கோவை வாசிகளே காசை கரியாக்காதீங்க... பெட்ரோல் டூ-வீலர்களுக்கு குட்-பை சொல்லும் நேரம் வந்தாச்சு...
மலையளவு உயர்ந்து வரும் பெட்ரோல் விலையுயர்வில் தப்பிக்க வைக்கும் வகையில் அண்மையில் ஏத்தர் மின்சார ஸ்கூட்டர் கோவையில் விற்பனைக்கு களமிறங்கியது. இந்த நிலையில் இந்த ஸ்கூட்டரின் டெலிவரி பணிகள் அந்நகரத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் மின்வாகன உற்பத்தி நிறுவனம் ஏத்தர் எனெர்ஜி. இந்த நிறுவனம் நாட்டின் குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே நிறுவனம் தனது வர்த்தக பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

அந்தவகையில், இந்நிறுவனம் மின்சார ஸ்கூட்டர்களை விற்பனைச் செய்யும் நகரங்களில் கோவையும் ஒன்று. இங்கு மிக சமீபத்திலே புக்கிங் நடவடிக்கைகளை நிறுவனம் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, தற்போது புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு மின்சார ஸ்கூட்டர்களை டெலிவரி கொடுக்கும் பணியில் ஏத்தர் களமிறங்கியிருக்கின்றது.

ஆரம்ப கட்டமாக, புக்கிங் செய்த 15 வாடிக்கையாளர்களுக்கு மின்சார ஸ்கூட்டர் டெலிவரி கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதுகுறித்த தகவலை ஏத்தர் எனெர்ஜி நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கின் வாயிலாக தெரிவித்திருக்கின்றது.

இத்தகவலுடன் சேர்த்து வாடிக்கையாளர்களுக்கு ஸ்கூட்டர்களை டெலிவரி கொடுக்கும் புகைப்படங்களையும் நிறுவனம் வெளியிட்டிருக்கின்றது. இந்தியாவில் நாளுக்கு நாள் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கின்றது.

அதிலும், பெட்ரோல்-டீசல் விலை விண்ணை முட்டுமளவிற்கு உயர்ந்ததை அடுத்து நாட்டில் பயன்பாட்டில் இருக்கும் மின் வாகனங்களின் எண்ணிக்கைக் கணிசமாக உயர தொடங்கியிருக்கின்றது. இம்மாதிரியான சூழ்நிலையை தங்களுக்கு சாதமாக்கிக் கொள்ளும் வகையில் ஏத்தர் நிறுவனம் அதன் வர்த்தக எல்லையை விரிவாக்கம் செய்து வருகின்றது.

அந்தவகையில், கோவையில் சமீபத்தில் புக்கிங் பணிகள் தொடங்கப்பட்டநிலையில் ஸ்கூட்டர்களின் டெலிவரி பணிகள் தற்போது தொடங்கியிருக்கின்றன. இது அந்நகர வாசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தற்போது மலையளவு உயர்ந்து நிற்கும் பெட்ரோல் விலை உயர்வில் இருந்து தப்பிக்க இந்த வாகனம் உதவும் என மின் வாகன பிரியர்கள் அதீத நம்பிக்கைக் கொண்டிருக்கின்றனர்.

முன்னதாக சென்னை, பெங்களூரு ஆகிய இரு நகரங்களில் மட்டுமே இந்த ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைத்து வந்தன. இந்த நிலையில், தற்போது, கோவை, டெல்லி, ஹூப்ளி, கோழிகோடு, மும்பை, நாக்பூர், புனே, ஆமதாபாத், கொச்சி மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்கள் வரை இதன் விற்பனை எல்லை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மட்டும் சென்னை மற்றும் கோவை என இரு நகரங்களில் இந்த ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்நிறுவனம் ஏத்தர் 450 ப்ளஸ் மற்றும் ஏத்தர் 450 எக்ஸ் என இரு விதமான தேர்வுகளில் அதன் மின்சார ஸ்கூட்டரை விற்பனைக்கு வழங்கி வருகின்றது.

இதில், 450 ப்ளஸ் தேர்வுக்கு ரூ. 1,41,786 என்றும், 450 எக்ஸ் தேர்வுக்கு 1,60,796 என்ற விலையையும் நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இரு மின்சார ஸ்கூட்டர்களும் வெவ்வேறு திறன்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. 450 ப்ளஸ் மின்சார ஸ்கூட்டர் அதிகபட்சமாக 70 கிமீ ரேஞ்ஜ், 5.4 கிலோவாட் மின்மோட்டார், 22 என்எம் டார்க் மற்றும் அதிக வேகமாக சார்ஜ் செய்யும் வசதி என பல்வேறு சிறப்பு வசதிகளுடன் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

450 எக்ஸ் மின்சார ஸ்கூட்டர் அதிகபட்சமாக ஒரு முழுமையான சார்ஜில் 85 கிமீ தூரம் வரை பயணிக்கும். இது அதிகபட்சமாக 6கிலோவாட் திறனை வெளியேற்றும். தொடர்ந்து, 26 என்எம் டார்க்கை இது வெளிப்படுத்தும். இதுபோன்ற சற்று அதிக திறன் வெளிப்பாட்டை 450 எக்ஸ் மாடல் கொண்டிருக்கின்ற காரணத்தினால்தான் இதன் விற்பனை மற்ற மாடலைக் காட்டிலும் சற்று அதிகமாக இருக்கின்றது.

இதுதவிர 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், 4ஜி சிம் கார்டு அடிப்படையிலான நேரடி இணைய வசதி, புளூடூத் இணைப்பு என கூடுதல் சிறப்பு வசதிகளும் இந்த ஸ்கூட்டரில் இருக்கின்றன. இத்துடன், நேவிகேஷன், தொழில்நுட்ப பிரச்னைகள் குறித்த தகவல்களை வழங்கும் வசதி மற்றும் நேரடியாகவே சாஃப்ட்வேர் அப்டேட் செய்யும் நவீன வசதி சில சிறப்பம்சங்களும் இதில் இடம்பெற்றிருக்கின்றன.


Click it and Unblock the Notifications








