அடுத்த 6 மாதங்களில் 9 புதிய பைக்குகள்... அதகளப்படுத்தப்போகும் ட்ரையம்ஃப்!
அடுத்த 6 மாதங்களில் 9 புதிய பைக்குகளை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக ட்ரையம்ஃப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய பிரிமீயம் பைக் சந்தையை அதகளப்படுத்தும் இந்த திட்டம் குறித்த ட்ரையம்ஃப் நிறுவனம் தெரிவித்துள்ள திட்டங்களை இந்த செய்தியில் தொடர்ந்து பார்க்கலாம்.

இந்தியாவின் பிரிமீயம் பைக் மார்க்கெட்டில் இங்கிலாந்தை சேர்ந்த ட்ரையம்ஃப் நிறுவனம் முன்னணி வகிக்கிறது. ட்ரையம்ஃப் பைக்குகளுக்கு வலுவான வர்த்தகம் இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்திய சந்தையில் வர்த்தகத்தை மேலும் வலுவாக்கும் வகையில் பல புதிய மாடல்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது.

இந்த நிலையில், வர்த்தகத்தை வலுவாக்குவதற்காக மேலும் 9 புதிய பைக் மாடல்களை கொண்டு வருவதற்கு ட்ரையம்ஃப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ள ட்ரையம்ஃப் இந்தியா நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவு தலைவர் ஷோயிப் ஃபாரூக் கூறுகையில்,"வரும் ஜனவரி - ஜூன் இடையிலான காலக்கட்டத்தில் பல புதிய மாடல்களை கொண்டு வர உள்ளோம்.

அதாவது, அடுத்த 6 மாதங்களில் 9 புதிய மாடல்களை கொண்டு வர உள்ளோம். இதில், தற்போதைய பைக் மாடல்களின் ஸ்பெஷல் எடிசன் மாடல்களும் இடம்பெற இருக்கின்றன. மேலும், புதுப்பொலிவுடன் சில மாடல்களை கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளோம்.
இதில், ட்ரைடென்ட் 660 மற்றும் டைகர் 850 ஸ்போர்ட் ஆகிய மாடல்களும் அடக்கம். மேலும், இந்தியாவில் புதிய ரக பைக் மாடல்களை களமிறக்கவும் முடிவு செய்துள்ளோம். இந்த புதிய மாடல்களை அறிமுகம் செய்வதில் மிகவும் தீவிரமாக இறங்கி இருக்கிறோம். வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பல புதிய மாடல்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்.

கடந்த சில மாதங்களாக விற்பனை வளர்ச்சி குறைவாக இருந்து வருகிறது. எனினும், எங்களது ட்ரையம்ஃப் நிறுவனம் குறிப்பிடத்தக்க வர்த்தகத்தை பதிவு செய்து வருகறது. கடந்த ஜூலை மாதம் முதல் விற்பனை வளர்ச்சிப்பாதையில் செல்வது சாதகமான விஷயமாக இருக்கிறது.

நடப்பு ஆண்டு ஜூலை முதல் அடுத்த ஆண்டு ஜூன் வரையிலான நிதி ஆண்டு காலக் க்டத்தில் 20 முதல் 25 சதவீத வளர்ச்சியை எதிர்பார்க்கிறோம். நிச்சயம் இந்த விற்பனை வளர்ச்சியை எட்டுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

தற்போது இந்திய சந்தையில் 13 பிஎஸ்-6 மாடல்களை விற்பனை செய்து வருகிறோம். சந்தையில் அதிக பிரிமீயம் பிஎஸ்-6 மாடலை விற்பனை செய்யும் நிறுவனமாக ட்ரையம்ஃப் உள்ளது. நடப்பு நிதி ஆண்டில் முதல்முறையாக ராக்கெட் மோட்டார்சைக்கிள் விற்பனை 100 என்ற இலக்கை கடக்கும் வாய்ப்பு இருக்கிறது.

சில பைக் சந்தையில் எமது நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் எந்த மாடலுக்கு அதிக வரவேற்பு இருக்கும் என்பதை கணித்து களமிறக்க திட்டமிட்டுள்ளோம். இதனால், அதிக விற்பனை வளர்ச்சியை எட்ட இயலும்," என்று ஃபரூக் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications








