கேடிஎம் 200 ட்யூக் பைக்கை கட்டம் கட்டிய ஹோண்டா
இந்தியாவில் புதிய பைக் மாடலுக்கான காப்புரிமையை ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் பெற்றிருக்கிறது. கேடிஎம் 200 ட்யூக் பைக் மாடலுக்கு போட்டியாக எதிர்பார்க்கப்படும் இந்த புதிய பைக் மாடல் குறித்த முழுமையான விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

இந்திய இருசக்கர வாகன சந்தையில் மிக வலுவான வர்த்தகத்தை ஹோண்டா பதிவு செய்து வருகிறது. சாதாரண பட்ஜெட் வகை முதல் சூப்பர் பைக்குகள் வரை இந்திய மார்க்கெட்டில் வாடிக்கையாளர்களின் பட்ஜெட்டிற்கு தக்க மாடல்களை நிலைநிறுத்தி உள்ளது.

இந்த நிலையில், இந்தியாவின் 200 சிசி மார்க்கெட்டில் மட்டும் இதுவரை ஹோண்டா எந்த மாடலையும் களமிறக்கவில்லை. ஆனால், இந்த ரகத்தில் கேடிஎம் 200 ட்யூக் உள்ளிட்ட பைக் மாடல்களுக்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது.

எனவே, இந்த சந்தையில் இருக்கும் வர்த்தக வாய்ப்பை தன் வசமாக்கும் விதத்தில், புத்தம் புதிய மாடலை களமிறக்கும் முடிவை ஹோண்டா எடுத்துள்ளது. இதற்காக, வெளிநாடுகளில் விற்பனையில் உள்ள சிபிஎஃப்190ஆர் என்ற பைக் மாடலை அறிமுகப்படுத்த ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த பைக் மாடலை இந்தியாவில் கொண்டு வருவதற்கான இந்திய காப்புரிமை கழகத்தில் பதிவு செய்துள்ளது. இந்த பைக்கில் 184சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும். ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டத்துடன் பிஎஸ்6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான மாடலாகவும் இருக்கும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

இதன் எஞ்சின் அதிகபட்சமாக 16.62 எச்பி பவரையும், 16.3 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். மணிக்கு 107 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. 12 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது.

இந்த பைக்கில் எல்இடி ஹெட்லைட், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. முன்புறத்தில் அப்சைடு டவுன் ஃபோர்க்குகள், ஹசார்டு லைட், பெட்டல் டிஸ்க் பிரேக், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு தொழில்நுட்ப அம்சங்களை பெற்றிருக்கிறது.

ஹோண்டா சிபிஎஃப்190ஆர் என்ற இந்த நேக்கட் வகை பைக் மாடலுடன், இதன் அடிப்படையிலான சிபிஎஃப் 190எக்ஸ் என்ற அட்வென்ச்சர் மாடலையும் இந்தியாவில் அறிமுகப்படுத்துவது குறித்து ஹோண்டா பரிசீலித்து வருகிறது. இரண்டு மாடல்களின் விலையையும் மிக சவாலாக நிர்ணயித்து மார்க்கெட்டை தன் வசப்படுத்த ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவில் ஹோண்டா சிபிஎஃப் 190ஆர் பைக்கிற்கு காப்புரிமைக்கு விண்ணப்பிக்கப்பட்டு, கடந்த மாதம் இதற்கான உறுதி கிடைத்திருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால், இந்த பைக் மாடல்கள் இந்தியாவில் வருவது குறித்து இதுவரை எந்த தகவலையும் ஹோண்டா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.


Click it and Unblock the Notifications








