அல்ட்ராவயலெட் எலெக்ட்ரிக் பைக் நிறுவனத்தில் மீண்டும் முதலீடு செய்த டிவிஎஸ் மோட்டார்!
அதிசெயல்திறன் மிக்க மின்சார பைக் மாடலை உருவாக்கி வரும் அல்ட்ராவயலெட் நிறுவனத்தில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் கணிசமாக முதலீடு செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

பெங்களூரை சேர்ந்த அல்ட்ராவயலெட் நிறுவனம் அதிசெயல்திறன் மிக்க மின்சார பைக்கை உருவாக்கி வருகிறது. எஃப்-77 என்ற பெயரிலான அந்த எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக் மாடல் அடுத்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில், பைக் உருவாக்கப் பணிகளுக்காக முதலீடு திரட்டும் திட்டத்தில் அல்ட்ராவயலெட் ஈடுபட்டது. அதன்படி, முதல்கட்டமாக முதலீடு திரட்டும் திட்டத்தில் பல முதலீட்டாளர்களை ஈர்த்தது. அதில், இந்தியாவின் பிரபலமான இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனமும் ஒன்று. முதல் கட்டமாக அல்ட்ராவயலெட் நிறுவனத்தில் ரூ.11 கோடியை டிவிஎஸ் மோட்டார் முதலீடு செய்தது.

இந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட முதலீடு திரட்டும் திட்டத்தை அல்ட்ராவயலெட் ஈடுபட்டது. இதன்படி, இரண்டாவது கட்டமாக ரூ.30 கோடியை டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்திடம் இருந்து அல்ட்ராவயலெட் பெற்றுள்ளது.

இந்த புதிய முதலீடு தொடர்பாக டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் எதிர்கால போக்குவரத்து மற்றும் டீலர் மேம்பாட்டுப் பிரிவுக்கான துணைத் தலைவர் மனு சக்ஸேனா குறிப்பிடுகையில்,"அல்ட்ராவயலெட் நிறுவனம் அதிசெயல்திறன் மிக்க மின்சார பைக்கை மிகச் சிறந்த தொழில்நுட்ப திறனுடன் உருவாக்கி வருவது அதன் செயல்விளக்கங்கள் மூலமாக அறிந்து கொண்டுள்ளோம்.

அல்ட்ராவயலெட் குழுவின் பணிகள் மீது அபார நம்பிக்கை வைத்துள்ளதுடன் மிகவும் ஆவலோடு காத்திருக்கிறோம். இந்தியாவில் பசுமை சூழலை உருவாக்கும் முயற்சிகளுக்கு இந்த மின்சார வாகன உருவாக்கப் பணிகள் அடித்தளமாக இருக்கும்," என்று தெரிவித்துள்ளார்.

டிவிஎஸ் மோட்டார் முதலீடு குறித்து அல்ட்ராவயலெட் நிறுவனத்தின் ஸ்தாபகரும், தலைமை செயல் அதிகாரியுமான நாராயண் சுப்ரமணியம் கூறுகையில்,"அண்மை காலமாக போக்குவரத்துத் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றம் உலக அளவில் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, தனிநபர் பயன்பாட்டு வாகனச் சந்தை அபரிமிதமான வளர்ச்சியை பெற்று வருகிறது. இருசக்கர வாகனச் சந்தையும் வேகமாக வளர்ந்து வருகிறது.

மேலும், இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களுக்கான வரவேற்பும் கூடி வருகிறது. இந்த சூழலில், இந்தியாவின் முதல் அதிசெயல்திறன் மிக்க மின்சார பைக் மாடலை உருவாக்கி வருகிறோம். எங்களது எஃப்-77 பைக் செயல்திறன், பாதுகாப்பு, தொழில்நுட்பத்தில் அதிசிறந்ததாக இருக்கும்," என்று தெரிவித்துள்ளார்.

அல்ட்ராவயலெட் எஃப்-77 பைக் மாடலில் ஓடிஓ அப்டேட் மூலமாக வாகனத்தின் இயக்கத்தை மேம்படுத்துவதற்கும், தொழில்நுட்ப மேம்பாட்டுப் பணிகளை செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும். இது வாடிக்கையாளர்களுக்கு ஆகச் சிறந்த அனுபவத்தை வழங்கும் மின்சார பைக் மாடலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








