ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கான குறைந்த விலை சைலன்சர்கள் அறிமுகம்! இத போலீஸ் உடைக்க மாட்டங்க பாஸ்!
குறைந்த விலையில் ராயல் என்ஃபீல்டு சைலன்சர்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இந்திய இளைஞர்களின் மத்தியில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் தயாரிப்புகள் மீது தனித்துவமான ஆர்வம் நிலவி வருகின்றது. இதனால்தான் பல தசாப்தங்களைக் கடந்தும் இந்நிறுவனத்தின் இரு சக்கர வாகனங்கள் இந்தியாவில் தனித்துவான விற்பனையைப் பெற்று வருகின்றன. குறிப்பிட்டு கூற வேண்டுமானால், ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் கவர்ச்சியான தோற்றத்தில் மதி மயங்கிய இளைஞர்கள் அதற்கான சந்தையை தற்போதும் ஏற்படுத்திக் கொடுத்து வருகின்றனர்.

அதிலும், ராயல் என்பீல்டு பைக்குகளில் இருந்து வெளி வரும் சைலென்சர் ஒலிக்கெனவே தனி ரசிகர்கள் பட்டாளம் நிலவி வருகின்றது. இந்த ஒலியைச் சற்று அதிகரிக்க வேண்டும் என்னுபவர்களே அதிகம். அம்மாதிரியானோர், வெளிப்புறச் சந்தையில் இருந்து அதிக டெசிபல் சப்தத்தை வெளிப்படுத்தும் சைலன்சர்களை வாங்கிப் பயன்படுத்துகின்றனர்.

இது மோட்டார் வாகன சட்டத்தின்படி குற்றமாகும். எனவேதான், போலீஸார் வெளிப்புறச் சந்தை சைலன்சர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதாவது அதிக ஒலியை எழுப்பும் சைலன்சர் பொருத்திய இருசக்கர வாகனங்களைக் கண்ட உடன் அதிரடி நடவடிக்கையில் இறங்குகின்றனர். குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால் சம்பவ இடத்திலேயே சைலென்சரை கழட்டி எறிதல் அல்லது அடித்து நொறுக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

இதில் தீர்வு காணும் விதமாக ராயல் என்ஃபீல்டு நிறுவனமே, அதன் புகழ்வாய்ந்த இரு சக்கர வாகனத்திற்கான சைலன்சரை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இது, மோட்டார் வாகன சட்டம் அனுமதித்த அளவிலேயே சத்தத்தை வெளிப்படுத்தும். ஆகையால், இதனை பயன்படுத்தினால் நிச்சயம் போலீஸார்கள் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள்.

இது தற்போது வெளிப்புற சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும் சைலன்சர்களுக்கு இணையான விலையில் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டிருக்கின்றது. அதாவது அனைவரும் எளிதில் நுகரக்கூடிய மதிப்பிலேயே புதிய சைலென்சர்கள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. இதன்படி, புதிய தேர்வாக வழங்கப்படும் சைலென்சர்களுக்கு ரூ. 3,300இல் இருந்து ரூ. 3,600 வரையிலான விலையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில் துரதிர்ஷ்டம் என்னவென்றால் புதிய சைலென்சர் தேர்வானது, ராயல் என்ஃபீல்டின் அதிகம் விற்பனையாகும் இருசக்கர வாகனங்களில் ஒன்றான கிளாசிக் 350 மாடலுக்கு மட்டுமே வழங்கப்பட உள்ளது. எனவே, தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் அனைத்து சைலென்சர்களும் கிளாசிக் 350 பைக்கிற்கு மட்டுமே பொருந்தும்.

ஒட்டுமொத்தமாக 16 சைலென்சர்களை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அறிமுகம் செய்திருக்கின்றது. இவை சில்வர் பூச்சு மற்றும் மேட் ஃபினிஷ் ஆகிய இருவிதமான நிற தேர்விலும், பன் முக வடிவம் மற்றும் ஸ்டைலிலும் அது விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதைப் பொருத்தே அதன் விலையும் நிர்ணயிக்கப்படுகின்றது.

ராயல் என்பீல்டு நிறுவனம் இதுபோன்று சைலன்சர்களை இரண்டாம் நிலை தேர்வாக விற்பனைக்கு வழங்குவது இதுவே முதல் முறையாகும். ஆனால், இதனை வாடிக்கையாளர்களால் நேரடியாக ஷோரூம்களுக்கு சென்று வாங்கிவிட முடியாது என்பது மற்றுமொரு சோகமான விஷயமாக உள்ளது. இந்த சைலன்சரை வாங்க விரும்புபவர்கள் முதலில் டீலர்களிடம் சென்று முன் பதிவு செய்ய வேண்டும்.

இதன் பின்னரே ஆர்டரின் பேரில் சைலன்சர் விற்பனைக்கு வழங்கப்படும். இதனை சர்வீஸ் நிலையம் வாயிலாக ராயல் என்ஃபீல்டு நிறுவனமே அதன் வாடிக்கையாளர்களுக்கு பொருத்தி தருகின்றது. இதற்கான கட்டணம் பற்றிய தகவல் வெளியிடப்படவில்லை. இருப்பினும், ராயல் என்ஃபீல்டு நிறுவனமே அதன் வாடிக்கையாளர்களின் ரசனைக்கு ஏற்ப பல தேர்வுகளில் சைலென்சரை விற்பனைக்கு அறிமுகம் செய்திருப்பது பைக் பிரியர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருக்கின்றது.

அதேசமயம், இந்த சைலென்சரைப் பயன்படுத்துவதன் மூலம் போலீஸாரின் நடவடிக்கையில் இருந்து நம்மால் தப்பிக்க முடியும். கடந்த காலங்களில் அதிக ஒலியை எழுப்பும் சைலன்சர்களைப் பொருத்திய ராயல் என்பீல்டு பைக்குகளை மட்டுமே தேடிப்பிடித்து போலீஸார் வேட்டையாடி வந்தனர்.

இதைக் கருத்தில் கொண்டு அரசு அனுமதித்த டெசிபல் அளவில் சைலன்சர்களை ராயல் என்பீல்டு அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை ராயல் என்ஃபீல்டு அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








