12 எலெக்ட்ரிக் டூ-வீலர்கள்... 8 இ-ஆட்டோக்கள்... பெரும் திட்டத்துடன் நாட்டில் களமிறங்கும் இந்திய நிறுவனம்!
இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் மின் வாகன உற்பத்தி நிறுவனம் ஒன்று ஒட்டுமொத்தமாக 12 எலெக்ட்ரிக் டூ-வீலர்கள் மற்றும் 8 இ-ஆட்டோக்களை நாட்டில் விற்பனைக்குக் களமிறக்க திட்டமிட்டிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம், வாங்க.

உத்தர பிரதேசம் மாநிலம் காசியாபாத்தை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம், இ-ஆஷ்வா ஆட்டோமோட்டிவ் (e-Ashwa Automotive) இந்நிறுவனம் இந்தியாவில் பன்முக தேர்வில் மின்சார வாகனங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கின்றது.

தொழில்முனைவோர்களுக்கான வாகனம் (business-to-business) தொடங்கி தனி நபர் (business-to-consumer) பயன்படுத்தக் கூடியது என இரு பிரிவிலும் மின்சார இருசக்கர வாகனங்கள் களமிறக்கப்படும் என நிறுவனம் அறிவித்துள்ளது. இ-ஆஷ்வா முன்னதாக வேற்று பிராண்டுகளின் கீழ் அதன் தயாரிப்புகளை விற்பனைக்கு வழங்கி வந்தது.

கூட்டணியின் அடிப்படையில் கடந்த சில ஆண்டுகளாகவே இந்த நடவடிக்கையில் நிறுவனம் ஈடுபட்டு வந்தது. இந்த நிலையிலேயே தனது சொந்த பிராண்டில் விற்பனையைத் தொடங்க நிறுவனம் திட்டமிட்டு அதற்கான பணியில் களமிறங்கியிருக்கின்றது. இ-ஆஷ்வா ஒட்டுமொத்தமாக 12 மின்சார இருசக்கர வாகன மாடல்களையும், எட்டு மூன்று சக்கர எலெக்ட்ரிக் வாகனங்களையும் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது.

இந்த தகவலை நேற்றைய (நவம்பர் 14) தினம் வெளியிட்ட அறிக்கையின் வாயிலாக இ-ஆஷ்வா உறுதிப்படுத்தியுள்ளது. 630-க்கும் அதிகமான பிரத்யேக விற்பனையகங்கள் மற்றும் நாடு முழுவதிலும் சில்லறை வலையமைப்புகளை நிறுவனம் கொண்டிருக்கின்றது. இவற்றின் வாயிலாக அனைத்து மின்சார இருசக்கர வாகனங்களையும் விற்பனைக்கு வழங்கப்பட இருக்கின்றது. இதற்கான நடவடிக்கையில் நிறுவனம் தற்போது திவீரமாக களமிறங்கியுள்ளது. இதன் அடிப்படையிலேயே நேற்றை தினம் அறிவிப்பானது வெளியிடப்பட்டது.

இந்தியாவில் சமீப காலமாக மின் வாகனங்களுக்கான தேவை தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணம் காணப்படுகின்றது. மேலும், அரசுகள் தங்களின் பங்காக மின் வாகனங்களின் பயன்பாடுகளை அதிகரிக்கச் செய்யும் வகையில் பன்முக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த தேவையைப் பூர்த்தி செய்ய ஒன்றிய மற்றும் மாநில அரசாங்களின் கொள்கைகளுக்கு இணங்க தனது மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்த இ-ஆஷ்வா திட்டமிட்டுள்ளது.

குறைந்த வேகம் தொடங்கி அதி திறனை வெளிப்படுத்தக் கூடிய மின்சார வாகனங்களை இ-ஆஷ்வா களமிறக்க இருக்கிறது. இத்துடன், நிறுவனம் பன்முக வசதிகள் கொண்ட மூன்று சக்கர வாகனங்களை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. குப்பை அகற்றுதல், காய்-கறி விற்றல் மற்றும் சரக்குகளைக் கையாளுதல் ஆகிய வசதிகள் கொண்ட மூன்று சக்கர வாகனங்களை வெவ்வேறு தேர்வுகளில் விற்பனைக்குக் களமிறக்கப்பட இருக்கின்றன.

இதுமட்டுமின்றி, பயணிகளே ஏற்றி செல்லும் வசதிக் கொண்ட ஆட்டோ ரிக்ஷாவையும் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது. இ-ஸ்கூட்டர்கள் , இ-மோட்டார் பைக்குகள், இ-ரிக்ஷாக்கள், இ-ஆட்டோ, இ-லோடர்கள், இ-ஃபுட் கார்ட் மற்றும் இ-குப்பை வாகனங்கள் என பன்முக தேர்வுகளில் கிடைக்க இருப்பது குறிப்பிடத்தகுந்தது. நிறுவனம் ஏற்கனவே இந்த பிரிவுகளின் கீழ் 6 ஆயிரம் மின்சார வாகனங்களை விற்பனைக்கு வழங்கியிருப்பதாக தெரிவித்திருக்கின்றது.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை சமீப காலமாக உயர்ந்த வண்ணம் காணப்படுகின்றது. தற்போது தமிழகம் உட்பட பல்வேறு ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100ஐ தாண்டி விற்பனைச் செய்யப்படுகின்றது. இந்த நிலையால், இருசக்கர வாகன பன்பாட்டாளர்கள் பலர் தற்போது பொது போக்குவரத்திற்கு மாற தொடங்கியிருக்கின்றனர். ஒரு சிலர் மின்சார வாகன பயன்பாட்டிற்கு மாற தொடங்கியிருக்கின்றனர்.

இதன் விளைவாக நாட்டில் மின் வாகனங்களின் விற்பனை எப்போது இல்லாத அளவிற்கு உயர்ந்து காணப்படுகின்றது. பெட்ரோலால் இயங்கும் இருசக்கர வாகனங்களின் விற்பனை கணிசமாக இறங்கு முகத்தைச் சந்தித்து வரும் நிலையில் மின்சார வாகனங்கள் விற்பனை லேசான ஏறுமுகத்தைச் சந்தித்து வருகின்றது. இந்த எதிர்காலத்தில் பெட்ரோல் இருசக்கர வாகனங்களுக்கு இணையாக பேட்டரியால் இயங்கும் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை உயரும் என்பது தெரிய வந்திருக்கின்றது.

டர்னர் கிளாசிக், க்யூட்டி, குளோப், ஸ்போக், டப் லோடர், ஈசி கோ ப்ளஸ், பேந்தம், பீஸ்ட் மற்றும் ஃபிடேட்டோ 21 உள்ளிட்ட இ-மின்சார இருசக்கர வாகனங்களை விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இதில், மிகக் குறைவான விலைக் கொண்ட இருசக்கர வாகனமாக பேந்தம் காட்சியளிக்கின்றது. இது இந்தியாவில் ரூ. 39,999 என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








