நாட்டில் மின்சார டூ-வீலர்கள் என்ன வேகத்தில் விற்பனையாகுது தெரியுமா? வாரத்துக்கே பல ஆயிரம் யூனிட்டுகள் விற்குது
இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களின் விற்பனை பல மடங்கு அதிகரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து வெளியாகியிருக்கும் கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களின் விற்பனை பன் மடங்கு உயர்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு ஃபேம்-2 திட்டமே காரணம் என ஒன்றி அரசு தெரிவித்திருக்கின்றது. மின் வாகன பயன்பாட்டாளர்களை ஊக்குவிப்பது மட்டுமே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

மானியம் போன்ற பல்வேறு சிறப்பு சலுகைகள் இத்திட்டத்தின் வாயிலாகவே நாட்டில் அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் காரணத்தினால்தான் நாட்டில் மின் வாகன பயன்பாட்டாளர்கள் தற்போது அதிகரித்திருக்கின்றனர். மின் வாகனங்கள் விற்பனைக்கு வந்த புதிதில் பல மடங்கு அதிக விலைக் கொண்டவையாக இருந்தன.

ஆகையால், பலரால் இதை வாங்க முடியாத நிலை தென்பட்டது. இந்த நிலையை மாற்றும் பொருட்டு ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்டதே ஃபேம்-2 திட்டம். இது கொண்டு வரப்பட்டதன் நோக்கம் தற்போது நிறைவேறியிருக்கின்றது என்றே கூறலாம். இதை உறுதிப்படுத்தக் கூடிய தகவலே தற்போது வெளியாகியிருக்கின்றது.

இதனை உறுதிப்படுத்தக் கூடிய தகவலையே கனரக தொழில்துறை அமைச்சகமும் தற்போது வெளியிட்டிருக்கிகின்றது. அது வெளியிட்டிருக்கும் தகவலில், வாரம் ஒன்றிற்கு வெறும் 700 யூனிட்டுகளாக விற்பனையாகிக் கொண்டிருந்த மின்சார இருசக்கர வாகனங்கள் ஃபேம்2 திட்டத்தின் வருகைக்கு பின்னர் 5 ஆயிரம் யூனிட்டுகளாக மாறியிருப்பதாக தெரிவித்துள்ளது. இது ஃபேம்-2 திட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகக் கருதப்படுகின்றது.

ஃபேம்-2 திட்டத்தின்கீழ் ஒன்றிய அரசு 10 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியது. மின் வாகனங்களின் விரைவான தத்தெடுப்பிற்கு உதவும் பொருட்டு இத்தகைய பெரும் தொகை பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு ஒதுக்கியது. இதன் வாயிலாகவே முன்பு லட்ச ரூபாய்க்கும் அதிகமான விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வந்த மின்சார இருசக்கர வாகனங்களின் விலை தற்போது பன் மடங்கு குறைந்துக் காணப்படுகின்றது.

நாட்டில் தற்போது ரூ. 40 ஆயிரத்திற்கும் குறைவான விலை மின்சார இருசக்கர வாகனங்கள் இருசக்கர வாகனங்கள் விற்பனைக்குக் கிடைத்தது வருகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. தொடர்ந்து, ஒன்றிய அரசு மின் வாகனங்களுக்கான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளையும் இத்திட்டத்தின் வாயிலாக உருவாக்கி வருகின்றது. சார்ஜிங் மையங்களை கட்டமைத்தல், மின் வாகனங்களுக்கான தொழில்நுட்ப வசதிகளை உருவாக்குதல் உள்ளிட்ட பணிகளை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது.

எலெக்ட்ரிக் வாகன விற்பனைக்கு தற்போது பெரும் தடை கல்லாக போதிய சார்ஜிங் மையங்கள் இல்லாத நிலை இருக்கின்றது. ஆகையால், இதனைக் களைக்கும் நடவடிக்கையில் அரசு சற்றே அதி-தீவிரம் காட்டி வருகின்றது. இப்பணியில் அரசு மட்டுமின்றி அரசு சாரா மற்றும் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களும் ஈடுபட்டு வருகின்றன.

2021ம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக 1.4 லட்சம் மின்சார வாகனங்களுக்கு ஃபேம்2 திட்டத்தின் வாயிலாக மானியம் வழங்கப்பட்டிருப்பதாக அரசு தகவல் தெரிவித்திருக்கின்றது. டிசம்பர் 16ம் தேதி வரை வழங்கப்பட்ட மானியத்தின் தகவலாகும். ரூ. 500 கோடி வரை மின் வாகனங்களுக்கு மானியமாக அரசு வழங்கியிருப்பதாக தெரிவித்திருக்கின்றது.

இதில், 1.19 லட்சம் இருசக்கர வாகனங்களும், 20,042 எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகங்களும் மற்றும் 580 மின்சார நான்கு சக்கர வாகனங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஒட்டுமொத்தமாக ஃபேம்-2 திட்டத்தின்கீழ் இதுவரை 1.85 லட்சம் மின் வாகனங்கள் பயன் அடைந்திருக்கின்றன.

இந்த நிலையே தற்போது நாட்டில் முன்பு ஏதோ ஒரு மூலையில் மட்டுமே தென்பட்டு வந்த எலெக்ட்ரிக் வாகனங்களை தற்போது சாலையின் அனைத்து பக்கங்களிலும் தென்பட வைத்திருக்கின்றது. ஆம், கடந்த வருடத்தைக் காட்டிலும் நடப்பு 2021ம் ஆண்டில் மின்சார வாகனங்கள் அதிகளவில் சுற்றி திரிய தொடங்கியுள்ளன. குறிப்பாக, எலெக்ட்ரிக் டூ-வீலர்களின் நடமாட்டம் பல மடங்கு உயர்ந்துக் காணப்படுகின்றது. இதற்கு அரசின் மானியம் திட்டம் ஓர் காரணம் என்றால் வாகன உற்பத்தி நிறுவனங்களின் சலுகை மற்றும் சுலப கடன் திட்டங்களும் கூடுதல் காரணங்களாக அமைந்திருக்கின்றன.


Click it and Unblock the Notifications








