ஹோண்டாவின் புதிய தொழில்நுட்பம்... இது மட்டும் பயன்பாட்டுக்கு வந்தா புள்ளிங்கோ இளசுகளை கையிலயே பிடிக்க முடியாது...
புதிய தொழில்நுட்பம் ஒன்றிற்கு ஹோண்டா டூ-வீலர் நிறுவனம் கோப்புரிமை பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த தகவலை இப்பதிவில் காணலாம்.

வாகன உற்பத்தி நிறுவனங்கள் தானியங்கி அம்சங்களை அறிமுகப்படுத்துவதில் தீவிரம் காட்டத் தொடங்கியிருக்கின்றன. ஒட்டுமொத்த உலக நாடுகளுக்குமே தலை வலியை ஏற்படுத்தும் வகையில் சாலை விபத்துகள் இருக்கின்றன. இதனைத் தவிர்க்க தானியங்கி அம்சங்கள் உதவும் நம்பப்படுகின்றது. இதனடிப்படையிலேயே மனித மூளை செயல்படுவதற்கு முன்னர் விபத்துகளைத் தவிர்க்கின்ற வகையிலான தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் வாகன நிறுவனங்கள் தீவிரம் காட்டி வருகின்றன.

அந்தவகையில், பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவமான ஹோண்டாவும் விபத்தை முன்கூட்டிய அறிந்து அதனைத் தவிர்க்கக்கூடிய அம்சத்தை உருவாக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் புதிய தொழில்நுட்பத்திற்கான காப்புரிமையை ஹோண்டா பெற்றிருக்கின்றது.

லாஸ் ஏஞ்ஜல்ஸில் அமைந்திருக்கும் ஹோண்டாவின் ஆர்என்டி மையமே இதற்கான காப்புரிமையைப் பெற்றிருக்கின்றது. இது ஓர் மைண்ட்-ரீடிங் (மூளையை செயல்பாடுகளைக் கண்டறியும்) தொழில்நுட்பம் ஆகும். இந்த தொழில்நுட்பம் ஹெல்மெட்டின் ஊடாக மனிதன் நினைக்கக்கூடியவற்றைக் கட்டளையாக வாங்கி பைக்கில் செயல்படுத்த உதவும். டெலிபதி முறையில் இந்த தொழில்நுட்பம் இயங்க இருக்கின்றது.

இதற்கான வசதிகள் எதிர்கால இருசக்கர வாகனம் மற்றும் ஹெல்மெட்டுகளில் ஹோண்டா வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது மூளையில் கிடைக்கும் சமிக்ஞைகளைப் பெற்று பிஎம்ஐ எனும் கருவிக்கு அனுப்பி வைக்கும். இந்த கருவி சமிக்ஞைகளை உள்ளீடாக மாற்றும். மேலும், இந்த கருவி இருசக்கர வாகனத்தின் பிற தொழில்நுட்ப வசதிகளான ஏபிஎஸ், டிராக்சன் கன்ட்ரோல், த்ரோட்டில் மற்றும் ஐஎம்யூ ஆகியவற்றையும் கண்கானிக்கும்.

தேவைப்படும் எனில் இந்த கருவிகளை தானாகவே பாதுகாப்பிற்காக பயன்படுத்தவும் செய்யும். ஆகையால், இந்த தொழில்நுட்பத்தைப் பெறும் வாகனங்கள் விபத்து என்பதையே கேள்விக்குறியாக்கிவிடும். எனவே பாதுகாப்பான பயணம் என்பது அனைவருக்கும் உறுதியாகும்.

இந்த தொழில்நுட்பத்திற்கான காப்புரிமையையே ஹோண்டா தற்போது பெற்றிருக்கின்றது. இது எப்படி செயல்படும் என்பதற்கான செயல்முறை படத்தையும் அது வெளியிட்டிருக்கின்றது. மனதில் நினைத்ததை வைத்தே ஒரு இருசக்கர வாகன ஓட்டியால் வீலிங் செய்ய முடியும் என்பதை இந்த படங்கள் விளக்குகின்றன. இதுபோன்ற பல்வேறு செயல்களை புதிய தொழில்நுட்பத்தின் வாயிலாக செய்ய முடியும் என ஹோண்டா தெரிவித்துள்ளது. இப்படி ஒரு தொழில்நுட்பம் பயன்பாட்டிற்கு வந்தால் புள்ளிங்கோ இளைஞர்களை கையிலேயே பிடிக்க முடியாது.

எனவே, இந்த தொழில்நுட்பம் நடைமுறைக்கு சாத்தியமா என்பது தெரியவில்லை. இருப்பினும், ஹோண்டா அதன் எதிர்கால தயாரிப்புகளில் இதனை அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுபோன்ற விநோதமான தொழில்நுட்பம் பற்றி ஹோண்டா ஆராய்வதும், கண்டுபிடிப்பதும் முதல் முறையல்ல. கடந்த 2017ம் ஆண்டில் இதேபோன்று, செல்ஃப் பேலன்ஸிங் தொழில்நுட்பத்தை ஹோண்டா அறிமுகப்படுத்தியிருந்தது.

இந்த தொழில்நுட்பம் ஸ்டாண்ட் போடவில்லை என்றாலும் பைக்கை சாயாமல் நிற்க வைக்க உதவும். இதைப் போன்றே தற்போதைய மூளையைப் படிக்கும் புதிய தொழில்நுட்பமும் ஹோண்டா இருசக்கர வாகனத்தில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த தொழில்நுட்பத்தைக் குறிப்பிட்ட சில அம்சங்களை மட்டும் கட்டுப்படுத்துகின்ற வகையில் அது அறிமுகம் செய்யலாம் என யூகிக்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








