ஜப்பானிய தரத்தில் ஸ்கூட்டர், பைக்குகளுக்கான ஸ்பெஷல் எஞ்ஜின் ஆயில் அறிமுகம்... பிரபல நிறுவனம் அதிரடி!
பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனம் ஒன்று இந்தியாவில் இருசக்கர வாகனங்களுக்கான பிரத்யேக எஞ்ஜின் ஆயில்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

இருசக்கர வாகன உற்பத்தியில் ஈடுபட்டு வரும் ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் நிறுவனம், டூ வீலர்களுக்கான பிரத்யேக எஞ்ஜின் ஆயிலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. ரெப்சோல் எனும் லூப்ரிகண்ட் ஆயில் நிறுவனத்துடன் இணைந்தே ஹோண்டா இந்த ஆயிலை அறிமுகப்படுத்தியுள்ளது. ரெப்சோல் ஓர் ஸ்பெயின் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் மிகப்பெரிய எஞ்ஜின் ஆயில் உற்பத்தி நிறுவனம் ஆகும்.

இந்த நிறுவனத்துடன் இணைந்தே 'ஹோண்டா ரெப்சோல் மோட்டோ பைக்கர்' மற்றும் 'ஹோண்டா ரெப்சோல் மோட்டோ ஸ்கூட்டர்' எனும் இரு விதமான எஞ்ஜின் ஆயில்களை ஹோண்டா அறிமுகப்படுத்தியுள்ளது. இவ்விரு எஞ்ஜின் ஆயில்களும் ஹோண்டாவின் அங்கீகரிக்கப்பட்ட இருசக்கர வாகன சர்வீஸ் மையம் மற்றும் உதிரி பாகம் விற்பனையகங்களில் விற்பனைக்குக் கிடைக்கும்.

இந்த புதிய ஆயில்களின் அறிமுகம்குறித்து நிறுவனம் கூறியதாவது, "எஞ்ஜின் ஆயில் வாகனங்களின் ஆயுளைப் பாதுகாக்க உதவும். எஞ்ஜினுக்கான பாதுகாப்பை மேம்படுத்தும். இதன் விலை குறைவு என்பதால், குறைந்த பராமரிப்பு செலவில் மேம்படுத்தப்பட்ட எஞ்ஜின் செயல்திறனைப் பெற முடியும். ஹோண்டா ரெப்சோல் மோட்டோ பைக்கர் மற்றும் மோட்டோ ஸ்கூட்டர் எஞ்ஜின் ஆயில்கள், விரைந்த செயல்திறன் மற்றும் ஆக்சலரேஷனுக்கு வழி வகுக்கும்" என கூறியுள்ளது.

எஞ்ஜின் ஆயில்கள் பிரத்யேகமாக இரு தரங்களில் விற்பனைக்கு வருகின்றது. ஹோண்டா ரெப்சோல் மோட்டோ பைக்கர் 10டபிள்யூ30 எம்ஏவிலும், ஹோண்டா ரெப்சோல் மோட்டோ ஸ்கூட்டர் 10டபிள்யூ30 எம்பி தரத்திலும் உள்ளது. இதன் பொருள் இரண்டு ஆயில்களும் ஒரே பாகுத்தன்மை எண்களைக் கொண்டிருப்பதை உறுதி செய்கின்றது. இந்த பாகுதன்மை, எண்ணெய் குளிர்ச்சியாக இருக்கும்போது 10 ஆகவும், உகந்த இயக்க வெப்பநிலையில் 30 ஆகவும் மாறிவிடும் என்பதையே இந்த எண்கள் குறிக்கின்றன.

ஜப்பானிய தானியங்கி தர நிர்ணய அமைப்பு மதிப்பீட்டின்படி இந்த ஆயில்களின் தரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது நிர்ணயித்த தரத்தின் அடிப்படையிலேயே எம்ஏ மற்றும் எம்பி என்ற தர மதிப்பு ஆயில்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எம்ஏ என்பது மேனுவல் கியர்பாக்ஸிற்கு உகந்தது என்பதையும், எம்பி என்பது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுக்கானது என்பதையும் குறிக்கும் சொல்லாக உள்ளது.

இரு எஞ்ஜின் ஆயில்களும் 800 எம்எம், 900 எம்எல் மற்றும் 1000 எம்எல் ஆகிய அளவுகளின் அடிப்படையில் விற்பனைக்கு வந்துள்ளது. எஞ்ஜின் ஆயில் கெப்பாசிட்டிக்கு ஏற்ப தேர்ந்தெடுக்கும் வகையில் இத்தனை அளவுகளின் அடிப்படையில் ஹோண்டா ஆயிலை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. ஹோண்டா நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையகங்கள் மட்டுமின்றி பிற வாகன கூறுகள் விற்பனையகங்களில் இந்த ஆயில் கிடைக்கும் என கூறப்படுகின்றது.

இந்த புதிய எஞ்ஜின் ஆயில்கள்குறித்து பேசிய ஹோண்டா மோட்டார் சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா பிரைவேட் லிமிடெட்டின் வாடிக்கையாளர் சேவை பிரிவின் மூத்த துணைத் தலைவர் பிரதீப் குமார் பாண்டே, "எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தரமான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்கும் நோக்கத்துடன், ரெப்சோல் லூப்ரிகண்டுகளுடன் கைகோர்த்துள்ளோம். சிறப்பான முறையில் ஹோண்டா ரெப்சோல் மோட்டோ எஞ்ஜின் ஆயில்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. இந்த ஆயிலை ஹோண்டா இருசக்கர வாகனங்களின் எஞ்ஜினுக்கு பயன்படுத்தலாம் என ஹோண்டா மோட்டார் கோ லிமிடெட், ஜப்பான் ஒப்புதல் அளித்துள்ளது" என்றார்.

தொடர்ந்து பேசிய ரெப்ஸோல் நிறுவனத்தின் இயக்குனர் கிளாரா வெலாஸ்கோ, "ரெப்சோல் மற்றும் ஹோண்டா ஆகியவை 26 ஆண்டுகளாக ரெப்சோல் ஹோண்டா மோட்டோஜிபி குழுவில் பங்காளிகளாக இருந்து வருகின்றன. எஞ்ஜின் ஆயிலை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதன் மூலம் எங்களின் கூட்டணி மேலும் வலுவடைந்துள்ளது. இதில் எங்களுக்கு மகிழ்ச்சி. இது எங்கள் தயாரிப்புகளின் வரம்பை விரிவாக்க அனுமதிக்கும்" என கூறினார்.


Click it and Unblock the Notifications








