இந்தியாவில் 3 புதிய எலெக்ட்ரிக் டூவீலர்கள் அறிமுகம்... ஒரு முறை சார்ஜ் செய்தால் எவ்வளவு கிமீ ஓட்டலாம் தெரியுமா
இந்தியாவில் 3 புதிய எலெக்ட்ரிக் டூவீலர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இவிட்ரிக் மோட்டார்ஸ் (Evtric Motors) நிறுவனம் இந்திய சந்தையில் மூன்று எலெக்ட்ரிக் டூவீலர்களை அறிமுகம் செய்துள்ளது. இவை ஹை-ஸ்பீடு ரகத்தை சேர்ந்த எலெக்ட்ரிக் டூவீலர்கள் ஆகும். இவிட்ரிக் ரைஸ் (மோட்டார்சைக்கிள்), மைட்டி (ஸ்கூட்டர்) மற்றும் இவிட்ரிக் ரைடு ப்ரோ (ஸ்கூட்டர்) ஆகியவைதான் இவிட்ரிக் நிறுவனத்தால் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள எலெக்ட்ரிக் டூவீலர்கள் ஆகும்.
கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தியா எக்ஸ்போ சென்டரில் இவி இந்தியா எக்ஸ்போ 2021 (EV India Expo 2021) தற்போது நடைபெற்று வருகிறது. இதில்தான் இந்த மூன்று எலெக்ட்ரிக் டூவீலர்களையும் இவிட்ரிக் மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்தது. இவிட்ரிக் ரைஸ் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளில் 3.0 KWH லித்தியம் அயான் பேட்டரி தொகுப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 120 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் அதிகபட்சமாக மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் வேகத்தில் பயணம் செய்யும். இதுதவிர நாங்கள் ஏற்கனவே கூறியபடி மைட்டி மற்றும் இவிட்ரிக் ரைடு ப்ரோ என்ற இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும் இவிட்ரிக் மோட்டார்ஸ் நிறுவனம் காட்சிப்படுத்தியது.

இதில் ரைடு ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 90 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய முடியும். அதே நேரத்தில் இந்த எலெக்ட்ரிக் அதிகபட்சமாக மணிக்கு 75 கிலோ மீட்டர்கள் வேகத்தில் செல்ல கூடியது. இந்த வரிசையில் மைட்டி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 90 கிலோ மீட்டர்கள் வரை பயணிக்க முடியும். இந்த ஸ்கூட்டர் அதிகபட்சமாக மணிக்கு 70 கிலோ மீட்டர்கள் வேகத்தில் செல்ல கூடியது.
இதுகுறித்து இவிட்ரிக் மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிறுவனரும், நிர்வாக இயக்குனருமான மனோஜ் பாட்டீல் கூறுகையில், ''தரமான தயாரிப்புகளை வழங்குவதற்காக ஒட்டுமொத்த இவிட்ரிக் மோட்டார்ஸ் நிறுவனமும் கடுமையாக உழைத்துள்ளது. எங்கள் தயாரிப்புகளை வெளியிடுவதற்கு இவி இந்தியா எக்ஸ்போ 2021 சிறப்பான வாய்ப்பை எங்களுக்கு வழங்கியுள்ளது.
இந்த எலெக்ட்ரிக் தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. எலெக்ட்ரிக் வாகன தொழில் துறையினர், பார்வையாளர்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை நிபுணர்கள் என பலதரப்பினரும் இந்த தயாரிப்புகளை பாராட்டியுள்ளனர்'' என்றார். தற்போதைய நிலையில் இந்தியா முழுவதும் 70க்கும் மேற்பட்ட வினியோகஸ்தர்கள் இருப்பதாக இவிட்ரிக் மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் நடப்பு நிதியாண்டு இறுதிக்குள் இதனை 150 ஆக உயர்த்த முயற்சி செய்து வருவதாகவும் இவிட்ரிக் மோட்டார்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. இதுகுறித்து மனோஜ் பாட்டீல் மேலும் கூறுகையில், ''சந்தையை நன்கு ஆராய்ந்தும், வாடிக்கையாளர்களின் கருத்துக்களை கேட்டறிந்த பின்னரும்தான் இந்த தயாரிப்புகளை நாங்கள் உருவாக்கினோம்.
இந்தியாவிற்கு எலெக்ட்ரிக் வாகனங்கள் புதியவை. இதில் இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது. எனினும் வாடிக்கையாளர்களின் கருத்துக்களை தீவிரமாக கவனத்தில் கொள்ளாவிட்டால், தொழில்துறையின் வளர்ச்சி விகிதம் சரிவடையும். நாங்கள் வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை கொடுப்பவர்கள். டிசைன், தொழில்நுட்பம் உள்ளிட்ட அம்சங்களில் அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் தயாரிப்புகளை வழங்குவோம்'' என்றார்.
இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்கள் வேகமாக பிரபலமாகி வருகின்றன. குறிப்பாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்தான் இங்கு அதிகளவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன.
அதன் டெலிவரி பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் டெலிவரி கிடைக்கும் நகரங்களின் எண்ணிக்கையை ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் படிப்படியாக அதிகரித்து கொண்டே வருகிறது. இந்தியாவில் ஓலா எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

டிவிஎஸ் ஐ-க்யூப், ஏத்தர் 450எக்ஸ் மற்றும் பஜாஜ் சேத்தக் என இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் உள்ள எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுடன் ஓலா எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் போட்டியிட்டு வருகின்றன. வரும் காலங்களில் இந்திய சந்தையில் இன்னும் ஏராளமான எலெக்ட்ரிக் தயாரிப்புகள் விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளன.


Click it and Unblock the Notifications








