ஹோண்டா பைக், ஸ்கூட்டர்களுக்கு எளிய கடன் திட்டங்கள் அறிமுகம்... முழு விபரம்!
புதிய ஹோண்டா பைக், ஸ்கூட்டர்களை வாங்கும்போது கடன் பெறும் வாடிக்கையாளர்களுக்கு மாதத் தவணை சுமையை குறைக்கும் விதத்தில் சிறப்பு திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

கொரோனா பிரச்னையால் வாகன விற்பனை அடியோடு பாதித்தது. இந்த இக்கட்டான தருணத்தை கடந்து, சிறப்பான வர்த்தகத்தை பெறுவதற்கான முயற்சிகளில் வாகன நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில், ஹோண்டா இருசக்கர வாகனம் பல சிறப்பு கடன் திட்டங்களை அறிவித்துள்ளது.

இதன்படி, ஐடிஎஃப்சி மற்றும் எச்டிஎஃப்சி வங்கிகள் மூலமாக சிறப்பு கடன் திட்டங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது ஹோண்டா நிறுவனம்.

புதிய ஹோண்டா பைக் அல்லது ஸ்கூட்டரை வாங்கும் வாடிக்கையாளர்கள் மேற்கண்ட இரு வங்கிகள் மூலமாக கடன் திட்டத்தை தேர்வு செய்தால் அதிகபட்சமாக வாகனத்தின் விலையில் 95 சசவீதம் வரை கடன் பெற முடியும்.

இதுதவிர்த்து, கிரெடிட் கார்டு பயன்படுத்தி ஹோண்டா பைக் அல்லது ஸ்கூட்டரை வாங்குவோருக்கு கூடுதல் சேமிப்பை பெறும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

எஸ்பிஐ வங்கியின் கிரெடிட் கார்டு பயன்படுத்தினால், கடன் தொகையில் 5 விழுக்காடு வரை கேஷ் பேக் சேமிப்புச் சலுகையை பெற முடியும்.

அதேநேரத்தில், ஹோண்டா நிறுவனம் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யும் ஹோண்டா ஆக்டிவா 6ஜி, சிடி110 ட்ரீம், ஷைன், எஸ்பி125, ஆக்டிவா 125, க்ரெஸியா, டியோ, லிவோ ஆகிய மாடல்களுக்கு இந்த ஆஃபரை குறிப்பிட்ட ஹோண்டா ஷோரூம்களில் மூலமாக பெற முடியும்.

கடைசியாக மற்றொரு சிறப்பு திட்டத்தின் மூலமாக, 36 மாதங்களில் திருப்பிச் செலுத்தும் கால அளவு கொண்ட கடன் திட்டத்திற்கு முதல் மூன்று மாதங்களுக்கான மாதத் தவணையில் 50 சதவீதம் மட்டுமே செலுத்தினால் போதுமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்புக்கு இடையில் பணிக்கு செல்ல வேண்டியவர்கள் பொது போக்குவரத்தை தவிர்த்து, தனிநபர் போக்குவரத்து சாதனங்களில் செல்ல விரும்புகின்றனர். இதனால், இருசக்கர வாகன விற்பனை அதிகரித்துள்ளது. இந்த சூழலில், ஹோண்டா இருசக்கர வாகனத்தை வாங்க விரும்புவோருக்கு, இந்த புதிய கடன் திட்டங்கள் சிறப்பானதாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








