புதிதாக இரு நகரங்களை நோக்கி படையெடுக்கும் ரிவோல்ட் மின்சார பைக்.. எந்தெந்த நகரங்கள் என்பதில் புதிர்!
ரிவோல்ட் நிறுவனத்தின் மின்சார பைக்குகள் புதிதாக மேலும் இருநகரங்களில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

பிரபல மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான ராகுல் ஷர்மாவால் தொடங்கப்பட்ட நிறுவனம் ரிவோல்ட் இன்டெல்லிகார்ப். இவர், பிரபல திரைப்பட நடிகை அசினின் கணவர் ஆவார்.
மைக்ரோமேக்ஸ் செல்போன்கள் கடுமையான விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்து வந்த காரணத்தால், மாற்று தொழிலாக இந்நிறுவனத்தை அவர் தற்போது கையிலெடுத்துள்ளார். இது ஓர் மின் வாகன உற்பத்தி நிறுவனம் ஆகும்.

இந்நிறுவனத்தின்கீழ் தயாரிக்கப்பட்ட மின்சார இருசக்கர வாகனங்கள் ஏற்கனவே இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. ஆனால், குறிப்பிட்ட நகரங்களில் மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளது. இதைத்தொடர்ந்து, ரிவோல்ட் நிறுவனம் தற்போது தனது எல்லையை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதனடிப்படையில் மேலும் சில இந்தியாவின் முக்கிய நகரங்களில் மின்சார பைக்குகளை அறிமுகம் திட்டமிட்டுள்ளது.

ஆனால், அது எந்த நகரங்கள் என்பதில் அந்நிறுவனம் புதிரை வைத்துள்ளது. கடந்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ரிவோல்ட் ஆர்வி 300 மற்றும் ஆர்வி 400 எலெக்ட்ரிக் பைக்குகள் முதல் கட்டமாக டெல்லி மற்றும் புனே ஆகிய இரு நகரங்களில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டது.
இவ்விரு நகரங்களிலும் தற்போது நல்ல வரவேற்பை எட்டியுள்ளது. ஆகையால், இதே வரவேற்பு நாட்டின் அனைத்து நகரங்களிலும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆகையால், 2020ம் ஆண்டில் புதிய முயற்சியாக மேலும் இரு புதிய நகரங்களில் தனது விற்பனை கிளைகளைத் தொடங்க ரிவோல்ட் திட்டமிட்டிருக்கின்றது. இதற்கான ஓர் டீசர் வீடியோவையும் அது வெளியிட்டுள்ளது. ரிவோல்ட் எலெக்ட்ரிக் பைக் இந்தியாவின் அனைத்து மூலைகளிலும் அதீத எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளநிலையில், அவர்களை மேலும் ஆவலாக்கும் வகையில் இந்த வீடியோவை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில், ஸ்விக்கி ஆர்டரின்போது டெலிவரி வாகனத்தின் லைவ் லொக்கேஷனை காண்பிப்பதைப் போன்று, மேப்பில் ஓர் ரிவோல்ட் எலெக்ட்ரிக் பைக் டெல்லியில் இருந்தும், மற்றுமொரு பைக் புனேவில் இருந்தும் கிளம்பி மறைகின்றன. அவை எந்த நகரத்தை நோக்கி வந்தன என்பது புதிராக உள்ளது.
அது இந்தியாவின் எந்த நகரமாகவும் இருக்கலாம். ஏன், நமது சென்னையாகவும் இருக்கலாம். ஆனால், சென்னையில் தற்போதே மின்வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களின் கட்டமைப்பு ஆரம்பநிலையிலேயே இருக்கின்றது.

ஆகையால், இந்த பைக்கின் சென்னை அறிமுகம் தற்போதைக்கு கேள்விக்குறியாக இருக்கின்றது. அதேசமயம், அந்த இரு நகரங்கள் அஹமதாபாத் மற்றும் ஹைதராபாத்தாக இருக்கலாம் என கூறப்படுகின்றது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவலையும் ரிவோல்ட் வெளியிடவில்லை. மாறாக இளைஞர்களை ஏங்க வைக்கின்ற வகையில் புதிரான வீடியோவையே வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
ரிவோல்ட் நிறுவனம் தற்போது மூன்றுவிதமான வேரியண்டுகளை இந்தியாவில் விற்பனைச் செய்து வருகின்றது. அவை ஆர்வி300, ஆர்வி400 ஸ்டாண்டர்டு மற்றும் ஆர்வி 400 பிரிமியம் ஆகும். இந்த மூன்று மின்சார பைக்குகளிலும் ஆட்டோ இன்டலிஜென்ஸ் எனப்படும் தானியங்கி தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த சிறப்பு வசதியைப் பெற்ற இந்தியாவின் முதல் பைக் இவைதான். இதுவே, இந்த பைக்கின் மிக மிகச் சிறந்த விஷயமாக கருதப்படுகின்றது.

இதுபோன்ற பல்வேறு அம்சங்கள் இந்த பைக்கில் காணப்படுகின்றன. இதன்காரணமாகவே, புனே மற்றும் டெல்லியில் இந்த பைக்கிற்கு நல்ல தற்போது அதீத வரவேற்பு நிலவி வருகின்றது. தொழில்நுட்பத்தில் மட்டுமின்றி வாடிக்கையாளர்களை நிதியுதவியி மூலமாகவும் கவர்கின்ற வகையில் கவர்ச்சிகரமான மாத தவணை திட்டம் வழங்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில், ஆர்வி 300 மாடலுக்கு ரூ. 2,999 என்ற மாத தவணைத் திட்டமும், ஆர்வி 400 மாடலின் ஸ்டாண்டர்டு வேரியண்டிற்கு ரூ. 3,499 மற்றும் ஆர்வி 400 பிரிமியம் வேரியண்டிற்கு ரூ. 3,999 ஆகிய மாத தவணைத் திட்டங்களை அது வழங்கி வருகின்றது. இந்த தவனைத் திட்டம் மொத்தம் 37 மாதங்களுக்கானதாகும்.
ரிவோல்ட் இன்டெல்லிகார்ப் நிறுவனம், ஆர்வி 300 மாடலுக்கு ரூ. 1,15,963 என்ற விலையும், ஆர்வி 400 மாடலின் ஸ்டாண்டர்டு வேரியண்டிற்கு 1,34,463 ரூபாயும், உயர்நிலை மாடலான பிரிமியமிற்கு ரூ. 1,47,963 என்ற விலையையும் நிர்ணயித்துள்ளது.

ரிவோல்ட் மாத தவனை திட்டம் மட்டுமின்றி ஒரே தவணை முறையிலும் பைக்கை விற்பனைச் செய்து வருகின்றது. அவ்வாறு, ஆர்வி 300 மாடலை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அந்த பைக் 85 ஆயிரம் ரூபாய்க்கும், ஆர்வி 400-ன் இரு மாடல்களுக்கும் 99 ஆயிரத்திற்கும் அதிகமான விலையை நிர்ணயித்துள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலைகளாகும்.

அதேசமயம், மாத தவனை திட்டத்தில் எலெக்ட்ரிக் பைக்கை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ரிவோல்ட் குறிப்பிட்ட சேவைகளை சலுகையாக செய்து வருகின்றது. அதன்படி, பேட்டரி, டயர் மற்றும் பாகங்கள் உள்ளிட்டவற்றிற்கான பராமரிப்பு முழுவதையும் ரிவோல்ட் நிறுவனமே ஏற்றுக் கொள்கின்றது. ஆகையால், தவனை முறையில் ரிவோல்ட் எலெக்ட்ரிக் பைக்கை வாங்கும் வாடிக்கையாளர்கள் சார்ஜிங் போன்ற மற்ற விஷயங்கள்குறித்து கவலை கொள்ள தேவையில்லை என கூறப்படுகின்றது.

இந்த பைக்கின் பெரும்பாலான பாகங்கள் சீனா நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனத்திடம் இருந்து பெறப்படுகின்றது.
ஆனாலும் அராய் (ARAI) ஒப்புதலுடன், இந்த எலெக்ட்ரிக் பைக் முழுமையாக இந்தியாவிலேயே வைத்தே கட்டமைக்கப்படுகின்றது. இந்த பைக்கில் முக்கிய தொழில்நுட்ப வசதியாக டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் காணப்படுகின்றது. இது ஸ்பீட், ட்ரிப் மீட்டர், ரேஞ்ச் மற்றும் பேட்டரி பவர் உள்ளிட்ட அனைத்து தகவலையும் வாகன ஓட்டிக்கும் வழங்கும்.

இதுமட்டுமின்றி, ரிவோல்ட் செல்போன் ஆப்பின் மூலமாகவும் வாகன ஓட்டிக்கு பல்வேறு தகவல்கள் வழங்கப்படுகின்றது. மேலும், இந்த ஆப் மூலம் செயற்கையான எஞ்ஜின் எக்சாஸ்ட் சிஸ்டத்தின் ஒலியையும் கட்டுபடுத்த முடியும்.
இதுமட்டுமின்றி, என்ட்ரீ லெவல் மாடலான ஆர்வி 300 மின்சார பைக்கில் 1.5 kW எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இதற்கு தேவையான திறன் 2.7 kW அயன் பேட்டரியில் இருந்து கிடைக்கின்றது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 80-150 கிமீ தூரம் வரை செல்ல முடியும். இதன் உச்சபட்ச வேகம் மணிக்கு 65 கிமீட்டர் ஆகும்.

இதேபோன்று, ஆர்வி400 பைக்கின் ஆரம்பநிலை வேரியண்டான ஸ்டாண்டர்டு மாடலில் 3 kW மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது, 3.24 kW லித்தியம் அயன் பேட்டரியில் இருந்து திறனைப் பெற்றுக் கொள்கின்றது. இந்த பேட்டரியை ஒரு முழுயைாக சார்ஜ் செய்தால் 180 கிமீ தூரம் வரை செல்ல முடியும். இது மணிக்கு அதிகபட்சமாக 85 வேகத்தில் செல்லக்கூடியது.

ஆர்வி 400 பைக்கின் உயர்நிலை மாடலாக இருக்கும் பிரிமியம் வேரியண்டில் 4ஜி அதிக திறன் கொண்ட பேட்டரி மற்றும் கூடுதல் ரேஞ்ச் உள்ளிட்ட வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், 4ஜி இன்டர்நெட் வசதி, இம்மொபிலிசர், ரிமோட் கீ, புஷ் ஸ்டார்ட் மற்றும் சவுண்ட் சிமுலேட்டர் சிஸ்டம், லொகேட்டர் மற்றும் ஆன்டி தெஃப்ட் வசதி உள்ளிட்ட ஏராளமான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








