பெட்ரோல் விலையுயர்வால் உச்சகட்ட மகிழ்ச்சியில் பிரபல நிறுவனம்... காரணம் தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!
பெட்ரோல் விலையுயர்வைக் கண்டு மக்கள் துயரத்தில் ஆழ்ந்திருக்கின்ற வேலையில் ஓர் நிறுவனம் இதனால் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

ஏன்தான் ஏழையாக பிறந்தோமோ என நினைக்குமளவிற்கு மக்களை தள்ளியிருக்கின்றது நாள்தோறும் உயர்ந்து வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி. இந்த நிலையிலேயே மக்கள் மீது கூடுதல் சுமையை விதிக்கும் வகையில் மிக சமீபத்தில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு உயர்த்தியது.

இதுபோதாதென்று, வீட்டு சமையல் எரிவாயுவின் விலையிலும் ஒரே அடியாக ரூ. 50ஐ உயர்த்தியது மத்திய அரசு. இதனால், இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகினர். தொடர்ந்து, இமாலய அளவில் உயர்ந்திருக்கும் பெட்ரோல், டீசல் விலையுயர்வால் தினசரி வாகன பயன்பாட்டாளர்கள் தங்களின் வாகனங்களை வெளியில் எடுக்கவே தயக்கம் காட்டி வருகின்றனர்.

சரி, ஷேர் ஆட்டோவில் போகலாம் என நினைத்தால், அவர்களும் ஆட்டோ எரிவாயு விலையுயர்வு காரணத்தால் கட்டணத்தை உயர்த்தியிருக்கின்றனர். இவ்வாறு, விலையுயர்வு மக்களை சுத்தி சுத்தி அடிக்கின்ற வேலையில் ஓர் நிறுவனம் எரிபொருள் விலையுயர்வை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றது.

மின்சார வாகன உற்பத்தியில் ஈடுபட்டு வரும் ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனமே அந்நிறுவனம் ஆகும். எரிபொருள் விலையுயர்வால் மக்கள் பலர் தற்போது மின்வாகன பயன்பாட்டை நோக்கி நகர ஆரம்பித்திருக்கின்றனர். அந்தவகையில், எரிபொருள் விலையுயர்வைக் காரணம் காட்டி மின் வாகனங்களின் பக்கம் மாறுவோர்களில் பலர் ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தைத் தற்போது நாடியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எரிபொருள் வாகனங்களைக் காட்டிலும் மின்சார வாகனத்தைப் பராமரிப்பது மிக குறைந்த செலவீணத்தையே ஏற்படுத்தும். இதை உணர்ந்தே மக்கள் பலர் தற்போது மின் வாகன பயன்பாட்டிற்கு மாற தொடங்கியிருக்கின்றனர். இதனால்தான் ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் தற்போது மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கின்றது.

குறிப்பாக, மின் வாகனங்களை வாங்குவதற்காக நாடுவோரின் எண்ணிக்கை அதிகரித்திருக்கின்ற காரணத்தினால் நிறுவனம் மகிழ்ச்சியில் மூழ்கியிருக்கின்றது.புதிய மின் வாகனங்களை வாங்கும் வகையில் விசாரணை மேற்கொள்வோரின் எண்ணிக்கையும் தற்போது உயர்ந்திருப்பதாக ஹீரோ நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. இந்நிறுவனம், மிக மலிவு விலைக் கொண்ட மின்சார இருசக்கர வாகனங்களை விற்பனைச் செய்து வருகின்றது.

அந்தவகையில் நிறுவனத்தின் சமீபத்திய குறைந்த விலை மின்சார ஸ்கூட்டராக சிட்டி ஸ்பீடு நைக்ஸ் இருக்கின்றது. இந்த வாகனத்தைக் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலேயே நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இதன் விலை ரூ. 64,640 ஆகும். இது ஓர் முழுமையான சார்ஜில் 82 கிமீ தூரம் வரை செல்லும். இதே மின்சார ஸ்கூட்டர் 210 கிமீ ரேஞ்ஜை வழங்கும் திறனிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

அந்த மாடலின் விலை சற்று கூடுதல் ஆகும். ஹீரோ எலெக்ட்ரிக் தனி நபர் பயன்பாட்டிற்கு மட்டுமின்றி வர்த்தக ரீதியாக பயன்படக்கூடிய வாகனங்களையும் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இதுபோன்ற விரிவான சேவையில் நிறுவனம் ஈடுபட்டு வருவதால், தனது விற்பனை மையங்களை அதிகப்படுத்தும் முயற்சியில் நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது.

இந்நிலையிலேயே இந்நிறுவனத்தின் தயாரிப்புகளை வாங்குவோர் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக உயர்ந்து வருவதாக நிறுவனம் தகவல் வெளியிட்டிருக்கின்றது.


Click it and Unblock the Notifications








