டக்கார் ராலி நிகழ்வுகளை இந்தியாவில் ஒளிபரப்பும் 1 ஸ்போர்ட்ஸ் டிவி!
டக்கார் ராலி நிகழ்வுகளை 1 ஸ்போர்ட்ஸ் சேனல் மூலமாக இந்தியாவில் ஒளிபரப்பு செய்வதற்கு ஹீரோ மோட்டாகார்ப் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

உலகின் மிக சவாலான ராலி பந்தயங்களில் ஒன்றாக கருதப்படும் டக்கார் ராலியின் துவக்க விழா இன்று நடக்கிறது. நாளை முதல் பல கட்டங்களாக போட்டி நடைபெற இருக்கிறது. சவூதி அரேபியாவில் உள்ள ஜெத்தா நகரில் துவங்க இருக்கும் இந்த பந்தய நிகழ்வுகளை இந்தியர்களின் கண்களுக்கு விருந்து படைக்கும் முயற்சியில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இறங்கி இருக்கிறது.

இதன்படி, 1 ஸ்போர்ட்ஸ் டிவி சேனலுடன் ஹீரோ மோட்டோகார்ப் ஒப்பந்தம் செய்துள்ளது. டக்கார் ராலியின் பிரத்யேக நிகழ்வுகளை 1 ஸ்போர்ட்ஸ் டிவி சேனல் மூலமாக இந்தியர்கள் பார்ப்பதற்கான வாய்ப்பு கிடைக்க உள்ளது.

இன்று நடைபெற இருக்கும் டக்கார் ராலியின் போடியம் ஸ்டார்ட் நிகழ்வை நேரடியாக 1 ஸ்போர்ட்ஸ் டிவி சேனலில் நேரலையில் கண்டுகளிக்கும் வாய்ப்பு உள்ளது.

இன்று மாலை 4.15 மணி முதல் நள்ளிரவு 1.30 வரையில் ஒளிபரப்பாக உள்ளது. அதேபோன்று, ஜனவரி 3 முதல் ஜனவரி 15 வரையிலான டக்கார் ராலி பந்தயத்தின் முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பை தினசரி இரவு 9.30 மணி முதல் 10 மணி வரை ஒளிபரப்பப்பட உள்ளது.

டக்கார் ராலி பந்தயத்தை ஒளிபரப்பும் 1 ஸ்போர்ட்ஸ் சேனலானது டாடா ஸ்கை ஆன்டெனா வைத்திருப்பவர்களுக்கு 498வது சேனலாகவும், டிஷ் டிவியில் 635வது சேனலாகவும், டி2எச் சேனலில் 627வது சேனலாகவும் இடம்பெற்றுள்ளது. ஐஎன்கேபிள், சிதி கேபிள், ஏசியாநெட் உள்ளிட்ட உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மூலமாகவும் இந்த 1 ஸ்போர்ட்ஸ் சேனலின் ஒளிபரப்பை காண முடியும்.

டக்கார் ராலி நிகழ்வு ஒளிபரப்பு குறித்து 1 ஸ்போர்ட்ஸ் சேனல் தலைமை செயல் அதிகாரி ஆர்.சி.வெங்கடேஷ் கூறுகையில்,"மதிப்புமிக்க டக்கார் ராலி பந்தயத்தை எங்களது சேனல் மூலமாக இந்தியாவில் ஒளிபரப்புவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம்.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்பான்சர் உதவியுடன் இந்த ஒளிபரப்பை வழங்க உள்ளோம். இந்த ஒளிபரப்பு மூலமாக இந்தியாவில் உள்ள மோட்டார்ஸ்போர்ட்ஸ் ரசிகர்களின் வட்டத்தை வெகுவாக அதிகரிக்கும்," என்று தெரிவித்துள்ளார்.

டக்கார் ராலி பந்தயத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஹீரோ மோட்டார்ஸ்போர்ட்ஸ் அணி சார்பில் சி.எஸ்.சந்தோஷ், செபாஸ்டியன் பஹ்லர், ஜாக்கியம் ரோட்ரிக்கஸ் ஆகிய வீரர்கள் பங்கு கொள்ள இருக்கின்றனர். இந்த போட்டியில் இருந்து இந்தியாவின் மற்றொரு முன்னணி ரேஸிங் அணியான டிவிஎஸ் விலகிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

சவூதி அரேபியாவில் உள்ள ஜெத்தா நகரில் நாளை துவங்க இருக்கும் 43வது டக்கார் ராலி, பல்வேறு கடும் வழித்தடங்களை கடந்து மீண்டும் ஜனவரி 15ந் தேதி ஜெத்தா நகரில் வந்து நிறைவு பெற இருக்கிறது. இரண்டு வாரங்கள் தொடர்ந்து நடைபெற இருக்கும் இந்த பந்தயத்தில், ஜனவரி 9ந் தேதி வீரர்களுக்கான ஒய்வு நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








