ஆட்டோ எக்ஸ்போவில் முழு தரிசனம் வழங்கிய ஹீரோ எலெக்ட்ரிக் பைக்.. இதுதான் ஹீரோவின் முதல் மின்சார பைக்!
ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் முதல் மின்சார பைக்கான ஏஇ47 அதன் முழு உருவ தரிசனத்தை 2020 ஆட்டோ எக்ஸ்போவில் வழங்கியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

நாட்டின் மிக முக்கியமான இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஹீரோ மோட்டோகார்ப், ஹீரோ எலெக்ட்ரிக் பிராண்டில் மின்சார இருசக்கர வாகனங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றது. இந்தியாவில் நிலவி வரும் மின் வாகனங்களுக்கான தேவையை உணர்ந்து ஹீரோ நிறுவனம் இந்த முயற்சியை மேற்கொண்டு வருகின்றது.

பெரும்பாலும் ஸ்கூட்டர் ரகத்திலான மின்சார இருசக்கரங்களைக் களமிறக்கி வந்த ஹீரோ தற்போது எலெக்ட்ரிக் பைக்கையும் களமிறக்க திட்டமிட்டிருக்கின்றது.
இதற்கான பிள்ளையார் சுழியாக ஏஇ 47 என்ற புத்தம் புதிய எலெக்ட்ரிக் பைக்கை தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் வாகன கண்காட்சியில் அது அறிமுகம் செய்திருக்கின்றது.

இது பிரிமியம் ரகத்தில் உற்பத்தி செய்யப்பட்ட எலெக்ட்ரிக் பைக்காகும். ஹீரோ நிறுவனம் இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கினாலும் இந்த எலெக்ட்ரிக் பைக்கை சில வெளிநாட்டு கூட்டு நிறுவனங்களுடன் இணைந்தே இந்தியாவில் வைத்து தயாரித்திருக்கின்றது.

தொடர்ந்து, ஒரு சில பாகங்களும்கூட வெளிநாட்டு கூட்டணி நிறுவனங்களிடம் இருந்தே இறக்குமதி செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் அந்நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

அவ்வாறு, உள்நாட்டில் வைத்து தயாரிக்கப்பட்ட பைக்கைதான் ஹீரோ எலெக்ட்ரிக் தற்போது காட்சிப்படுத்தியுள்ளது. இது கூடிய விரைவில் விற்பனைக்கும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது, இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமேயானால் ரூ. 1.25 லட்சம் முதல் 1.50 லட்சம் ரூபாய் வரையிலான விலையில் விற்பனைக்குக் கொண்டுவரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த எலெக்ட்ரிக் பைக்கின் அறிமுகத்தைத் தொடர்ந்து ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான நவீன் முஞ்ஜல் கூறியதாவது, "ஏஇ47 மின்சார பைக் எங்கள் தயாரிப்பு போர்ட்ஃபோலியோவிலேயே சற்று பிரிமியம் தரத்திலானதாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இது மணிக்கு நூறு கிலோ மீட்டர் என்ற வேகத்தில் செல்லக்கூடிய உயர் செயல்திறன் கொண்ட மின் மோட்டாரைப் பெற்றிருக்கின்றது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "எங்களின் நெட்வொர்க் நாடு முழுவதும் பரந்து விரிந்திருப்பதால் மின் வாகன சந்தையில் புதிய இலக்கை எட்டுவோம் என நம்புகின்றோம். புதிய தயாரிப்புகள் மற்றும் அறிமுகத்தினால் இது மேலும் வலுபெறும் என்றும் நாங்கள் எதிர்பார்க்கின்றோம்" என்றார்.

ஹீரோ எலெக்ட்ரிக் அறிமுகம் செய்துள்ள இந்த ஏஇ-47 மின்சார பைக்கில் 4 ஆயிரம் வாட் திறன் கொண்ட மின் மோட்டார் இணைக்கப்பட்டுள்ளது. இது, 48 வோல்ட்/3.5 kWh திறன் கொண்ட பேட்டரியில் இருந்து சக்தியைப் பெறுகின்றது. இந்த பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்ய நான்கு மணி நேரங்கள் எடுத்துக் கொள்ளும்.

இத்துடன், பவர் மற்றும் ஈகோ மோட் என ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில், பவர் மோடில் வைத்து இயக்கும்போது 85 கிமீ ரேஞ்சையும், ஈகோ மோடில் வைத்து இயக்கும்போது 160 கிமீ ரேஞ்சையும் வழங்கும்.

ஹீரோ எலெக்ட்ரிக் ஏஇ47 மின்சார பைக் 0த்தில் இருந்து 60 கிமீ என்ற வேகத்தை வெறும் 9 செகண்டுகளிலேயே தொட்டுவிடும். இதுமட்டுமின்றி, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், கீலெஸ் அக்செஸ், மொபைல் சார்ஜர், வால்க் அசிஸ்ட் மற்றும் ரிவர்ஸ் கியர் போன்ற பல்வேறு அம்சங்கள் இதில் காணப்படுகின்றது.

இத்துடன், இந்த பைக்கிற்கான பிரத்யேக செல்போன் தயாரிக்கப்பட்டுள்ளது. இது ப்ளூடுத் வசதியுடன் இணைத்து பைக் பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்துக் கொள்ள உதவும். தொடர்ந்து, ஜிபிஎஸ் மற்றும் ஜிபிஆர்எஸ் ஆகியவற்றின் மூலம் ரியல் டைம் டிராக்கிங்கையும் நம்மால் செய்ய முடியும்.


Click it and Unblock the Notifications








