பெரும் தள்ளுபடியுடன் ஹோண்டா பிஎஸ்4 பைக், ஸ்கூட்டர்கள் விற்பனை
அதிகபட்ச தள்ளுபடியுடன் பிஎஸ்4 பைக், ஸ்கூட்டர்களை நூதன முறையில் விற்பனை செய்கிறது ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம். இதுதொடர்பாக, கூடுதல் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

கடந்த மார்ச் 31ந் தேதியுடன் பிஎஸ்4 வாகனங்களை விற்பனை செய்வதற்கான காலக்கெடு முடிவுக்கு வந்தது. இதனையடுத்து, பிஎஸ்6 எஞ்சின் பொருத்தப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வது இந்தியாவில் கட்டாயமானது. ஆனால், பல வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் டீலர்களில் பல லட்சம் பிஎஸ்4 வாகனங்கள் இருப்பில் தேங்கின.

மேலும், கொரோனா லாக்டவுன் போடப்பட்டதால், இறுதிக்கட்டத்தில் பிஎஸ்4 வாகனங்களை விற்பனை செய்வதில் பெரும் நெருக்கடி ஏற்பட்டது. இதற்கு தீர்வு காணும் வகையில், பிஎஸ்4 வாகனங்களை விற்பனை செய்வதற்கு உச்சநீதிமன்றத்தில் வாகன உற்பத்தியாளர் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால், போதுமான கால அவகாசம் கொடுக்கப்பட்டதாக கூறி முதலில் இந்த கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம், கொரோனா சூழலை மனதில் வைத்து லாக்டவுன் முடிந்த பின்னர் 10 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது. எனினும், இருப்பில் தேங்கியிருக்கும் 10 சதவீத வாகனங்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால், உச்சநீதிமன்றத்தில் உத்தரவை மீறும் வகையில் இருப்பில் இருக்கும் 10 சதவீதத்திற்கும் அதிகமான பிஎஸ்4 வாகனங்களை டீலர்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனால், அதிருப்தி அடைந்த உச்சநீதிமன்றம், தனது உத்தரவை வாபஸ் வாங்கியது.

இந்த சூழலில், பல நிறுவனங்கள் பிஎஸ்4 வாகனங்களை நஷ்ட கணக்கில் எழுதின. ஆனால், ஹோண்டா இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனம் நூதன வழியை கண்டுபிடித்து, அதன்படி இருப்பில் உள்ள தனது பிஎஸ்4 வாகனங்களை அதிகபட்ச தள்ளுபடியுடன் விற்பனை செய்யத் துவங்கி இருக்கிறது.

இதற்காக, தனது இந்திய இணையதளத்தில் ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் பிரத்யேக பக்கம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பக்கம் Unused Vehicles என்ற பெயரில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், Unthinkable Prices என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, இதுவரை பயன்படுத்தப்படாத வாகனத்தை அதிகபட்ச தள்ளுபடியுடன் பெறுவதற்கான வாய்ப்பாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன்படி, இருப்பில் உள்ள பிஎஸ்-4 பைக், ஸ்கூட்டர்களை தனது டீலர்கள் பெயரில் பதிவு செய்து, அதனை தற்போது வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்கிறது ஹோண்டா.

டீலரின் பெயரில் இருந்து வாடிக்கையாளர் தனது பெயருக்கு மாற்றிக் கொள்ளலாம். இது செகண்ட் ஹேண்ட் வாகனமாக கருதப்படும். ஆனால், இதுவரை பயன்படுத்தப்படாத புதிய வாகனத்தை இவ்வாறு வாங்குவதற்கான வாய்ப்பை வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

இந்த முறையில் அதிகபட்ச தள்ளுபடியுடன் ஹோண்டா பைக், ஸ்கூட்டர்களை வாங்க விரும்புவோர், ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா இணையதளத்திற்கு சென்று, அங்கு Unused Vehicles என்ற பக்கத்திற்கு சென்று தங்களது பெயர், முகவரி, மொபைல் எண், அருகிலுள்ள டீலர் ஆகியவற்றை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும்.

பதிவு செய்யும் வாடிக்கையாளர்களை ஹோண்டா டீலர் பிரதிநிதிகள் தொடர்பு கொண்டு கூடுதல் விபரங்களை வழங்குவார்கள். இந்த முறையில் அதிகபட்ச தள்ளுபடியை பெறுவதற்கான வாய்ப்பு வாடிக்கையாளர்களுக்கு உள்ளது.


Click it and Unblock the Notifications








