சென்னையில் விறுவிறுப்பாக நடந்த தேசிய மோட்டார்சைக்கிள் பந்தயம்!
கொரோனா பிரச்னையால் தள்ளி வைக்கப்பட்ட தேசிய மோட்டார்சைக்கிள் பந்தயத்தின் முதல் சுற்றுப் போட்டிகள் கடந்த வார இறுதியில் சென்னை இருங்காட்டுக் கோட்டை பந்தய களத்தில் விறுவிறுப்பாக நடந்தது.

தேசிய பைக் பந்தயம்
இந்தியாவின் மிகப்பெரிய மோட்டார்சைக்கிள் பைக் பந்தயமாக தேசிய மோட்டார்சைக்கிள் பந்தயம் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்திய மோட்டார்ஸ்போர்ட்ஸ் சம்மேளனம் சார்பில் தேசிய அளவில் நடைபெறும் இந்த பந்தயத்தில் இந்தியாவின் முன்னணி பைக் பந்தய வீரர்கள், வளர்ந்து வரும் இளம் வீரர்கள் மற்றும முன்னணி இருசக்கர வாகன நிறுவனங்களின் அணிகளும் பங்கேற்கின்றன.
கொரோனா பிரச்னை
தேசிய மோட்டார்சைக்கிள் ரேஸிங் பந்தயம் ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் நடத்தப்படுகிறது. ஆனால், இந்த ஆண்டு கொரோனா பிரச்னை காரணமாக, இந்த பந்தயம் தள்ளி வைக்கப்பட்டு இருந்தது. இந்த ஆண்டு போட்டியின் முதல் சுற்று பந்தயங்கள் டிசம்பர் 11-13 மற்றும் டிசம்பர் 18-20 ஆகிய இரண்டு வார இறுதிகளில் நடத்தப்படுகின்றன.
முதல் சுற்று
இந்த நிலையில், அரசு வழிகாட்டுதல்களுடன் முதல் சுற்றுக்கான பந்தயங்கள் கடந்த வெள்ளிக்கிழமை துவங்கி நேற்று வரை மூன்று நாட்கள் நடந்தது. இந்த பந்தயத்தில் ஹோண்டா, டிவிஎஸ், யமஹா மற்றும் கேடிஎம் மற்றும் மோட்டார்சைக்கிள் பந்தய பைக்குகளை உருவாக்குவதில் பிரபலமான அணிகளும் பங்கு கொண்டன. மேலும், நாட்டின் முன்னணி வீரர்கள், வீராங்கனைகள், புதுமுக வீரர்களும் பங்கேற்றனர்.
பந்தய பிரிவுகள்
தேசிய மோட்டார்சைக்கிள் பந்தயமானது 165சிசி மற்றும் 301-400சிசி ஆகிய திறன் கொண்ட பைக்குகளை பயன்படுத்தும் வகையில் நடத்தப்படுகிறது. இதில், அனுபவம் வாய்ந்த வீரர்களுக்கான பொதுப்பிரிவு, புதுமுக வீரர்களுக்கான நோவிஸ், ஆட்டோமொபைல் பத்திரிக்கையாளர்களுக்கான மீடியா பிரிவு மற்றும் மகளிர் பிரிவுகளில் நடத்தப்படுகிறது.
அசத்திய வீரர்கள்
கடந்த மூன்று நாட்களாக நடந்த முதல் சுற்று பந்தயங்களில் 301-400சிசி பிரிவில் பெங்களூர் ரேஸிங் கான்செப்ட் அணி வீரர் அனிஷ் தாமோதர் ஷெட்டி இரண்டு பந்தயங்களிலும் வெற்றி பெற்றார். 165சிசி புரோஸ்டாக் பிரிவின் இரண்டு பந்தயங்களில் ஹோண்டா எருலா ரேஸிங் அணி வீரர் மதன குமார் மற்றும் டிவிஎஸ் ரேஸிங் அணி வீரர் ஜெகன் குமார் ஆகியோர் வெற்றி பெற்று அசத்தினர்.
இளம் வீரர்களுக்கான பந்தயம்
இதனிடையே, மெட்ராஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ் க்ளப் நடத்திய இளம் வீரர்களை கண்டறிவதற்கான இடிமிட்சூ ஹோண்டா டேலன்ட் கப் போட்டியின் என்எஸ்எஃப்250ஆர் ரக பைக் பந்தயத்தில் புனே நகரை சேர்ந்த 14 வயது சர்தக் சவான் வெற்றி பெற்றார்.
இவரை தொடர்ந்து சென்னையை சேர்ந்த கெவின் குயின்ட்டால் மற்றும் வருண் சதாசிவம் அடுத்தடுத்த இடங்களை பிடித்தனர். சிபிஆர்150ஆர் நோவிஸ் க்ளாஸ் பந்தயத்தில் ஷ்யாம் பாபு முதலிடம் பிடித்தார். இந்த போட்டியில் பங்கேற்ற இளம் வீரர்கள் அனுபவம் வாய்ந்த வீரர்களை போல மிகவும் அனாயசமாக ரேஸ் பைக்கை ஓட்டி அசத்தினர்.
அடுத்த சுற்று விபரம்
தேசிய மோட்டார்சைக்கிள் ரேஸிங் சாம்பியன்ஷிப் பந்தயத்தின் இரண்டாவது சுற்று பந்தயங்கள் வரும் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக் கிழமை வரை சென்னை இருங்காட்டுக் கோட்டை பந்தய களத்தில் நடைபெற இருக்கின்றன. அடுத்த வார இறுதியில் சாம்பியன் பட்டம் பெறும் வீரர்கள் அறிவிக்கப்படுவர்.
பார்வையாளர் அனுமதி இல்லை
கொரோனா பிரச்னை காரணமாக, அடுத்த வாரமே இரண்டாவது சுற்றுப் பந்தயங்களும் நடத்தப்பட உள்ளன. மேலும், அரசு வழிகாட்டு முறைகளின்படி பார்வையாளர்களுக்கு இந்த பந்தயங்களை காண அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








