குறிப்பிட்ட பைக் மாடலின் விலையை திடீரென உயர்த்திய சுசுகி! எந்த மாடலின் விலை எவ்வளவு உயர்ந்திருக்கு?
சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் அதன் குறிப்பிட்ட மாடலின் விலையை திடீரென உயர்த்தி அறிவித்துள்ளது.

ஜப்பான் நாட்டை தலைமையமாகக் கொண்டு இயங்கும் சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம், இந்தியாவில் ஸ்கூட்டர் மற்றும் பைக் ஆகிய இருசக்கர வாகன விற்பனையில் ஈடுபட்டு வருகின்றது.
இந்த நிலையில், இந்நிறுவனம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதன் பிரபல ஸ்கூட்டர் மாடல்களின் விலையை உயர்த்தி அறிவித்தது. இது வருடத்திற்கு ஒரு முறை வழக்கமாக செய்யப்படும் விலையுயர்வுதான் என கூறப்பட்டது.

அதேசமயம், பிஎஸ்-6 தர உயர்விற்கும் கடந்த காலங்களில் சுசுகி அதன் இருசக்கர வாகனங்களின் விலையை உயர்த்தியிருந்தது. இந்நிலையில், சுசுகி நிறுவனம் மீண்டும் அதன் இருசக்கர வாகனங்களின் விலையை உயர்த்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆனால், இம்முறை பைக்குகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலையுயர்வு குறிப்பிட்ட மாடல்களுக்கு மட்டுமே பொருந்தும் என கூறப்படுகின்றது.
அதாவது, சுசுகி ஜிக்ஸெர் வரிசையில் விற்பனைச் செய்யப்பட்டு வரும் மோட்டார்சைக்கிள்களுக்குதான் தற்போது விலை உயர்த்தப்பட்டிருக்கின்றது.

சுசுகி நிறுவனம் ஜிக்ஸெர் வரிசையில் ஜிக்ஸெர் (வழக்கமான ஆரம்பநிலை மாடல்), ஜிக்ஸெர் எஸ்எஃப், ஜிக்ஸெர் எஸ்எஃப் மோட்டோ ஜிபி எடிசன் ஆகிய மூன்று மாடல்களை விற்பனைச் செய்து வருகின்றது. இந்த மாடல்களின் விலைதான் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.

இதன்படி, ஜிக்ஸெர் மாடலுக்கு ரூ. 2,040-ம், ஜிக்ஸெர் எஸ்எஃப் மாடலுக்கு ரூ. 2,041-ம், ஜிக்ஸெர் எஸ்எஃப் மோட்டோ ஜிபி எடிசனுக்கு ரூ. 2,070 என்ற விலையுயர்வும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த விலையுயர்வால் சுசுகி ஜிக்ஸெர் வரிசையில் இருக்கும் பைக்குகள் சற்று காஸ்ட்லியான மாடல்களாக மாறியிருக்கின்றன.

சுசுகி நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் பைக்குகளாக ஜிக்ஸெர் மாடல் பைக்குகளே இருக்கின்றன. இவை, தற்போது ரூ. 1,13,941 முதல் ரூ. 1,24,970 வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும். இது பிற ஸ்போர்ட்ஸ் மற்றும் நேக்கட் ரக பைக்குகளைக் காட்டிலும் சற்று குறைந்த விலையாக இருக்கின்றது.

இந்த மூன்று மோட்டார்சைக்கிள்களிலும் சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் 154.9 சிசி திறனை வெளிப்படுத்தும் எஞ்ஜினையேப் பயன்படுத்தி வருகின்றது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸில் இயங்கும் இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 13.4 பிஎச்பி பவரையும், 13.8 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டிருக்கின்றது.

எஞ்ஜினைப் போலவே இந்த பைக்கில் இடம்பெற்றிருக்கும் பிற அம்சங்களும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றன. அந்தவகையில், பைக்கின் சிறப்பான சஸ்பென்ஷன் அமைப்பிற்காக டெலிஸ்கோபிக் ஃபோர்க் முன்பக்கத்திலும், ஏழு வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய மோனோ-ஷாக் அப்சார்பர் பின்பக்கத்திலும் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

இதேபோன்று பாதுகாப்பு அம்சத்திற்காக பைக்கின் இரு முனைகளுக்கும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன், கூடுதல் பாதுகாப்பு அம்சத்திற்காக ட்யூவல் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதியும் வழங்கப்பட்டிருக்கின்றது. இது மழை மற்றும் வழு வழுப்பான சாலைகளில் சிறந்த பிரேக்கிங் வசதியை வழங்க உதவும்.

இத்துடன், பைக்கின் கவர்ச்சியான தோற்றத்திற்காக டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப், எல்இடி மின் விளக்குகள் மற்றும் கட்டுமஸ்தான உடல் தோற்றம் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன.
சுசுகி நிறுவனம் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கணிசமான விற்பனை இழப்பைச் சந்தித்துள்ளது.

எனவே, கொரோனா காலத்தில் இழந்தவற்றை மீட்டெடுக்கும் சில சிறப்பு திட்டத்தை அது அறிவித்துள்ளது. அதாவது டிஜிட்டல் (ஆன்-லைன்) விற்பனை, பைக்கை டெலிவரி செய்வது, எளிய கடன் வசதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை சுசுகி நடைமுறைப்படுத்தி வருகின்றது.


Click it and Unblock the Notifications








