் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்துடன் கூட்டணி அமைப்பதற்கு ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பவன் முஞ்சால் விருப்பம் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








