இந்திய மாணவர் வடிவமைத்த பைக்கிற்கு உயிர் கொடுத்த பிஎம்டபிள்யூ... உலகின் முதல் மின்சார அட்வென்சர் ரக பைக்...
இந்தியாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் வடிவமைத்த இருசக்கர வாகனத்திற்கு பிஎம்டபிள்யூ உயிர் (உருவ அமைப்பு) வழங்கியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான பிஎம்டபிள்யூ, பிஎம்டபிள்யூ மோட்டாராட் எனும் பெயரில் பிரீமியம் தரத்திலான இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்து வருகின்றது. இந்நிறுவனத்தின் டூ-வீலர்களுக்கு உலகளவில் நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது.

இந்த நிலையில், உலக நாடுகளின் தேவையை அறிந்து இந்நிறுவனம் மின்சார இருசக்கர வாகன உற்பத்தியிலும் களமிறங்கியிருக்கின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த சில காலங்களாக இந்நிறுவனம் புதுமுக மின்சார வாகன மாடல்களை உலக சந்தையில் அறிமுகப்படுத்தி வருகின்றது.

இந்நிலையில், தற்போது பிஎம்டபிள்யூ நிறுவனம் மற்றுமொரு புதுமுக மின்சார தயாரிப்பை இவ்வுலகில் வெளியீடு செய்திருக்கின்றது. ஏடிவி (அட்வென்சர்) ஸ்டைலிலான மின்சார மோட்டார்சைக்கிளை பிஎம்டபிள்யூ மோட்டாராட் வெளியீடு செய்திருக்கின்றது.

இந்த மின்சார பைக்கிற்கு பிஎம்டபிள்யூ டி-05டி (BMW D-05T) என்ற பெயரை நிறுவனம் வைத்திருக்கின்றது. இதில் பல்வேறு புதுமையான தொழில்நுட்பங்களைச் சேர்த்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதைவிட, சிறப்பான தகவலாக இப்பைக்கை வடிவமைத்தவர் யார் என்பது பற்றிய தகவல் அமைந்துள்ளது.

ஆமாங்க, பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் இப்பைக்கை இந்தியர் ஒருவரே வடிவமைத்திருக்கின்றார். நீரஜ் ஜவேல் என்பவரே அவர். இவர் நேஷனல் இன்ஸ்டியூட் ஆஃப் டிசைன் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஆவார். இந்த கல்விக்கூடம் காந்தி நகரில் அமைந்திருப்பது குறிப்பிடத்தகுந்தது. இவர் வடிவமைத்த பைக்கிற்கே பிஎம்டபிள்யூ தற்போது உயிர்ப்பு வழங்கி வெளியீடு செய்துள்ளது.

தற்போது மின்சார திறன் கொண்டதாகக் களமிறங்கக் கூடிய அனைத்து வாகனங்களும் ஸ்கூட்டர் பிரிவைச் சார்ந்ததாகவோ அல்லது நேக்கட் பிரிவைச் சார்ந்ததாகவோ அல்லது ஸ்போர்ட்ஸ் பிரிவைச் சார்ந்ததாகவோ மட்டுமே இருக்கின்றன. ஆனால், நீரஜ் வடிவமைத்திருக்கும் மின்சார பைக் அட்வென்சர் ரக மின்சார மோட்டார்சைக்கிள் ஆகும்.

எனவேதான் உலகளவில் இப்பைக்கின் வெளியீடு ஈர்ப்பைப் பெற்றிருக்கின்றது. வழக்கத்திற்கான மாறான இதன் தோற்றம் மற்றும் ஸ்டைலில் பலர் இப்போதே மயங்கியிருக்கின்றனர். குறிப்பாக இதன் இருக்கை மற்றும் எதிர்கால ஸ்டைலிலான உடல் தோற்றம் இளைஞர்களை வெகுவாக கவரும் வகையில் அமைந்துள்ளது.

ஆனால், இப்பைக்கில் என்ன மாதிரியான அம்சங்கள் இடம்பெற இருக்கின்றன என்பது குறித்த தகவலை பிஎம்டபிள்யூ நிறுவனம் வெளியிடவில்லை. இருப்பினும், இப்பைக்கில் மனம் கவர் அம்சங்கள் பல இடம்பெற இருப்பதாக ஆவலை தூண்டும் வகையில் நிறுவனம் தகவலை வெளியிட்டிருக்கின்றது.

குறிப்பாக, கழட்டி மாட்டும் பேட்டரி, மேக்னடிக் சார்ஜிங் சிஸ்டம், பன்முக ரைடிங் மோட்கள் மற்றும் அதிக வேகத்தை வெளிப்படுத்தக்கூடிய மின் மோட்டார் என பல்வேறு கவர்ச்சிகரமான அம்சங்கள் இப்பைக்கில் இடம்பெற இருப்பதாக நிறுவனம் இப்போதே தெரிவித்துள்ளது.

தற்போது பிஎம்டபிள்யூ டி-05டி கான்செப்ட் மாடலாக மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. ஆகையால் இப்பைக்கை எப்போது உற்பத்தி மாடலாக உயர்த்தும் என்பது தெரியவில்லை. அதேசமயம், இப்போதைக்கு இப்பைக்கை தயாரிக்கும் எண்ணமும் நிறுவனத்திற்கு இல்லை என்பது தெரியவந்திருக்கின்றது.
Image Courtesy: Neeraj Jawale/Behance


Click it and Unblock the Notifications








