ஹைதராபாத் ஐஐடி மாணவர்கள் உருவாக்கிய அதிவேக மின்சார ஸ்கூட்டர்... இதன் விலை எவ்வளவு தெரியுமா..?
ஹைதராபாத் ஐஐடி மாணவர்கள் உருவாக்கிய முதல் அதிவேக மின்சார ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

ப்யூர் இவி எனும் நிறுவனம் அதிவேக திறன் கொண்ட மின்சார ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ப்யூர் இவி என்பது ஹைதராபாத்தில் உள்ள இந்தியன் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜிக்கு சொந்தமான நிறுவனம் ஆகும்.
இதுதான் தற்போது இ ப்யூடோ 7ஜி எனும் புதிய அதிவேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அறிமுகம் செய்துள்ளது.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுக நிகழ்வின்போது நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே. சரஸ்வத், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ) தலைவர் ஜி.சதீஷ் ரெட்டி மற்றும் ஐ.ஐ.டி ஹைதராபாத்தின் இயக்குநர் பேராசிரியர் பி.எஸ். மூர்த்தி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

அப்போது மின்சார வாகனம் பற்றியும் இ ப்ளூடோ 7ஜி பற்றியும் பகிர்ந்து கொண்ட நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே. சரஸ்வத், "மின்சார வாகனங்களே விரைவில் சாலைகள் அனைத்தையும் ஆளுகை செய்ய இருக்கின்றன. பெரும்பாலானோரை இது வசீகரித்து வருகின்றது" என்றார்.

தொடர்ந்து, இந்திய மின்சார வாகனச்சந்தை மின்வாகனங்களின் இயக்கத்தை மட்டுமே கருத்தில் கொள்ளாமல், ஏற்றுமதி, கொள்முதல் மற்றும் சிறந்த திட்டமிடல்களின் மூலம் மின்வாகன சந்தையை கட்டமைக்க வேண்டும் என கூறினார்.
தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள ப்யூவர் இவி ஓர் உயர் தரம் வாய்ந்த வாகனம் ஆகும். இதனை தயாரித்த குழுவின் முயற்சி பாராட்டத்தக்கது என மாணவர்களை புகழ்ந்தார்.

ப்யூர் இவி நிறுவனத்தின் இ ப்ளூடோ 7ஜி மின்சார ஸ்கூட்டர் எக்ஸ்-ஷோரூமில் ரூ. 79,999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது தற்போது விற்பனையில் இருக்கும் மின்சார வாகனங்களின் விலையைக் காட்டிலும் சற்றே குறைந்த விலையாகும்.

இந்த மின்சார ஸ்கூட்டர் உச்சபட்சமாக மணிக்கு 60 கிமீ என்ற வேகத்தில் செல்லும் திறனைக் கொண்டுள்ளது.
தொடர்ந்து, இந்த மின்சார ஸ்கூட்டரின் பக்கம் மக்களை கவர வேண்டும் என்பதற்காக ப்யூர் இவி, 40 ஆயிரம் கிமீ என்ற வாரண்டியை பேட்டரிக்கு வழங்க இருக்கின்றது.

இந்த மின்சார ஸ்கூட்டரின் பேட்டரி பேக்-அப் மற்றும் செயல்பாடு என அனைத்து பொறியியல் வேலைபாடுகளும் இந்திய நிலப்பரப்பு மற்றும் வானிலை நிலைமைகளை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக, இ ப்ளூடோ 7ஜி பலகட்ட சோதனைகளைச் சந்தித்துள்ளது.

ப்யூர் இவி மேற்கொண்டு வரும் உற்பத்தியாலை தற்போது வரை மாதம் ஒன்றிற்கு 2 ஆயிரம் யூனிட்டுகளை தயாரிக்கின்ற அளவிற்கு வசதி வாய்ப்பைப் பெற்றிருக்கின்றது. இதற்கான, நிலையம் ஹைதராபாத் ஐஐடி வளாகத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை வரும்காலங்களில் அதிகரிக்கச் செய்கின்ற முயற்சியை மேற்கொள்ள இருப்பதாக ப்யூர் இவி தெரிவித்துள்ளது.

குறிப்பாக, நடப்பாண்டில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட் இ ப்ளூடோ 7ஜி மின்சார ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்து விற்பனைச் செய்ய அது இலக்கு நிர்ணயித்துள்ளது.
ஆனால், இந்தியாவில் இன்னும் மின்சார வாகனங்களுக்கான சந்தை ஆரம்பநிலையிலேயே இருக்கின்றது. எரிபொருள் வாகனங்களுக்கு கிடைக்கின்ற வரவேற்பு மின்சார வாகனங்களுக்கு கிடைப்பதில்லை. இதற்கு, மின் வாகனங்களுக்கான கட்டமைப்பு வசதிகள் குறைவாக இருப்பதே முக்கிய காரணமாக இருக்கின்றது.

ஆகையால், பெட்ரோல் மற்றும் டீசல் நிலையங்களுக்கு இணையாக மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் நாட்டில் உருவாகும்போதே இதற்கான சந்தை விரிவாகும் என வாகன ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications








