100 மில்லியன் மோட்டார்சைக்கிள்கள் விற்பனை... தற்போதைய சூழ்நிலையிலும் புதிய சாதனையை படைக்கும் ஹீரோ
முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப், கொரோனா வைரஸின் பிடியில் சிக்கி தவித்து வரும் இந்த 2020ஆம் ஆண்டில் 100 மில்லியன் இருசக்கர வாகன விற்பனையை சந்தையில் பதிவு செய்து உலகளவில் சாதனை படைக்க ஆயத்தமாகி வருகிறது.

தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில் இருசக்கர வாகன துறை பெரிய அளவிலான சவால்களை சந்தித்து வருகிறது. இருப்பினும் இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் வளர்ச்சியில் பெரிய அளவில் எந்த மாற்றமும் இல்லை என ஹீரோ நிறுவனம் 2019-20 ஆண்டிற்கான அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்நிறுவனம் அதன் பங்குதாரர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ள தகவலில், நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உள்நாட்டிலும் சர்வதேச சந்தைகளிலும் நிறைய வாய்ப்புகள் இன்னும் உள்ளதாக ஹீரோ நிறுவனத்தின் சேர்மன் பவன் முஞ்சல் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து மேலும் கூறிய அவர், குறுகிய கால வணிகம் நிச்சயமற்றதாகவே உள்ளது. ஆனால் இந்தியாவில் நீண்ட-கால வணிகங்கள் மற்றும் இரு-சக்கர வாகன துறை இன்னும் அப்படியே வலிமையாகவும், நேர்மறை எண்ணத்துடனே உள்ளது என தெரிவித்தார்.

கடந்த ஐந்து வருடங்களில் 40க்கும் மேற்பட்ட நாடுகளில் ஹீரோ நிறுவனம் தனது காலடி தடத்தை பதித்துள்ளதாக கூறியுள்ள முஞ்சல், 2021ஆம் பொருளாதார ஆண்டில் மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்களின் விற்பனையில் உலகளாவிய சாதனையாக 100 மில்லியன் விற்பனையை எதிர்நோக்கி உள்ளோம் என கூறியுள்ளார்.

மேலும் நிறுவனத்தின் பண இருப்பு ரூ.14,096 கோடியை நெருங்கிவிட்டதாகவும், நிறுவனத்தின் நிதி வலிமை நன்றாக வளர்வதாகவும் கருத்து தெரிவித்துள்ள முஞ்சல், எங்களது தற்போதைய நிலைமை எதிர்காலத்தில் கடினமான சூழல்களில் வெற்றிகரமாக முன்னோக்கி செல்ல உதவும் என நம்பிக்கை கொண்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலினால் பொது மக்கள் தனி பயன்பாட்டு வாகனங்களையே பயன்படுத்த விரும்புகின்றனர். இது எங்களை போன்ற இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு சாதகமாக இருக்கும் என ஹீரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த தேவை தொழில்துறைக்கு மிகவும் எதிர்பார்க்கப்படும் ஊக்கத்தை வழங்கும் எனவும் பண்டிகை காலங்களில் தொழில் நிலைபெறும் எனவும், முன்னணி நிறுவனம் என்ற வகையில் சந்தை மாற்றத்தை ஏற்கும் நிலையை அடைய வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் இருக்குகிறோம் எனவும் முஞ்சல் கூறியுள்ளார்.

நிறுவனம் பழைய நிலைக்கு திரும்பியவுடன் எங்களிடம் இருந்து தற்போதைய தேவையை பூர்த்தி செய்யும் வகையிலான தயாரிப்புகளை எதிர்பார்க்கலாம் என நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கார்ப்ரேட் வரி விகிதக் குறைப்புக்கள், விவசாயிகளுக்கு பணப் பரிமாற்றம், கிராமப்புற வளர்ச்சிக்கு ரிசர்வ் வங்கியுடன் சேர்ந்து செலவிடுவது போன்ற அரசாங்கத்தின் முயற்சிகள் வளர்ச்சியை எளிதாக்கும் எனவும் ஹீரோ நிறுவனம் கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications








