ஸ்மார்ட்போனை போல் குறைந்த விலையில் மின்சார இருசக்கர வாகனம்... சியோமி அதிரடி!
பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி மலிவு விலை மின்சார ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

சீனாவை மையமாகக் கொண்டு இயங்கும் ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி, அண்மைக் காலங்களாக மின்சார வாகன தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றது. இந்நிறுவனம், மாஸ்க், ஸ்பீக்கர் மற்றும் காற்றை தூய்மைப்படுத்தும் கருவிகள் ஆகியவற்றையும் விற்பனைக்குக் களமிறக்கி வருவது குறிப்பிடத்தகுந்தது.

பொதுவாக சியோமி நிறுவனம் மக்கள் மத்தியில் மலிவு விலை செல்போனுக்கே பெயர்போன நிறுவனமாக உள்ளது. இந்நிறுவனத்தின் அனைத்துவிதமான ஆண்ட்ராய்டு போன்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது. இந்நிலையில்தான், சியோமி நிறுவனம் மின்சார வாகனச் சந்தையிலும் களமிறங்கியிருக்கின்றது.

இதன்படி, ஏற்கனவே பல்வேறு மொபட் ரக மின்சார இருசக்கர வாகனங்களை அது களமிறக்கியநிலையில், தற்போது மீண்டும் புதிய மாடலாக நைன்பாட் சி30 (Ninebot C30) எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்குக் களமிறக்கியுள்ளது. இந்த மின்சார இருசக்கர வாகனமும் பிற மாடல்களைப் போலவே சீனாவில் மட்டுமே விற்பனைக்கு களமிறக்கப்பட்டிருப்பகு குறிப்பிடத்தகுந்தது.

இதற்கு அந்நாட்டு மதிப்பில் 3,599 யுவான்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ. 38 ஆயிரம் ஆகும். இது தோராயமாக வழங்கப்பட்ட மதிப்பாகும். பார்ப்பதற்கு சிறுவர்கள் விளையாட்டு சைக்கிளைப் போன்று காட்சியளிக்கும் இந்த மின்சார இருசக்கர வாகனத்தை, ஐடி ஊழியர்கள் மற்றும் தினசரி இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்தும் இளைஞர்கள் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

எனவேதான், ஒரு நபர் மட்டுமே அமர்ந்து செல்கின்ற வகையிலான வடிவமைப்பு அதற்கு வழங்கப்பட்டிருக்கின்றது. அத்துடன், தேவைப்பட்டால் சிறுவர்களையோ அல்லது எடையுள்ள பொருட்களையோ ஏற்றிச் செல்கின்ற வகையில் பின்னிருக்கையும் வழங்கப்பட்டிருக்கின்றது. இத்துடன், முன் பக்கத்தில் கால் வைக்கும் இடத்திலும் பரந்தளவில் இடம் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

ஆகவே, நம்மூர் கடைக்காரரின் டிவிஎஸ் எக்ஸ்எல்-ஐப் போல் சீனாவில் நைன்பாட் சி30 பயன்படுத்தப்படும் என யூகிக்கப்படுகின்றது. இத்துடன், இந்த மின்சார ஸ்கூட்டரில் மிதிவண்டிகளில் காணப்படுவதைப் போல் மிதிப்பான் (பெடல்) அம்சம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, இதில் சார்ஜ் தீர்ந்துவிட்டாலும் கவலையின்றி, மிதித்த இலக்கைச் சென்றடையலாம்.

அதேசமயம், தற்போது சீனாவின் சில குறிப்பிட்ட முக்கிய நகரங்களில் எரிபொருள் வாகனங்களைப் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. இம்மாதிரியான சூழ்நிலையில் குறைந்த விலையில் சியோமின் மின்சார ஸ்கூட்டரை விற்பனைக்குக் களமிறக்கியிருப்பது நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கேற்ப மின்சார இருசக்கர வாகனத்தின் ஸ்டைல் மற்றும் அம்சங்களும் அமைந்துள்ளது.

சியோமி நைன்பாட் சி30 மின்சார ஸ்கூட்டரில் 400 வாட் திறனுடைய மின் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கின்றது. இது அதிகபட்சமாக 40 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும். எனவே, இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 25 கிமீட்டராக உள்ளது. மேலும், இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 35 கிமீ தூரம் வரை பயணிக்கலாம்.

ஒரு வேலை இந்த மின்சார ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு வருமேயானால், இதனை லைசென்ஸ் இல்லாமலேயே இயக்கலாம். ஆம், 25 கிமீ வேகத்தில் இயங்கும் வாகனத்தை இயக்க இந்தியாவில் ஓட்டுநர் உரிமம் அவசியமில்லை என நம் நாட்டு மோட்டார் வாகன சட்டம் கூறுகின்றது.

இந்த இருசக்கர வாகனத்தில் பாதுகாப்பான பிரேக் வசதிக்காக முன் வீலில் டிஸ்க் பிரேக்கும், பின் சக்கரத்தில் டிரம் பிரேக்கும் வழங்கப்பட்டிருக்கின்றது. எனவே, சியோமி நைன்பாட் சி30 ஸ்கூட்டரில் பயணிக்கும்போது பாதுகாப்பை நினைத்து அச்சப்பட தேவையில்லை. அதேசமயம், சாலையில் செல்லும்போது அதிக கவனம் தேவை என்பதை மறந்துவிடக்கூடாது.

இதேபோன்று, இந்த இருசக்கர வாகனத்தில் பொருத்தப்பட்டிருக்கும் பேட்டரியை எளிதில் கழட்டி மாட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆகையால், சார்ஜ் தீர்ந்த பின்னர் வேறொரு முழுமையான சார்ஜ் உள்ள பேட்டரியைப் பயன்படுத்தி நைன்பாட் சி30 மின்சார இருசக்கர வாகனத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ஒரு வேலை நைன்பாட் சி30 மின்சார ஸ்கூட்டர் குறைந்த ரேஞ்ஜை வழங்குவதாக உணர்ந்தால், அதில் கூடுதல் ரேஞ்ஜை வழங்கும் மாடல்களும் அடுத்தடுத்த தேர்வாக வழங்கப்படுகின்றது. அவை சி40, சி60 மற்றும் சி80 ஆகியவை ஆகும். லடாக், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நிகழ்ந்த இந்தியா-சீனா பிரச்னை சியோமியின் மின்சார ஸ்கூட்டரின் வருகையைக் கேள்விக் குறியாக மாற்றியிருக்கின்றது.

அதேசமயம், தற்போது வரை சியோமி போன்ற பிற சீன நிறுவனங்களின் செல்போன்கள் தற்போதும் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைப்பது குறிப்பிட்த்தகுந்தது. இருப்பினும், இந்தியாவில் சீன தயாரிப்புகளுக்கு எதிராக அறிவிக்கப்படாத தடை நிலவி வருகின்றது. எனவேதான், சியோமி மின்சார ஸ்கூட்டரின் அறிமுகம் கேள்விக் குறியாக மாறியிருக்கின்றது.


Click it and Unblock the Notifications








