புதிய ஹோண்டா ஃபயர்பிளேடு சூப்பர் பைக் மாடல்களுக்கு இந்தியாவில் முன்பதிவு துவங்கியது!
புதிய ஹோண்டா ஃபயர்பிளேடு சூப்பர் பைக்குகளுக்கு இந்தியாவில் முன்பதிவு துவங்கப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பான கூடுதல் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

ஹோண்டா நிறுவனத்தின் அதிசக்திவாய்ந்த சூப்பர் பைக் மாடல்களாக ஃபயர்பிளேடு விற்பனையில் உள்ளது. இந்த பைக்கின் ஸ்டான்டர்டு மாடல் சிபிஆர் 1000ஆர்ஆர் என்ற பெயரிலும், அதிக சிறப்பம்சங்கள் கொண்ட மாடல் ஃபயர்பிளேடு எஸ்பி என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது.

மோட்டோஜீபி பைக் பந்தயங்களில் பயன்படுத்தப்படும் தனது ரேஸ் பைக்குகளின் அடிப்படையில் சாதாரண சாலையில் ஓட்டுவதற்கு ஏற்ற அம்சங்களுடன் இந்த பைக் மாடல்களை ஹோண்டா விற்பனை செய்து வருகிறது.இந்த நிலையில், சந்தைப் போட்டியை மனதில் வைத்து அதிக சிறப்பம்சங்களுடன் இந்த பைக் மாடல்கள் மேம்படுத்தப்பட்டன.

கடந்த ஆண்டு இத்தாலியிலுள்ள மிலன் நகரில் நடந்த ஐக்மா மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் இந்த புதிய பைக் மாடல்களை ஹோண்டா அறிமுகம் செய்தது. உலகின் பல்வேறு நாடுகளிலும் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டு வரும் இந்த பைக் விரைவில் இந்தியாவிலும் வர இருக்கிறது.

இதற்கு முன்னோட்டமாக, தற்போது அதிகாரப்பூர்வமாக முன்பதிவு துவங்கப்பட்டு இருக்கிறது. நாடு முழுவதும் உள்ள ஹோண்டா பிக்விங் மோட்டார்சைக்கிள் ஷோரூம்களில் இந்த பைக்கிற்கு முன்பதிவு செய்யப்படுகிறது. இந்த பைக் மாடல்கள் முழுமையாக கட்டமைக்கப்பட்ட நிலையில், இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட உள்ளன.

ஹோண்டா ரேஸிங் காரப்பரேஷன் பிரிவின் ஆலோசனைகள் மற்றும் ஒத்துழைப்புடன் இந்த பைக் மாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மோட்டோஜீபி பைக் பந்தயங்களில் பயன்படுத்தப்படும் ஹோண்டா ஆர்சி213வி மோட்டோஜீபி பைக்கின் எஞ்சின்தான் இந்த பைக் மாடல்களில் சில மாறுதல்களுடன் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

முந்தைய மாடல்களைவிட இந்த புதிய மாடல்கள் செயல்திறனில் வெகுவாக மேம்படுத்தப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக, பந்தய களங்களில் அதிக செயல்திறன், நிலைத்தன்மையை வழங்கும் விதத்தில், அதிக முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ளன.

புதிய ஹோண்டா சிபிஆர் 1000 ஆர்ஆர் ஃபயர்பிளேடு பைக்கில் நான்கு சிலிண்டர்கள் கொண்ட 999 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 214.5 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். மேலும், அலுமினியம் பிஸ்டன்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பதால், முந்தைய மாடலைவிட எடை 5 சதவீதம் குறைந்துள்ளது.

இந்த பைக் மாடல்களில் மிக உயரிய பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த பைக்குகளில் 9 லெவல் டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், பாஷ் நிறுவனத்திடம் இருந்து பெறப்படும் 6 ஆக்சிஸ் ஐஎம்யூ, லான்ச் கன்ட்ரோல், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், 5.0 அங்குல திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இந்தியாவில் இந்த புதிய பைக் மாடல்களுக்கான விலை விபரம் வெளியிடப்படவில்லை. மிக விரைவில் விலை விபரம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஆகஸ்ட் மாத இறுதியில் இருந்து டெலிவிரி கொடுக்கப்படும் என்று ஹோண்டா தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








