புத்தாண்டில் பஜாஜ் ஆட்டோ அசத்தல்... சந்தை மூலதனம் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது!
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை படைத்துள்ளது. மேலும், இந்த மைல்கல்லை தொட்ட உலகின் முதல் இருசக்கர வாகன நிறுவனம் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறது.

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமாக விளங்கும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம், ஏற்றுமதியில் நம்பர்-1 நிறுவனமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், புத்தாண்டு தினமான நேற்று பஜாஜ் ஆட்டோ நிறுவனம் உலகின் அதிக மதிப்பு வாய்ந்த இருசக்கர வாகன நிறுவனம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது.

ஆம், தேசிய பங்கு சந்தையில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது.

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் ஒரு பங்கு விலை ரூ.3,479 ஆக நேற்று வர்த்தகமானது. இதனால், அந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் மொத்த பங்குகளின் மதிப்பு ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது.

சந்தை நிபுணர்களின் கூற்றுப்படி, ரூ.1 லட்சம் கோடி சந்தை மூலதனத்தை தாண்டிய முதல் இருசக்கர வாகன நிறுவனமாக பஜாஜ் ஆட்டோவை குறிப்பிடுகின்றனர்.

சர்வதேச அளவில் வேறு எந்த இருசக்கர வாகன நிறுவனமும் ரூ.1 லட்சம் கோடி என்ற சந்தை மூலதன மதிப்பை இதுவரை தொட்டதில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்த புதிய சாதனை மூலமாக, உலகின் அதிக மதிப்பு வாய்ந்த இருசக்கர வாகன நிறுவனம் என்ற பெருமையையும் பஜாஜ் ஆட்டோ பெற்றுள்ளது.

தேசிய பங்கு சந்தையில் நேற்று பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் ஒரு பங்கு ரூ.3,479 என்ற விலையில் வர்த்தகமானது. வாகன உற்பத்தியில் 75 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட பஜாஜ் ஆட்டோ நிறுவனம் உலகினஅ 70 நாடுகளில் இருசக்கர வாகன விற்பனையில் ஈடுபட்டுள்ளது. பல்சர், பாக்ஸர், பிளாட்டினா ஆகிய பைக்குகள் பல நாடுகளில் வாடிக்கையாளர்களின் மனம் கவர்ந்த பைக் மாடல்களாக உள்ளன.

பங்கு சந்தையில் குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தின் ஒரு பங்கு விலையை, அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள மொத்த பங்குகளின் எண்ணிக்கையுடன் பெருக்கும்போது வரும் மொத்த மதிப்புதான் சந்தை மூலதனம் என்று குறிப்பிடப்படுகிறது. ஒரு நிறுவனத்தின் பங்கு விலை ஒவ்வொரு நாளின் வர்த்தகத்தை பொறுத்து மாறுபடும். எனவே, அதன் சந்தை மூலதன மதிப்பிலும் வேறுபாடுகள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








