கொரோனா வைரஸ் பரவல்... ஷிப்ட்களின் எண்ணிக்கையை அதிரடியாக குறைத்தது சுஸுகி நிறுவனம்...
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் ஷிப்ட்களின் எண்ணிக்கையை அதிரடியாக குறைத்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கொரோனா வைரஸ் இரண்டாவது அலையால் இந்தியா தற்போது பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த முறையை போல் அல்லாமல், இம்முறை மிக கடுமையான பாதிப்புகளை கோவிட்-19 ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் உள்ள பல்வேறு வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்களது ஆலைகளை தற்காலிகமாக மூடி வருகின்றன.

இந்த வரிசையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் ஹரியானா மாநிலம் குர்கானில் உள்ள தனது ஆலையில், ஷிப்ட்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து கார்அண்ட்பைக் தளம் தற்போது செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ''எங்களது ஊழியர்களின் பாதுகாப்பு எங்களுக்கு மிகவும் முக்கியம். எனவே ஏப்ரல் 28ம் தேதியில் இருந்து மே 1ம் தேதி வரை ஷிப்ட்களின் எண்ணிக்கை மூன்றில் இருந்து ஒன்றாக குறைக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதனை நாங்கள் மேற்கொண்டுள்ளோம்.

சூழ்நிலையை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அதற்கு ஏற்ப வரும் மே 2ம் தேதி முதல் பணிகள் இயல்பு நிலைக்கு திரும்பும்'' என்றார். ஆனால் சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்திற்கு முன்னதாக பல்வேறு நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலைகளை தற்காலிகமாக மூடுவது குறித்த முடிவை எடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்படி டொயோட்டா மற்றும் எம்ஜி மோட்டார் ஆகிய நிறுவனங்கள் கார் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன. இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களை பொறுத்தவரை, ஹோண்டா நிறுவனம் இத்தகைய முடிவை எடுத்துள்ளது. ஹோண்டா நிறுவனத்திற்கு இந்தியாவில் 4 உற்பத்தி ஆலைகள் இருக்கின்றன.

இந்த 4 ஆலைகளிலும் வரும் மே 1ம் தேதி முதல் மே 15ம் தேதி வரை ஹோண்டா நிறுவனம் இரு சக்கர வாகன உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவுள்ளது. வரும் நாட்களில் இன்னும் பல்வேறு வாகன உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் முடிவை எடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பிரச்னை ஏற்பட்டபோது வாகன உற்பத்தி மற்றும் விற்பனை மிக கடுமையாக பாதிக்கப்பட்டது. நீண்ட நாட்கள் முழுமையான ஊரடங்கு அமலுக்கு கொண்டு வரப்பட்டதாலும், அதன் பின்னர் கடுமையான கட்டுப்பாடுகள் நிலவியதாலும் ஆட்டோமொபைல் துறை முடங்கியது.

ஆனால் கடந்த ஆண்டை காட்டிலும் இம்முறை இந்தியாவில் கொரோனா வைரஸ் மிக கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. எனவே இந்த ஆண்டிலும் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனை பணிகள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆட்டோமொபைல் துறையினருக்கு இது கவலையை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








