பஜாஜ் வாகன உற்பத்தி ஆலையில் கொரோனா கோரத்தாண்டவம்... 140 பேர் பாதிப்பு, 2 பேர் உயிரிழப்பு!
பஜாஜ் வாகன உற்பத்தி ஆலையில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடியதில், 140 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா பிடி இறுகி வருகிறது. குறிப்பாக, பெருநகரங்களில் கொரோனா தனது கோர முகத்தை காட்டி வருகிறது. மேலும், இந்தியாவின் பட்டி தொட்டி எங்கும் நீங்கமற நிறைந்துவிடும் வகையில் பரவும் வேகம் உள்ளது. இந்த நிலையில், கொரோனா லாக் டவுன் காரணமாக, பொருளாதாரம் மற்றும் வருவாய் இழப்பால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர்.

அதேபோன்று, பெரும் தொழில் நிறுவனங்களும் வருவாய் இழப்பால் பல ஆயிரம் கோடியை இழந்து தவிக்கின்றன. இந்த நிலையில், பொருளாதார இழப்பை ஓரளவு சரிகட்டும் விதமாக, தகுந்த பாதுகாப்பு வழிமுறைகளுடன் தொழில் நிறுவனங்களை இயக்க அனுமதிக்கப்பட்டது.

கடந்த மாதம் முதல் கொரோனா குறைவான பகுதிகளில் தொழில் நிறுவனங்கள் செயல்பட துவங்கின. கார், பைக் உள்ளிட்ட வாகன உற்பத்தி நிறுவனங்களும் மீண்டும் ஆலைகளை திறந்தன. கடுமையான பரிசோதனைகளுக்கு பின்னரே பணியாளர்கள் வேலைக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த தடுப்பு முறைகளையும் மீறி மாருதி, ஹூண்டாய், டொயோட்டா கார் ஆலைகளில் கொரோனா புகுந்தது. ஆனால், ஒரு சில பேருக்கு மட்டும் இருந்ததால், முன்னதாகவே தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதுடன், உற்பத்தி ஓரிரு தினங்கள் நிறுத்தப்பட்டு, தூய்மை பணிகளுக்கு பின் மீண்டும் இயங்கி வருகின்றன.

இந்த நிலையில், மஹாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்தில் செயல்பட்டு வரும் பஜாஜ் ஆட்டோ வாகன உற்பத்தி ஆலையில் கொரோனா கோரத்தாண்டவமாடி உள்ளது. அங்கு பணி செய்து வரும் 140 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இரண்டு பணியாளர்களும் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து பஜாஜ் ஆட்டோ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்," அவுரங்காபாத் அருகே வாலுஜ் பகுதியில் உள்ள எங்களது வாகன உற்பத்தி ஆலையில் 8,100 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். அதில், 140 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

துரதிருஷ்டவசமாக கொரோனா பாதிப்புடைய இரண்டு பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு ரத்த அழுத்தம், நீரழிவு நோய் ஆகியவை இருந்தது. எங்களது மொத்த பணியாளர்களை ஒப்பிடும்போது தொற்று பாதிப்பு குறைவுதான்," என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு உள்ளவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் செய்யப்பட்டு வருவதுடன், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தும் பணிகளும் நடந்து வருகிறது. எனினும், ஆலையில் தூய்மை பணிகள் செய்யப்பட்டு இயல்பு நிலையுடன் எங்களது இயங்கி வருகிறது..

"ஆலைக்கு பணிக்கு வரும் தொழிலாளர்கள் அனைவருக்கும் எங்களது ஆலையில் உள்ள மருத்துவ பணியாளர்கள் மற்றும் பாதுகாவலர்கள் மூலமாக கடுமையான பரிசோதனைகளுக்கு பின்னரே ஆலைக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்," என்று பஜாஜ் ஆட்டோ தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








