ரூ.3,200 கோடி நஷ்டம்... அமெரிக்க எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ப்ராண்ட்டை கழட்டிவிடும் மஹிந்திரா...
மஹிந்திரா க்ரூப்பின் எலக்ட்ரிக் இரு-சக்கர வாகன ப்ராண்ட்டான ஜென்ஸி இந்தியாவில் தனது தயாரிப்புகளின் விற்பனையை அடுத்த 6 மாதத்திற்குள்ளாக நிறுத்தி கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

எலக்ட்ரிக் பை-சைக்கிள், ஸ்கூட்டர் மற்றும் இ-பைக்குகளை விற்பனை செய்துவரும் கலிஃபோர்னியாவை சேர்ந்த ஜென்ஸி ப்ராண்ட் தனது தயாரிப்புகளை பிரத்யேகமாக அமெரிக்காவில் சந்தைப்படுத்தி வருகிறது.

இந்த ப்ராண்ட்டை மஹிந்திரா & மஹிந்திரா க்ரூப் சொந்தமாகி வாங்கி இந்திய சந்தையில் அதன் தயாரிப்பு மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் வெளிவந்த 2019-20 பொருளாதார ஆண்டின் நான்காம் கால்பகுதியின் முடிவின் எதிரொலியாக இந்த அமெரிக்க ப்ராண்ட்டை மூடவுள்ளதாக மஹிந்திரா க்ரூப்பின் இயக்குனர் பவன் கொய்ன்கா தெரிவித்துள்ளார்.

இதனால் அடுத்த ஆறு மாதத்திற்குள்ளாக ஜென்ஸி ப்ராண்ட் இந்தியாவில் இருந்து நடையை கட்டவுள்ளது. இருப்பினும் ஜென்ஸி நிறுவனம் உருவாக்கியுள்ள கண்டுப்பிடிப்புகளும், தயாரிப்புகளின் டிசைன்களும் மஹிந்திரா எலக்ட்ரிக் அல்லது மஹிந்திரா க்ரூப்பில் மற்ற ப்ராண்ட் எதாவது ஒன்றிற்கு பயன்படுத்தப்படும் எனவும் கொய்ன்கா கூறியுள்ளார்.

ஜென்ஸி ப்ராண்ட்டின் எலக்ட்ரிக் பை-சைக்கிள்கள் அமெரிக்காவில் பொது பைக் பகிர்வு அமைப்பாக வழங்கப்பட்டு வருகின்றன. இதன் ஜென்ஸி 2.0 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் டெலிவிரி பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வரும் அதேநேரத்தில் கலிஃபோர்னியாவில் பொது ஸ்கூட்டர் பகிர்வு சிஸ்டமாகவும் உள்ளது.

இரண்டு வருடங்களுக்கு முன்பு மஹிந்திரா க்ரூப் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தலாம் என திட்டமிட்டு வந்த நேரத்தில் சரியாக ஜென்ஸி ப்ராண்ட்டின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இங்கு சோதனையில் ஈடுப்பட்டு வந்தன. பிறகு ஒன்றாக இணைந்த இந்த இரு நிறுவனங்களும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை கடந்த இரு வருடங்களாக சந்தைப்படுத்தி வருகின்றன.

ஆனால் தற்போது இவை இரண்டும் பிரியும் நேரம் வந்துவிட்டது. இந்த பிரிவிற்கு காரணமாக மஹிந்திரா க்ரூப் வெளியிட்டுள்ள நிறுவனத்தின் பொருளாதார முடிவில் 2020 ஜனவரி மாதத்தில் இருந்து மார்ச் மாதத்திற்கு உள்ளாக சுமார் ரூ.3,355 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் இந்த காலக்கட்டத்தில் மஹிந்திரா & மஹிந்திரா க்ரூப் ரூ.969 கோடி லாபத்தை பார்த்திருந்தது.

மஹிந்திரா க்ரூப் ஒரு முறை குறைப்பாட்டு தொகையாக ரூ.3,577 கோடியை பதிவு செய்துள்ளது. இந்த குறைப்பாட்டிற்கு சில துணை நிறுவனங்கள், கூட்டாளிகள், கூட்டு நிறுவனங்கள் மற்றும் கொரோனா வைரஸ் உள்ளிட்டவை தான் காரணங்களாக உள்ளன என்று மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக இதில் 80 சதவீத குறைப்பாடு ஷாங்யாங் முதலீட்டாலும், சில மற்ற நாட்டு துணை நிறுவனங்களாலும் தான் ஏற்பட்டுள்ளன. இதனால் தான் ஜென்ஸி ப்ராண்ட் உடனான கூட்டணியை நிறுத்தி கொள்ள மஹிந்திரா க்ரூப் முடிவெடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications








