இனி வெஸ்பா-அப்ரில்லா ஸ்கூட்டர்களும் குத்தகைக்கு கிடைக்கும்... சூப்பர் சலுகைகளும் அறிவிப்பு..!
வெஸ்பா மற்றும் அப்ரில்லா ஸ்கூட்டர்களை குத்தகைக்கு வழங்கும் திட்டத்தை பியாஜியோ அறிவித்துள்ளது.

இத்தாலி நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் பியாஜியோ நிறுவனம், அதன் இரு சக்கர வாகனங்களை குத்தகை திட்டத்தின் அடிப்படையில் வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. கோவிட் 19 வைரசால் பிரச்னை உருவாகுவதற்கு முன்னரில் இருந்தே இந்திய வாகனத்துறை கடும் விற்பனை வீழ்ச்சியில் சிக்கித் தவித்து வருகின்றது. இந்த நிலையை மிகவும் மோசமான சூழலாக வைரஸ் பரவல் உருவாக்கியது.

குறிப்பாக, மார்ச் மாதத்திற்கு அடுத்த மாதங்களில், ஒரு சில நிறுவனங்கள் ஒரு யூனிட் வாகனத்தை விற்கக்கூட கடுமையாக திணறின. முழு பொதுமுடக்கத்தின் விளைவாக இந்த நிலை நாடு முழுவதும் காணப்பட்டது. இதனால், இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பான வாகனத்துறை மிகப் பெரிய ஆட்டத்தைச் சந்தித்தது.

இந்த நிலையில் இருந்து மீளும் விதமாகவே வாகன உற்பத்தி நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன. அந்தவகையில், புதிய வாகன விற்பனை மட்டுமின்றி குத்தகைத் திட்டத்தையும் பியாஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. இத்திட்டத்தின்கீழ் வெஸ்பா அல்லது அப்ரில்லா ஸ்கூட்டர்களை இந்நிறுவனம் வழங்க உள்ளது.

குறைந்த முன் தொகை மற்றும் 30 சதவீத தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்க இருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய சேவையின் பக்கம் மக்களைக் கவரும் விதமாக இந்த அதிரடி அறிவிப்பை பியாஜியோ வெளியிட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, கூடுதல் சிறப்பு சலுகையாக முதல் மாத குத்தகை தவணையில் ரூ. 2,500 வரை தள்ளுபடி வழங்க இருப்பதாகவும் பியாஜியோ அறிவித்திருக்கின்றது. இந்த சேவையை தற்போதே சோதனையோட்டமாக தொடங்கப்பட்டிருப்பதால் நாட்டின் குறிப்பிட்ட சில நகரத்தில் மட்டுமே பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

மஹாராஷ்டிராவின் புனே மற்றும் கர்நாடகாவின் பெங்களூரு ஆகிய இரு நகரங்களில் மட்டுமே பியாஜியோ குத்தகை திட்டம் தொடங்கப்பட்டிருக்கின்றது. எனவே, இந்த நகரவாசிகளால் மட்டுமே தற்போது வெஸ்பா மற்றும் அப்ரில்லா ஸ்கூட்டர்களை குத்தகைக்குப் பெற முடியும். விரைவில் நாட்டின் பிற பகுதிகளிலும் இந்த சேவைத் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பியாஜியோவின் இந்த திட்டத்தின் இறுதி காலத்தில், வாடிக்கையாளர்கள் விரும்பினால் குறிப்பிட்ட அந்த ஸ்கூட்டரை சொந்தமாக்கிக் கொள்ளவும் முடியும். இச்சிறப்பு வசதியையும் பியாஜியோ அதன் வாடிக்கையாளர்களுக்கு உருவாக்கிக் கொடுத்துள்ளது. இதுமட்டுமின்றி, விருப்பத்தின் பேரில் புதிய மற்றொரு ஸ்கூட்டருக்கு மாறும் வாய்ப்பையும் குத்தகைத் திட்டத்தின்மூலம் அது வழங்க இருக்கின்றது.

அதிகாரப்பூர்வ வெஸ்பா மற்றும் அப்ரில்லா டீலர்கள் வாயிலாக இந்த சிறப்பு சேவை வழங்கப்பட இருக்கின்றன. இதற்காக ஓடோ (OTO) உடன் பியாஜியோ கூட்டு வைத்திருக்கின்றது. எனவே, இதன் செல்போன் செயலியும் முக்கியம் ஆகும். இதன் வாயிலாகவும் பியாஜியோவின் குத்தகைத் திட்டத்திற்கு வாடிக்கையாளர்களால் விண்ணப்பிக்க முடியும்.

அதேசமயம், இந்த சேவையை முழுமையாக காகித பயன்பாடில்லாமல் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. காகிகத்தை சேமிப்போம், மரத்தைக் காப்போம் மற்றும் டிஜிட்டல் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக இந்த செயலை ஓடோ மற்றும் பியாஜியோ மேற்கொண்டுள்ளது.

பியாஜியோ நிறுவனத்தைப் போலவே இந்தியாவில் பல்வேறு வாகன நிறுவனங்கள் அதன் பிரபல வாகனங்களை குத்தகை திட்டத்திற்கு வழங்க ஆரம்பித்துள்ளன. அதில், டாடா முதல் மாருதி சுசுகி நிறுவனம் வரை அடங்கும். அண்மைக் காலங்களாக நிலவி வரும் விற்பனைச் சரிவை ஈடுகட்டும் விதமாக இத்திட்டத்தை வாகன நிறுவனங்கள் கையிலெடுத்து இருப்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








