பெங்களூர் கொண்டு வரப்பட்டார் சி.எஸ்.சந்தோஷ்... உடல்நிலையில் லேசான முன்னேற்றம்!
டக்கார் ராலியில் படுகாயமடைந்த இந்திய பைக் பந்தய வீரர் சி.எஸ்.சந்தோஷ் சவூதியிலிருந்து ஏர் ஆம்புலன்ஸ் மூலமாக பெங்களூர் கொண்டு வரப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் முதன்மையான ராலி ரேஸ் பந்தய வீரர் சி.எஸ்.சந்தோஷ் அண்மையில் சவூதி அரேபியாவில் நடந்த டக்கார் ராலி பந்தயத்தில் கீழே விழுந்து படுகாயமடைந்தார். உலகின் மிக சவாலான இந்த ராலி ரேஸ் பந்தயத்தில் 7-வது முறையாக பங்கேற்றிருந்த சந்தோஷ் பெரிய அளவிலான ஆவலை இந்திய மோட்டார் பந்தய ரசிர்கள் மத்தியில் ஏற்படுத்தி இருந்தார்.
ஹீரோ மோட்டார்ஸ்போர்ட்ஸ் அணி சார்பில் சென்றிருந்த சந்தோஷ், டக்கார் ராலியின் 7வது ஸ்டேஜ் பந்தயத்தில் அதிவேகத்தில் சென்றபோது பைக் நிலைதடுமாறி கீழே விழுந்ததில், சி.எஸ்.சந்தோஷ் படுகாயமடைந்தார். குறிப்பாக, தலையில் அவருக்கு காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து, பிற வீரர்களின் உதவியால், மீட்புப் படையினர் ஹெலிகாப்டர் மூலமாக சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக ரியாத் மருத்துவமனையில் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த, சி.எஸ்.சந்தோஷின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து, அவரை சொந்த ஊரான பெங்களூருக்கு கொண்டு வர குடும்பத்தினர் விரும்பினர்.
இதையடுத்து, கடந்த வியாழக்கிழமை ரியாத் நகரில் இருந்து ஏர் ஆம்புலன்ஸ் மூலமாக பெங்களூர் கொண்டு வரப்பட்டார். பின்னர், அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்படுகிறது. அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதால், மயக்க மருந்து கொடுப்பது நிறுத்தப்பட்டுள்ளதால், அவர் தற்காலிக கோமா நிலையில் இருந்து மீண்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இருப்பினும், அவர் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார். அவர் விரைவாக நலம் பெற மோட்டார் பந்தய வீரர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications








