இந்தியாவின் அதிவேக எலெக்ட்ரிக் பைக் வெளியீடு... அடுத்த மாதம் முதல் டெலிவிரி!
இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட அதிவேக எலெக்ட்ரிக் பைக் மாடல் வெளியிடப்பட்டு இருக்கிறது. அடுத்த மாதம் முதல் இந்த பைக்கின் டெலிவிரிப் பணிகள் துவங்கப்பட உள்ளன.

வாகனங்கள் வெளியிடும் புகையால் ஏற்படும் மாசுபாட்டை குறைக்கும் விதமாக புகையில்லா மின்சார வாகன பயன்பாட்டை அதிகரிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இதனால், இந்த சந்தையில் பல புதிய நிறுவனங்கள் மின்சார வாகனங்களுடன் களமிறங்கி வருகின்றன.

அந்த வகையில், நொய்டாவை சேர்ந்த ஒன் எலெக்ட்ரிக் நிறுவனம் புதிய மின்சார பைக்கை உருவாக்கி இருக்கிறது. நகர்ப்புற பயன்பாட்டை மனதில் வைத்து இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த பைக்கிற்கு KRIDN என்ற பெயரிடப்பட்டு இருக்கிறது.

இந்த புதிய மின்சார பைக் அதிவேகத்தில் செல்லும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் பைக் மாடலாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, மணிக்கு 95 கிமீ வேகம் வரை செல்லும் என்று ஒன் எலெக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த பைக்கின் பேட்டரியும், மின் மோட்டாரும் இணைந்து 165 என்எம் டார்க் திறனை வழங்க வல்லதாக இருக்கிறது. எனவே, நகர்ப்புறத்தில் ஓட்டுவதற்கு சிறப்பானதாக இருக்கும்.

முழுக்க முழுக்க இந்திய சாலை நிலைகளை மனதில் வைத்து இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட மின்சார பைக் மாடலாக இது வர இருக்கிறது. தற்போது இந்த பைக்கிற்கு விற்பனை செய்வதற்கான அனைத்து அனுமதிகளும் அரசிடம் இருந்து பெறப்பட்டுவிட்டதாக ஒன் எலெக்ட்ரிக் தெரிவித்துள்ளது.

முதல்கட்டமாக சென்னை, பெங்களூர், டெல்லி மற்றும் மும்பை நகரங்களில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து நாட்டின் இதர முக்கிய நகரங்களிலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

ரூ.1.29 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய ஒன் KRIDN எலெக்ட்ரிக் பைக் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. டாக்சி மார்க்கெட்டிற்காக பிரத்யேக மாடலையும் விற்பனை செய்ய உள்ளது.

மேலும், அடுத்த ஆண்டு 75 கிமீ வேகத்தில் செல்லும் ரூ.1 லட்சம் பட்ஜெட்டிலான புதிய எலெக்ட்ரிக் பைக் மாடலையும் கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளதாக ஒன் எலெக்ட்ரிக் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








