ஜாவா பெராக் பைக்கை முன்பதிவு செய்ய வாடிக்கையாளர்கள் வெறித்தனம்... இணையதளம் முடங்கியது!
ஜாவா பெராக் பைக்கை முன்பதிவு செய்வதற்கு வாடிக்கையாளர்கள் முண்டியடித்ததால், இணையதளம் முடங்கியது.

கடந்த 2018 ஆண்டு நவம்பர் 15ந் தேதி ஜாவா 300, ஜாவா 42 பைக்குகளுடன் பெராக் என்ற பாபர் வகை மோட்டார்சைக்கிளும் அறிமுகம் செய்யப்பட்டது. ஜாவா 300 மற்றும் ஜாவா 42 பைக்குகள் விற்பனைக்கு வந்த நிலையில், ஓர் ஆண்டுக்கும் மேலாக பெராக் பைக் சந்தைக்கு கொண்டு வரப்படவில்லை.

இந்த நிலையில், இந்தியாவில் வர்த்தகத்தை துவங்கிய முதலாமாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு பெராக் பைக்கை சந்தைக்கு கொண்டு வருவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஜாவா வெளியிட்டது.

கடந்த 2018ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டபோது, ரூ.1.89 லட்சம் என்று விலை நிர்ணயிக்கப்பட்டு இருந்த நிலையில், கடந்த நவம்பரில் விலை மாற்றியமைக்கப்பட்டு ரூ.1.95 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும் என்று ஜாவா நிறுவனம் அறிவித்தது.

ஜாவா பெராக் பைக்கை எதிர்பார்த்து காத்துக் கிடந்த வாடிக்கையாளர்களுக்கு புத்தாண்டு பரிசாக, ஜனவரி 1 (நேற்று) மாலை 6 மணிக்கு முன்பதிவு துவங்கப்பட்டது. ரூ.10,000 முன்பணத்துடன் முன்பதிவு ஏற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. முன்பதிவு ரத்து செய்தால் முன்பணத்தை திரும்ப பெற முடியும்.

ஜாவா 300 மற்றும் 42 பைக்குகளை முன்பதிவு செய்து பல மாதங்கள் காத்திருக்கும் நிலை பெராக் பைக்கிற்கும் ஏற்படும் வாய்ப்புள்ளது. அதேபோன்று, குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பெராக் பைக்கிற்கு முன்பதிவு ஏற்கவும், அந்த பைக்குகள் மூன்று மாதத்தில் டெலிவிரி கொடுக்கவும் ஜாவா திட்டமிட்டுள்ளது. இதனால், முதலில் முன்பதிவு செய்துவிட வேண்டும் என்ற முனைப்பில் வாடிக்கையாளர்கள் முண்டியடித்தனர்.

ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் ஒரே நேரத்தில் பெராக் பைக்கை முன்பதிவு செய்வதற்கு ஜாவா இணையதளத்தை முற்றுகையிட்டதால், இணையதளம் செயல் இழந்தது. அதிகம் பேர் ஒரே நேரத்தில் முன்பதிவு செய்ய முற்படுவதால், இணையதளம் முடங்கி இருக்கிறது. விரைவில் பிரச்னை சரிசெய்யப்பட்டு மீண்டும் முன்பதிவு துவங்கும் என்று ஜாவா அறிவித்தது.

இந்த நிலையில், ஜாவா பெராக் பைக்கிற்கான முன்பதிவு சீராகி இருப்பதாக தெரிகிறது. ஜாவா 42 பைக்கின் அடிப்படையில் ஒற்றை இருக்கையுடன் வால் இல்லாத டிசைனில் பாபர் வகை பைக் மாடலாக பெராக் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த பைக்கில் இருக்கும் 334 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 30 எச்பி பவரையும், 31 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த பைக்கில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் உள்ளன.

இந்த பைக்கில் இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டுள்ளது. டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக இடம்பெற்றுள்ளது.

இது தனித்துவமான பைக் மாடலாக இருப்பதால், வாடிக்கையாளர்கள் ஆவலோடு முன்பதிவு செய்து வருகின்றனர். பிஎஸ்-6 எஞ்சினுடன் வரும் இந்த புதிய பைக்கின் டெலிவிரி கொடுக்கும் பணிகள் வரும் ஏப்ரல் மாதம் 2ந் தேதி முதல் துவங்கும் என்று ஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவனம் அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








