இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட சைக்கிளில் வலம் வந்த இங்கிலாந்து பிரதமர் - ஓ... இதுதான் காரணமா...?
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியாவை சேர்ந்த ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனத்தின் சைக்கிளில் பயணம் செய்து ஆச்சரியப்படுத்தியுள்ளார். இதற்கான காரணத்தை இந்த செய்தியில் பார்ப்போம்.

கொரோனா வைரஸ் கடந்த நான்கு மாதங்களாக ஒரு முடிவில்லாமல் இந்தியா உள்பட உலகின் பெரும்பான்மையான நாடுகள் அனைத்தையும் பெரிய அளவில் பாதித்து வருகிறது. வைரஸை எவ்வாறு கட்டுக்குள் கொண்டுவருவது என்று தெரியாமால் உலக நாடுகள் விழி பிதுங்கி வருகின்றன.

இதனால் உயிர்பலி, பொருளாதார வீழ்ச்சிகள் ஒரு பக்கம் ஏற்பட்டு கொண்டிருக்க மறுபக்கம் வீட்டிற்குள்ளயே நாள் முழுவதையும் கழிப்பதால் உடல் எடை அதிகரித்து சில நோய்களை எதிர்கொண்டு வருவோரும் உள்ளனர். குறிப்பாக வெளிநாடுகளில் ஊரடங்கு தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டதால் அங்குள்ள பெரும்பாலான மக்களின் எடை கிடுகிடுவென அதிகரித்துள்ளது.

இதனை குறைக்கும் விதத்தில் தான் கொரோனாவின் தாக்கத்தை நேரடியாக உணர்ந்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இங்கிலாந்து மக்களை சைக்கிள் பயணங்களை மேற்கொள்ள வைக்க முயற்சித்து வருகிறார். இந்த விழிப்புணர்வை பிரபலப்படுத்தும் வகையில் தற்போது அவரே சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

இது நமக்கு செய்தியாக அமைய காரணம், அவர் நம் நாட்டு சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ சைக்கிள்ஸின் தயாரிப்பை பயன்படுத்தியுள்ளார். இந்த சைக்கிள் சவாரியை அவர் சுகாதார திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்திய போது மேற்கொண்டுள்ளார். சைக்கிள் ஓட்டுவதில் மிகவும் ஆர்வம் கொண்டவரான இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு 56 வயதாகுகிறது.

சைக்கிள் பயணம் குறித்து அவர் கூறுகையில், "மக்கள் ஆரோக்கியமாகவும் கட்டுக்கோப்பாகவும் இருக்க உதவுவதிலிருந்தும், நோயின் அபாயத்தைக் குறைப்பதிலிருந்தும், காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்கும், நெரிசலைக் குறைப்பதற்கும், சைக்கிள் ஓட்டுதல் மற்றும் நடைபயிற்சி ஆகியவை சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் சவால்களைச் சமாளிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன.

ஆரோக்கியமான, மிகவும் சுறுசுறுப்பான தேசத்தைக் கட்டியெழுப்ப, மக்களுக்கு இரு சக்கரங்களில் பயணம் செய்வதற்கான நம்பிக்கையை அளிக்க சரியான உள்கட்டமைப்பு, பயிற்சி மற்றும் ஆதரவு தேவை. கியர்களை மாற்றியப்படி பயணங்களை அதிகரிக்க இன்னும் பெரிய மற்றும் தைரியமான திட்டங்களுடன் முன்னேற வேண்டிய நேரம் இது. அப்போது தான் சைக்கிள் ஓட்டுதலினால் கிடைக்கும் நன்மைகளை அனைவரும் உணர முடியும் என கூறினார்.

போரிஸ் ஜான்சனால் தற்போது பயன்படுத்தப்பட்டுள்ள சைக்கிள் இந்திய ப்ராண்ட் உடையது என்றாலும், ஹீரோ வைக்கிங் ப்ரோ சைக்கிள்கள் இங்கிலாந்து மான்செஸ்டரில் உள்ள ஹீரோவின் கூட்டணியான இன்சிங்க் ப்ராண்டின் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து ஹீரோ நிறுவனம் கூறுகையில், மொத்தம் 75 சைக்கிள்கள் இன்சிங்க் ரேஞ்ச்சில் உள்ளதாகவும், இவை அனைத்தும் ஹீரோ சைக்கிள்ஸ் க்ளோபல் டிசைன் மையத்தில் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் பிரதமரின் இந்த உடல் எடை கட்டுப்பாட்டு பிரச்சாரத்தால் தங்களது தயாரிப்புகள் அதிகளவில் விற்பனையாகும் எனவும் ஹீரோ நிறுவனம் நம்பிக்கை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








