ராயல் என்பீல்டை அடுத்து ஜப்பானில் புதிதாக வர்த்தக பணியை தொடங்கிய இந்திய நிறுவனம்! எந்த நிறுவனம்னு தெரியுமா?
பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ராயல் என்பீல்டு (Royal Enfield)-ஐ தொடர்ந்து மற்றுமொரு மேட்-இன்-இந்தியா தயாரிப்பு ஜப்பான் நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம், வாங்க.

சென்னையை தலைமையமாகக் கொண்டு இயங்கும் ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனம், அதன் புகழ்வாய்ந்த இருசக்கர வாகன மாடல்களில் ஒன்றான ஹிமாலயன் அட்வென்சர் ரக பைக்கை ஜப்பான் நாட்டில் விற்பனைக்குக் களமிறக்குவதாக மிக மிக சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது.

ஏற்கனவே, நிறுவனம் இரட்டையர்கள் என்றழைக்கப்படும் கான்டினென்டல் ஜிடி 650 (Continental GT 650) மற்றும் இன்டர்செப்டார் 650 (Interceptor 650) ஆகிய மோட்டார்சைக்கிள்களை அது விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இவற்றின் வரிசையிலேயே ராயல் என்பீல்டு நிறுவனம் ஹிமாலயன் பைக்கையும் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

இதன் வாயிலாக ஜப்பான் நாட்டில் தனது இருப்பை மிக ஆழமாக ஊண்றியது ராயல் என்பீல்டு. இந்த நிலையில் தற்போது மற்றுமொரு இந்திய நிறுவனம் ஜப்பானில் கால் தடம் பதித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மஹாராஷ்டிரா மாநிலம், புனேவை மையமாகக் கொண்டு மின் வாகன உற்பத்தியில் ஈடுபட்டு வரும் இ-மோட்டாராட் (EMotorad) நிறுவனமே புதிதாக ஜப்பான் நாட்டில் வர்த்தக பணிகளை தொடங்கியிருக்கும் நிறுவனம் ஆகும்.

இந்நிறுவனம், மேட்-இன்-இந்தியா தயாரிப்புகளான மூன்று முன்னணி இ-மிதிவண்டி மாடல்களை நிறுவனம் ஜப்பானில் அறிமுகப்படுத்தியிருக்கின்றது. இதனைத் தொடர்ந்து நான்காவது மாடலையும் அந்நாட்டில் விற்பனைக்குக் களமிறக்கும் முயற்சியில் நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது. ஜப்பானில் இ-வாகன பிரிவில் போட்டி அதிகம். இதனைச் சமாளிக்கும் பொருட்டே சற்றே தீவிரமாக களமிறங்க நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது.

அதேநேரத்தில், இமோட்டாராட் நிறுவனம், ஜப்பான் நாட்டில் மட்டுமின்றி நேபாளத்திலும் புதிதாக வர்த்தக பணிகளைத் தொடங்கியிருக்கின்றது. நேபாளத்தில் டி-ரெக்ஸ் மற்றும் இஎம்எக்ஸ் ஆகிய இரு மாடல்களை விற்பனைக்கு களமிறக்கியதன் வாயிலாக நிறுவனம், அந்நாட்டில் முதல் முறையாக கால் தடம் பதித்திருக்கின்றது. இந்தியாவிலும் இந்த இரு இ-சைக்கிள் மாடல்களையே மட்டுமே இ-மோட்டாராட் விற்பனைக்கு வழங்கி வருகின்றது.

அதேவேலையில், ஜப்பான் நாட்டில் எக்ஸ்ப்ளோரர், க்ளைடர் மற்றும் டால்ஃபின் ஆகிய மூன்று இ-சைக்கிள்களை அது அறிமுகம் செய்திருக்கின்றது. இவற்றின் வரிசையில் மிக விரைவில் இன்னும் சில இ-மிதிவண்டிகளையும் சேர்க்க நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது. தற்போது அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் மூன்று இ-சைக்கிள்களும் பிரத்யேகமாக ஜப்பான் வாடிக்கையாளர்களை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டவை ஆகும்.

ஆகையால், இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் விற்பனைக்குக் கிடைக்கும் இ-மிதிவண்டிகளைக் காட்டிலும் லேசான மாறுபாட்டுடன் அது இருக்கும். நிறுவனம், முன்னதாக இந்தியாவில் வர்த்தக பணிகளைத் தொடங்கிய கையோடு அரபு நாட்டிலும் அதன் மின்சார மிதிவண்டிகளை விற்பனைக்கு களமிறக்கியது.

இந்த நிலையிலேயே தனது வெளிநாட்டு வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யும் வகையில் ஜப்பான் மற்றும் நேபாளத்தில் இமோட்டாராட் அதன் மின்சார சைக்கிளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது. என்ன மாதிரியான சிறப்பு வசதிகள் கொண்ட இ-சைக்கிள்கள் அங்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன என்பது பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை.

நேபாளத்தில் அறிமுகம் செய்யப்பட்டிருப்பது இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் அதே மாடல் இ-சைக்கிள்கள் என்பதால் பெரியளவில் அவற்றில் மாற்றம் இருக்காது என நம்பப்படுகின்றது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.


Click it and Unblock the Notifications








